சிறப்புரை: ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி
அவர்கள், அமிர்தா பல்கலைக் கழக வேந்தர்,
ஐ.நா சபை, நியூயார்க், ஜூலை 8, 2015

இங்கு கூடியிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது நமஸ்காரம். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஐ.நா. – யூ.என்.ஏ.ஐ. ஆகிய நிறுவனங்களோடும் இம்முயற்சியில் இணைந்து செயல்பட்ட அதிகாரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயல்பாகவே ஆன்மிக சிந்தனையையும் செயலையும் நான் வாழ்வின் விரதமாகக் கொண்டவள். ‘ அத்தகைய ஒருவருக்கு இங்கே என்ன வேலை?‘ என்று இங்கே இருக்கும் சிலருக்காவது தோன்றினால், அதில் வியப்படைய ஏதுமில்லை. ஒருவேளை எனது நம்பிக்கையும் கோட்பாடுகளுமே உங்கள்முன் என்னைக் கொண்டுவந்து நிறுத்தி இருக்கலாம். ஆன்மிகத் தத்துவங்களில் நம்பிக்கை வைத்து வாழ்வதற்கு இடையில், உலகின் எதிர்காலம், இயற்கைப் பாதுகாப்பு, நஷ்டமாகிவரும் அதன் சமநிலை இவற்றைக் குறித்தெல்லாம் நான் மிக ஆழமாகச் சிந்திப்பதுண்டு. இவ்வாறு சிந்திக்கச் சிந்திக்க, பிரபஞ்சத்தின் சமநிலை நிலைத்திருக்க ஆன்மிகம், அறிவியல், தொழில்நுட்பக் கல்வி ஆகிய மூன்றும் ஒன்றாக இணைவது மிகவும் அவசியம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தக் காலகட்டத்தில் நம்மைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்ச்சிகளும் அவை தேவை என்றே அறிவுறுத்துகின்றன.

அறிவியலும் தொழில்நுட்பக் கல்வியும் மனிதனின் கட்டுப்பாட்டிற்குள் அடங்காத அளவுக்கு தோன்றி தினமும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இது எதை நோக்கிச் செல்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. நம்மைச் சுற்றிக் கூர்ந்து கவனித்தால், ஒவ்வொரு புதிய பொருளை வாங்குபவர்களும் அதை உற்பத்தி செய்பவர்களும் எல்லாம் ஒருவித மயக்கத்திற்கு ஆட்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. பெரிய பல்பொருள் அங்காடிக்கு சிறு குழந்தை சென்றால் என்ன நிகழும்? இன்றைய உலகில் மனிதனின் நிலையும் கிட்டத்தட்ட இதுபோல் இருக்கிறது.

இன்று உண்ணவும், குடிக்கவும், கேட்கவும், காணவும், தேவையான எல்லாப் பொருட்களையும் வீட்டில் இருந்தபடியே வரவழைக்கவும் (ஆர்டர் செய்ய) முடியும். நாம் இருக்கும் இடத்திற்கே அதைக் கொண்டுவந்து சில நிமிடங்களுக்குள் தருவார்கள். பொருட்களை விற்கவோ வாங்கவோ கடைக்குப் போகவேண்டாம். கடையைத் தேடி நடக்கவும் வேண்டாம். எல்லாவற்றுக்கும் அதற்குரிய இணையதளங்கள் உள்ளன. இணையதளம் ஒரு புரட்சியை ஏற்படுத்துகிறது. இது மிகவும் நல்லதுதான். இன்று விரலை ஒரு முறை அழுத்தினால் ஒன்றைத் தவிர வேறு எதையும் வாங்கலாம். அதுதான் அன்பு.
நம்மில் பெரும்பாலோர் குளிர்சாதன வசதி உள்ள அறையில் வசிக்கிறோம். ஆனால் இந்த அறையில் படுத்த போதும் உறக்கம் வராமல் தூக்கமாத்திரை சாப்பிடுவோரும் உண்டு; சிலர் அந்த அறையிலேயே தற்கொலை கூடச் செய்து கொள்கின்றனர். நாம் வசிக்கும் அறைதான் நமக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்றால் இந்நிலை வரவேண்டிய அவசியமில்லை. அப்படியானால் மகிழ்ச்சி என்பது மனதையும் சார்ந்திருக்கிறது என்பதே உண்மை. மனதைக் குளுமையாக்கும் (ஏர்கண்டிஷன்) கல்வியே ஆன்மிகக் கல்வியாகும்

இன்று நாம் எங்கு சென்றாலும் இண்டர்நெட் தொடர்பு கிடைக்க வேண்டும் என்று தவிக்கிறோம். ஆனால் இண்டர்நெட் தொடர்பு கிடைத்தால் மட்டும் போதாது; இன்னர்நெட்டின்( மனதின்) தொடர்பையும் சரியாக்க வேண்டும். அகத்தையும் புறத்தையும் சமமாகப் பயன்படுத்தக் கற்பிப்பதே ஆன்மிகக் கல்வியாகும். கடலில் நீந்தக் கற்றவன் அலைகளில் நீந்தி மகிழ்வான்; அப்படிக் கற்காதவனோ நீரில் மூழ்கி இறப்பான்.

மனித குலத்திற்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை என்ன? வாழ்வின் வேகமான ஓட்டத்திலும் பரபரப்பிலும் அகப்பட்டு அவன் நன்னெறிகளை அடியோடு மறக்கிறான்; இல்லாவிட்டால் அதை அற்பமாகக் கருதுகிறான். தனிமனிதன் முதல் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் வரை தனியாகவும் கூட்டாகவும் செய்யும் அதர்மங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் நாம் நியாயம் கற்பிக்க முயலுகிறோம். அதை சமுதாயத்தின் மனங்களில் சுமத்தவும் செய்கிறோம்.

பழங்காலம் முதலே உலகில் பிரச்னைகள் இருந்தன. போரும் போராட்டமும் நிறவெறியும் இனவேறுபாடுகளும் சமுதாய, குடும்பக் கலகங்களும் காணப்பட்டன. ஆனால், நம்முடைய முன்னோர்களுக்கு வாழ்வைக் குறித்த வேறுபட்ட கண்ணோட்டம் இருந்தது. மனிதன், இயற்கை ஆகிய இரண்டையும் ஒன்றாக இணைத்து அவற்றைச் சமநிலையில் இருக்கச் செய்யும் கண்ணுக்குப் புலப்படாத சக்தி ( இறை ஆற்றல் ) இந்த மூன்று பிரிவுகளையும் ஏற்றுக் கொண்டு அவர்கள் வாழ்ந்தனர்.

நமது முன்னோர்களின் கண்ணோட்டமானது தனிமனிதன், பிரபஞ்சம் இவற்றின் வெளித்தோற்றத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு வாழ்வதாக இருக்கவில்லை. தனிமனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் ஆதாரமான , அவற்றை இணைத்து நிறுத்துகின்ற கண்ணுக்குப் புலப்படாத சக்தியையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அந்த சக்தியை வாழ்வின் முக்கிய அங்கமாகக் கருதினர். பல வடிவங்களிலும் நிறங்களிலும் காணப்பட்டாலும் மனித குலமும் இயற்கையும் எல்லா உயிரினங்களும் ஒரே நூலில் கோர்க்கப் பட்ட முத்துமாலையைப் போன்றது என்று அவர்கள் நம்பினர். அதனால் அவர்கள் தங்கள் வாழ்வில்,‘ பங்கு கொள்வது, பங்கிடுவது, ஆழ்ந்து சிந்திப்பது, முன்னெச்சரிக்கையுடன் இருப்பது போன்றவற்றிற்கு மிக உயர்ந்த இடத்தை அளித்தனர். அந்தப் பண்பாட்டை நாம் நடைமுறைக்கு ஒவ்வாதது- அநாகரிகமானது என்றெல்லாம் முத்திரை குத்தி ஒதுக்கிவிட்டோம்.

மனித வாழ்வின் எந்தப் பிரிவை எடுத்துப் பார்த்தாலும், ஆடம்பரத்திற்கு நடுவில் வயிற்றில் நெருப்புடன் வாழ்பவர்களையே நாம் அதிகமாகக் காண்கிறோம். பேராசையானது மனிதனைக் குருடனாக ஆக்கி இருக்கிறது. அதன் பலனாக,மனிதத்தன்மையற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. மன வருத்தமும்,மன உளைச்சலும் மனிதனை இதுவரை இல்லாத எல்லா புதிய நோய்களுக்கும் அடிமையாக ஆக்குகிறது.

எவ்வழியில் செல்லவேண்டும் என்பது புரியாமல் ஒரு நாற்சந்தியில் திகைத்து நிற்கும் ஒரு மனிதனது நிலையில் தான் இன்றைய மனிதகுலம் உள்ளது. இதுவரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை மட்டும் சார்ந்து மனிதன் வாழ்ந்தான். ஆனால் இன்றைய குறிப்பிட்ட சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்து ஆன்மீக சிந்தனையையும் அவற்றுடன் சேர்த்து சோதனை செய்து பார்ப்பதில் தவறில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

இடையிடையே நிகழும் இயற்கைச் சீற்றங்கள், பயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள காலநிலை மாற்றங்கள், உலகம் வெப்பமயமாதல் போன்றவற்றால் பூமியிலும் இயற்கையிலும் பலவித மாற்றங்கள் ஏற்படுகிறது. அவற்றை எல்லாம் மனிதனின் முயற்சியால் மட்டும் தடுத்து நிறுத்திவிட முடியுமா என்பதை நன்கு சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பழங்கால மனிதர்கள் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்தனர். ஒரு மரக்கன்றை நடவும், வெட்டவும் நல்ல நாள் பார்ப்பார்கள். மரத்தை வெட்டுவதற்கு முன்பு, முதலில் பூஜை செய்து, மரத்திடம் அனுமதி கேட்பார்கள். பின்னர் “நாங்கள் செய்யும் தவறைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.எங்களது தேவைக்காகவே உன்னை வெட்டுகிறோம்” என்று மன்னிப்பு கேட்பார்கள். அதன்பிறகுதான் வெட்டுவார்கள். ஆனால் இன்றோ மரக்கன்றுகளை நடுவதில்லை என்பது மட்டுமல்ல; கணக்கில்லாமல் மரங்களையும், இயற்கையையும் ஒரு நன்றியில்லாமல் அழிக்கவும் செய்கிறோம்.

.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் கை அல்லது காலில் காயம்பட்டால், காயத்தில் சாணத்தைப் பூசிக் கட்டுவார்கள். காயம் விரைவில் ஆறிவிடும். ஆனால், இன்று அப்படிச் செய்தால் காயம் சீழ்பிடித்துவிடும். ஒரு வேளை அதற்கான ஊசி போடவில்லையெனில் இறந்து போவதற்குக் கூட வாய்ப்பு உள்ளது. அன்று மருந்தாக இருந்த சாணம் இன்று விஷமாக ஆகி இருக்கிறது. இயற்கை அந்த அளவு அசுத்தமாகி உள்ளது.

இப்பிரபஞ்சத்திற்கு ஒரு தாளம் (சமநிலை) உண்டு. இந்த உலகிற்கும் இதிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் இடையில் பிரிக்கமுடியாத பந்தம் உண்டு. ஒன்றுகொன்று பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு ‘நெட் ஒர்க்’ போன்றது இவ்வுலகம். நால்வர் பிடித்து நிற்கும் ஒரு வலையின் ஒரு மூலையில் சிறிய அசைவு ஏற்பட்டாலும், அதன் அசைவு வலையின் எல்லா முனைகளிலும் பிரதிபலிக்கிறது. அது போல இப்பிரபஞ்சத்தில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ நாம் அறிந்தோ அறியாமலோ செய்யும் அனைத்து செயல்களும் பாதிப்பை ஏற்படுத்தும்.

முதலில் அவர்கள் மாறட்டும். நாம் பின்னர் மாறுவோம் என்றால் நடக்காது. அவர்கள் மாறாவிட்டாலும் நாம் மாறலாம் என்றால் உலகில் மாற்றம் கொண்டு வர இயலும். நம்மால் என்ன செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். அதனால் அம்மா எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். “அன்னையர் தினமும், தந்தையர் தினமும்” கொண்டாடுவதுபோல், இயற்கையை மரியாதை செய்யவும், அதை வழிபடவும் ஒரு நாள் இருக்கவேண்டும். நாம் எப்பொழுதும் இயற்கையைச் சுரண்டிக் கொண்டே இருக்கிறோம். அதற்குப் பதிலாக இந்தப் புத்தாண்டு முதல் ஒவ்வொருவரும் வீட்டிற்கு ஒரு மரக்கன்று வைத்து வளர்ப்பது நல்லது என்று அம்மா விரும்புகிறேன்.

இன்று வாழ்வில் நன்னெறிகளுக்கு மதிப்பு குறைந்துவிட்டது,அது நடைமுறைக்கு பொருந்தாது என்றும் தேவையற்றதென்றும் மனிதன் நினைக்கிறான். மனிதனும் இயற்கையும் கைகோர்த்து சென்றாலே இவ்வுலகு மற்றும் பிரபஞ்சத்தின் தாளகதி உண்டாகிறது. இன்றைய மனிதன் அவனின் கண்டிபிடிப்புகளுக்கே முக்கியத்துவம் நல்குகிறான். எந்த இயந்திரமானாலும் துருப்பிடிக்காமல் நன்றாக ஓடவேண்டுமெனில் அதற்கு எண்ணெய் விடவேண்டும். அதுபோல் நமது வாழ்வும் நன்றாக அமைய நன்னெறிகள் அவசியமாகும். ஆன்மீகத்தின் மூலமாக மட்டுமே நன்னெறிகள் உண்டாகும் என்று அம்மா நினைக்கிறேன்

உயிர்வாழ்வதற்கான கல்வி; வாழ்விற்குரிய கல்வி – இவை இரண்டும் இரண்டாகும். உயிர்வாழ்வதற்கு அதாவது, வயிற்றுப்பிழைப்புக்கு உள்ள கல்வி. மருத்துவராக வேண்டும்; எஞ்ஜினியராக வேண்டும்; கல்லூரியில் படிக்கவேண்டும். இரண்டாவது, வாழ்விற்குரிய கல்வியாகும். இதை அறியவேண்டுமெனில், ஆன்மிகம் நமக்குப் புரியவேண்டும். அதாவது, உலகின் இயல்பும், மனதின் இயல்பும், உணர்ச்சிகளையும் பற்றிய அறிவு வேண்டும். நமது கல்வியின் லட்சியம் எந்திரங்களின் மொழியை மட்டும் புரிந்துகொள்ளும் ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்குவது அல்ல என்பதும் நமக்குத் தெரியும். கல்விப் பயிற்சியால் முக்கியமாக நாம் பண்பாட்டைப் பெறவேண்டும். மனிதன் நாகரிகமானவனாக இருப்பதற்கு கல்வி அவசியம் எனபதில்லை..


கடலில் நீந்தக் கற்றவன் அலைகளில் நீந்தி மகிழ்வான்; அப்படிக் கற்காதவனோ நீரில் மூழ்கி இறப்பான். இது போன்றதுதான் ஆன்மிக வாழ்வும், வருவதை மகிழ்வுடன் எதிர்கொள்ளும் ஒரு மனோபாவத்தை உருவாக்குவதே ஆன்மிகம்.
ஆன்மீகமும் ஒரு அறிவியலாகும்; அலட்சியம் செய்யமுடியாத ஒரு பிரிவாகும். அறிவியல் உலகம் புறம் சார்ந்த ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்துவரும் பிரபஞ்ச ரகசியங்களை, கடினமான ஆத்ம விசாரணையின் பாதைகளின் மூலம் கண்டறிந்தவர்களின் வார்த்தைகளும் அனுபவங்களுமே ஆன்மீக நூல்களில் விவரிக்கப்படுகிறது. கணிதம், இயற்பியல், பகுத்தறிவு சிந்தனை ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி பரிசோதித்துப் பார்த்தால்,ஒருவேளை அதன் சிறப்பைப் புரிந்துகொள்ள முடியாமல் போகும். ஒரு குழந்தையின் மனதிலும் , கண்ணிலும் தோன்றும் ஆச்சர்யம் மற்றும் நம்பிக்கை எனும் கண்ணால் ஆன்மீகத்தை நாம் அணுக வேண்டும். வல்லுநர்களும் பிரசித்தி பெற்றவர்களும் விஞ்ஞானிகளும் இப்பிரபஞ்சத்தை விசித்திரங்கள் நிறைந்த ஒரு ஆச்சர்யமாகவே கண்டனர். அவர்களின் ஆராய்ச்சிகளுக்கு களங்கமற்ற ஒரு குழந்தையின் அறிவும் ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தது. உண்மையில் பல உலகியல் விஞ்ஞானிகளும் அவர்களின் வாழ்வின் இறுதிகட்டத்தில் அத்தகு நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். ஆனால், அதற்குள் காலம் கடந்துவிட்டது. அத்தவறு இப்போது நம்மை வழிநடத்தும் அறிவியல் உலகிற்கு ஏற்படாமல் இருக்கட்டும் என்று பிரார்த்திப்போமாக.

சர்க்கரையும் மணலும் கலந்திருந்தால் ப்குத்தறிவுச் சிந்தனையால் அதைப் பிரித்தெடுக்க முடியாது. ஆனால் அதை எறும்பு எளிதாகப் பிரித்து விடுகிறது . அது இதயத்தின் மொழியாகும். கருணையின் மொழியாகும் என்று எனக்குத் தோன்றுகிறது.

அம்மா பிறந்து வளர்ந்த கிராமத்தில் பலரும் அன்றாடம் கூலிவேலைக்குச் சென்று வாழ்பவர்கள் ஆவர். சிலருக்குச் சிறிய வயதில் இதயநோய் வந்து வால்வை மாற்ற நேர்ந்தது. பலருக்கு மாரடைப்பு வந்தது. ஆனால், அன்று வெளிநாடுகளிலிருந்து வாங்குவதற்குப் போதுமான பணம் அவர்களிடம் இருக்கவில்லை. இதனால்,70 வயதுவரை வாழவேண்டியவர்கள் 30,40 வயதில் இறந்தனர். இதை எல்லாம் கண்டபோதுதான் அம்மாவுக்கு மக்களுக்கு சேவை செய்வதற்குத் தேவையான ஆராய்ச்சிகளின்மீது விருப்பம் தோன்றியது. குறைந்த விலைக்கு இப்படிப்பட்ட பொருள்களை இங்கேயே தயாரிக்க முடிந்திருந்தால், எத்தனை ஏழைகளின் உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம் என்பதுதான் இதன் காரணமாகும்.

உலகெங்குமுள்ள நாடுகளில் குழந்தைச் சாவு இன்று ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது, பாரதத்தில் பல கிராமங்களிலும் நாங்கள் இதைப்பற்றி ஆராய்ச்சி நடத்தியபோது பல பெண்கள் ஒரு குறிப்பிட்ட பச்சிலையைச் சாப்பிடுவதாகச் சொன்னார்கள். எதற்காக அந்த இலையை சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள். வீட்டிற்கு கணவரின் வருமானம் மட்டுமே உள்ளது. அதுவும் எப்போதாவதுதான் கூலிவேலை கிடைக்கும். அந்தப் பணத்தில் மிகக் குறைவான உணவே தயாரிக்க முடியும். அதை நாங்கள் எங்கள் கணவருக்குக் கொடுப்போம். பசி எடுக்காமல் இருப்பதற்காக நாங்கள் இந்த குறிப்பிட்ட பச்சிலையைச் சாப்பிடுவோம் என்றனர். கருவுற்றிருக்கும் வேளையிலும் அவர்கள் அப்படித்தான் செய்கிறார்கள். சத்துள்ள உணவு சிறிதும் கிடைக்காமல் இந்தப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் உள்ளவர்களாக எப்படி இருப்பார்கள்?

சில கிராமங்களில் உள்ள பெண்கள்,கையில் கிடைக்கும் பணத்தை எல்லாம் கணவர் குடித்தும், பிற வழிகளிலும் வீண்செலவு செய்கிறார்கள். குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து எங்களை அடிப்பார்கள் . இப்படியாக இருக்கும் உணவைக்கூட சாப்பிட அவர்கள் விடுவதில்லை என்று சொல்கிறார்கள்.

வேறு சில கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பெரும்பாலானோர் கல்வி அறிவற்றவர்கள். அரசாங்கத்திலிருந்து சிறிய தொகை கிடைக்கிறது. ஆனால், மிகக் குறைவான இந்தப் பணத்தையும் கணவர் போலியாகக் கையொப்பமிட்டு வாங்கிக்கொள்வார்கள் என்றனர். இவற்றையெல்லாம் அறிந்தபிறகுதான் அம்மா, கிராமங்களில் உள்ள பெண்களுக்கான கல்வித் திட்டத்தை ஆரம்பித்தேன். அவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் கிடைத்த் அனுபவத்தின் அடிப்படையில் தான் பல்வேறு உதவிகளையும் செய்ய முடிந்தது.

செல்வந்தருக்கும்,ஏழைகளுக்குமிடையே உள்ள இடைவெளி இன்றைய உலகின் சாபமாகும். இந்த இடைவெளி நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஒருபுறம் உயர்ந்த குன்றும்,மறுபுறம் பாதாளமும் என்பது போல்,இன்றைய உலகின் செல்வ நிலையில் வேறுபாடு உள்ளது. ஆடம்பர வாழ்வு வாழும் ஒரு பிரிவினர்; ஒருபுறம் அதே சமயம் பசியாலும் வலியாலும் துன்பத்தில் வாடும் மற்றொரு பிரிவினர். இந்த இடைவெளியை நீக்குவதற்கு இனியும் நாம் தாமதித்தால் அது கால அளவில் மிகப்பெரிய கொடுமையான தெருச்சண்டைகளுக்கு வழிவகுக்கும். எனவே இவர்களுக்கிடையில் அன்பு மற்றும் கருணை எனும் பாலத்தை கட்டவேண்டும்

மனிதனிடம் உள்ள எல்லா நற்குணங்களையும் அழிக்கக் கூடிய அவனது எல்லா திறமைகளையும் அடியோடு நாசம் செய்யும் பெரிய விபத்தாக வறுமை உள்ளது,எல்லாவித நற்பண்புகளும் அழிவதற்கு அது காரணமாகிறது.

ஒரு வெளிநாட்டில் பல குழந்தைகள் தரிசனத்திற்கு வந்தனர். அவர்களில் பலர் அம்மாவுக்கு ஓவியம் வரைந்து கொண்டுவந்தனர். சமுதாயத்தின் கீழ்நிலையில் உள்ள குடும்பங்களைச் சார்ந்த சில குழந்தைகள் வரைந்த ஓவியங்களில் போர்க்கப்பல்களும் அணுகுண்டுகளும் காணப்பட்டன. ஒரு குழந்தை கிறிஸ்து, மேரி சித்திரங்களை வரைந்திருந்தது. ஆனால், அவர்களின் கைகளிலும் துப்பாக்கி வரையப்பட்டிருந்தது. “ஏன் இப்படி வரைந்தாய்?” என்று கேட்டபோது அக்குழந்தை, “பசிக்கும்போது அவர்களுக்கு உணவு வேண்டாமா? துப்பாக்கி கையில் இருந்தால், அதைக்காட்டி மிரட்டி பணம் வாங்கலாம்” என்றது.

“மகனே, துப்பாக்கியைக் காட்டினால்தான் பணம் கிடைக்குமா?” என்று அம்மா கேட்டபோது அவன், “என் தந்தை அப்படித்தான் செய்கிறார்” என்றான். “அப்பா ஆரோக்கியமாக இருக்கிறார் அல்லவா? வேலை செய்து பணம் சம்பாதிக்கலாமே” என்று அம்மா கேட்டேன். அவன், “என் தந்தைக்கு வேலை செய்வதற்கான ஆரோக்கியம் இருக்கிறது. பல நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றார். ஆனால், தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்பதால், யாரும் தந்தைக்கு வேலை கொடுக்கவில்லை. அங்கே அழகுள்ளவர்களை மட்டுமே வேலைக்கு எடுப்பார்கள். அதனால் இப்போது என் தந்தை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியும், மக்களிடமிருந்து பணம் பெற்றும்தான் எங்களை வளர்க்கிறார்” என்றான். இதுபோல், தனது அனுபவம், இல்லாவிடில் கண்டு வளர்ந்த காட்சிகள் குழந்தைகளின் மனங்களின் ஆழத்தில் பதிகிறது. ஏழ்மையாலும், தாழ்வுணர்ச்சியாலும் சிறுவயதிலேயே குழந்தைகளின் மனங்களில் ஆக்கிரமிப்பு இயல்பு வளர்கிறது. நாளடைவில், சமூகத்தில் நன்னெறிகள் அழிகின்றன. இங்குதான் அன்பு ம்ற்றும் கருணையின் அவசியம் நமக்குப்புரிகிறது.

ஆன்மிகத்தைக் குறித்து பலர் மிக அற்பமாகப் பேசுகிறார்கள். ஆன்மிகம் என்றால் என்ன? கருணையை செயல்முறைப்படுத்துவதுதான் சரியான ஆன்மிகம். ஆன்மிகத்தின் ஆரம்பமும், அதன் முழுமையும் கருணையில்தான் அடங்கி இருக்கிறது. கருணை என்ற ஒரு வார்த்தையை நமது செயலில் கொண்டுவந்தாலே இவ்வுலகில் இன்று நடமாடும் 90 சதவிகித பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்பட்டுவிடும்.

எந்த விஷயமாக இருந்தாலும் அதைப்பற்றிய சரியான அறிவு அளிப்பது அவசியமாகும். சர்க்கரை நோய் உள்ள ஒருவர் மருந்துடன், இனிப்புப் பொருள்களையும் சாப்பிட்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். ஆக, மருந்தைவிட அவருக்கு, நோய் பற்றிய சரியான அறிவை அளிக்கவேண்டும். உதாரணமாக, நாங்கள் கிராமங்களைத் தத்தெடுத்தபோது, அங்குள்ள ஒருவரிடம் பணத்தைக் கொடுத்து, கழிவறைகள் கட்டிக்கொடுக்க ஏற்பாடு செய்தோம். அவர் கழிவறையைக் கட்டிக்கொடுத்தார். நாங்கள் கிராமத்தைப் பரிசோதிக்கச் சென்றபோது, கிராமவாசிகள் திறந்தவெளியில் மலஜலம் கழித்தனர். அதுமட்டுமல்ல; ஒரு பூஜை அறையைப்போல், கழிவறையைத் திறந்து பார்ப்பார்கள்; சுத்தம் செய்வார்கள்; பின்னர் அதை மூடிவைப்பார்கள். “திறந்த வெளியில் மலஜலம் கழித்தால், அது நம் உணவை அசுத்தமாக்கும். பின்னர், அதிலிருந்து குடல்புழுவும், பிற கிருமிகளும் நமக்குப் பல நோய்களை உண்டாக்கும்” என்பதை அவர்களுக்குப் புரியவைத்தபோது, அவர்கள் கழிவறையைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இவ்வாறு, ஒரு விஷயத்தைப் பற்றிய அறிவை அளிக்காத தொண்டு முழுமை அடையாது. ஞானமில்லாத கருணை நமக்கும், மற்றவர்களுக்கும் சமமான தீயபலனை அளிக்கும். நாம் செய்யும் சேவை பலனளிக்கவேண்டுமெனில், விவேக புத்தி அவசியமாகும்.

ஒரு மீன், நதியில் நீந்தி விளையாடியது. நீர் குடிக்கவந்த ஒரு குரங்கு மீனைக் கண்டது. “பாவம், மீன் நீரில் அகப்பட்டுக்கொண்டு தப்ப வழியின்றி வருந்துகிறது. அதை எப்படியாவது காப்பாற்றவேண்டும்” என்று குரங்கு நினைத்தது. மீன்மீது கருணை தோன்றிய குரங்கு, கைகளால் மீனைப் பிடித்துக் கரையில் போட்டது. பாவம் அந்த மீன். மூச்சுவிட முடியாமல் துடிதுடித்து இறந்துவிட்டது. மீனைக் கரையில் போடுவதற்கு முன் அந்தக் குரங்கு மீனின் மனநிலை என்ன என்பதை அறிய முயன்றிருந்தால்…! “உன்னை நான் நீரிலிருந்து வெளியில் எடுக்கவா?” என்று கேட்டிருந்தால்…! என்று ஒருவேளை அந்த மீன் பிழைத்திருக்கக்கூடும். “ஐயோ, நீரிலிருந்து எடுத்தால் நான் செத்துவிடுவேன்” என்று மீன் சொல்லியிருக்கும். ஞானமில்லாத கர்மமானது, குரங்கு மீனைக் காப்பாற்ற முயன்றது போல் ஆகிவிடும். நம்முடைய செயல்களில் மனமும், புத்தியும் இணையவேண்டும்.

அம்மாவின் அனுபவங்களில் இருந்து ஒன்றைக் கூறுகிறேன். ஒருமுறை ஒருவர், 10 வயதுள்ள சிறுவனை அம்மாவிடம் ஒப்படைக்கக் கொண்டுவந்தார். தந்தை இறந்தபின், அவனது தாயும், 13 வயதுள்ள சகோதரியும் வீட்டிற்கு அருகிலுள்ள தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்தனர். தாயின் சிறுநீரகத்தில் நோய் பாதிக்கவே, அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. கூலி மிகவும் குறைவாக இருந்தபோதும், சகோதரி மட்டும் வேலைக்குச் சென்றுவந்தாள். அந்த வருமானத்தில், தாய்க்குத் தேவையான மருந்து வாங்கவும், மூவரின் பசியைப் போக்கவும் முடிந்தது.

அவ்வேளையில், சிறுவர்கள் வேலை செய்வதற்கு எதிராகப் புதிய சட்டங்கள் வந்தன. அதன்படி, தீப்பெட்டித் தொழிற்சாலையின் உரிமையாளரைக் காவலர்கள் கைது செய்தனர். தொழிற்சாலை மூடப்பட்டது. அங்கே வேலை செய்திருந்த சிறார்களை எல்லாம் வீட்டிற்குத் திருப்பி அனுப்பினர். வாழும் வழி அடைபட்ட ஏமாற்றத்தில் ஒருநாள், மகன் பள்ளிக்குச் சென்றிருந்த வேளையில், தாயும் மகளும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டனர். இங்கே, சிறுவர்கள் வேலை செய்வதற்கு எதிராக சட்டம் செயல்பட்டது. ஆனால், அங்கிருந்து வேலையை இழந்து வெளியேறிய சிறார்களை நம்பி வாழ்ந்திருந்த குடும்பங்களை மறந்துவிட்டனர்.

மனதையும் புத்தியையும் மட்டும் பயன்படுத்தி, பிரச்னைகளுக்கு பரிகாரம் காண முயலும்போது, பிரச்னையின் ஒரு பக்கத்தை மட்டுமே பெரும்பாலும் நாம் காண்கிறோம். பிரச்னைகளுக்கான பரிகாரம் தேடும் முயற்சிக்கு இடையில், ஒரு பக்கத்தை மட்டும் கண்டு, மறு பக்கத்தை காண இயலாமலும் போகிறது.

“இந்த இடத்தில் ஆன்மிகத்தின் அவசியம் என்ன?” என்று கேட்பவர்கள் உண்டு. அவசியமானது, ஆடம்பரமானது – இவை இரண்டையும் நன்கு புரிந்துகொள்ளும் விவேகத்தை அளிப்பதுதான் ஆன்மிகம். உதாரணமாக, நேரத்தை அறிவதற்கு நமக்கு ஒரு கைக்கடிகாரம் தேவை. 100 ரூபாய் கைக்கடிகாரத்தை வாங்கினாலும், 5000 ரூபாய் கைக்கடிகாரத்தை வாங்கினாலும் நேரத்தை அறிய முடியும். அப்படியிருக்க, குறைந்த விலையிலுள்ள கைக்கடிகாரத்தை வாங்கி, மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்தினால், அது எவ்வளவு சிறந்த செயலாக இருக்கும்! நூறு குடங்களில் சூரியன் பிரதிபலித்தாலும், சூரியன் ஒன்றே ஆகும். இதுபோல், அனைவரிலும் இருக்கும் ஆத்மா ஒன்றே ஆகும். இந்த மனோபாவத்தின் மூலம் நமக்குப் பிறரையும் நினைத்துப் பார்க்கக்கூடிய மனம் உண்டாகும். தனது வலது கை வலிக்கும்போது, இடது கை உடனே அதைத் தடவிவிடச் செல்வதுபோல், பிறரை நாமாகக் கண்டு அன்பு செய்யவும், தொண்டு செய்யவும் கூடிய மனோபாவம் நம் அனைவருக்கும் உண்டாகட்டும்.

இன்று உலகில் இருவகையில் வறுமையை அனுபவிப்பவர்கள் இருக்கிறார்கள். உண்ண உணவும், இருக்க இடமும், உடுக்க உடையும் இல்லாமல் வறுமையை அனுபவிப்பவர்கள் ஒருவகை. அன்பும், கருணையும் கிடைக்காமல் வறுமையை அனுபவிப்பவர்கள் மற்றொரு வகை. இவற்றில் இரண்டாவது வகை வறுமையையே முதலில் கவனிக்க வேண்டும். ஏனெனில், மனதில் அன்பும் கருணையும் இருந்தால், உணவும், உடையும் இருப்பிடமும் இல்லாமல் கஷ்டப்படுபவர்களை நாம் நிறைந்த மனதுடன் அன்பு செலுத்தவும், உதவவும் செய்வோம்.

ஒரு கிராமத்தில் ஒரு மகானின் அழகான சிலை இருந்தது. இரு கைகளையும் முன்னால் நீட்டியபடி நிற்கும் சிலைக்குக் கீழே ஒரு கல்லில் “என் கைகளுக்குள் வாருங்கள்” என்று செதுக்கி வைத்திருந்தது. காலப்போக்கில் அச்சிலையின் கைகள் உடைந்துவிட்டன. கிராம மக்கள் அச்சிலையை மிகவும் விரும்பினர். அதன் கைகள் உடைந்ததைக் கண்டு அவர்கள் வருந்தினர். சிலர் அச்சிலையை அங்கிருந்து எடுத்துவிடுவது நல்லதெனக் கூறினர். சிலைக்குப் புதிய கைகளை வைத்தால் போதுமென வேறு சிலர் கூறினர். அப்போது அங்கு இருந்த ஒரு முதியவர், “சிலையை மாற்றவோ, அதற்குப் புதிய கைகள் வைக்கவோ வேண்டாம்” என்றார். கிராமவாசிகள், “அது எப்படி? சிலையின் கீழே எழுதி இருப்பதைப் பார்க்கவில்லையா? என் கைகளுக்குள் வாருங்கள் என்று எழுதி இருக்கிறதே!” என்றனர். முதியவர், “அது பரவாயில்லை. அதன் கீழே நீங்கள், “என் கை உங்களின் வழியாக” என்று எழுதிச் சேர்த்தால் போதுமானது” என்றார்.

நாம் இறைவனின் கரங்கள் ஆகவேண்டும்; கண்கள் ஆகவேண்டும்; காதுகள் ஆகவேண்டும். நமது ஊக்கமும் ஆற்றலும் வீரியமும் அவராக வேண்டும். அப்போது பயமும் சந்தேகமும் பாவமும் நம்மைத் தீண்டாது.

சூரியனுக்கு மெழுகுவத்தியின் தேவை இல்லை. அதுபோல் இறைவனுக்கு நம்மிடமிருந்து எதுவும் தேவை இல்லை. இவ்வுடல் என்றாவது ஒருநாள் அழியும். அப்படியிருக்க, அது துரு பிடித்துப் போவதை விட தேய்ந்து போவதல்லவா நல்லது? இல்லாவிடில், புழுவுக்கும் மனிதனுக்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்கிறது? அதுவும் உண்டு, உறங்கி, இனப்பெருக்கம் செய்து இறுதியில் இறந்தும் போகிறது. நாம் இதிலிருந்து வித்தியாசமாக என்ன செய்கிறோம்? நாம் இயற்கையை மேலும் மேலும் சுரண்டிக் கொண்டே இருக்கிறோம். அதைப் புரிந்து கொண்டு நம்மால் சமுதாயத்திற்கு என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க் முடியும்.

அம்மா பிறந்த கிராமத்தில், முன்பு 1000 குடும்பங்கள் குடி தண்ணீர் பிடிப்பதற்கு ஒரு குழாய்தான் இருந்தது. தண்ணீர் பிடிப்பதற்கு நாள் முழுவதும் தவம் செய்வது போல் காத்திருக்க வேண்டும். அப்படியே காத்திருந்தாலும், ஒரு குடம் தண்ணீர் கிடைப்பதே பெரிய விஷயம். சிலவேளைகளில் ஒரு துளி நீர் கூடக் கிடைக்காது. அப்படி எல்லாம் வாழ்ந்த காரணத்தால், பயணத்திற்கிடையே எங்காவது குழாய் உடைந்தோ, பிற காரணங்களாலோ நீர் வீணாவதைக் கண்டால், என் உடலில் இருந்து ரத்தம் வடிவது போல் தோன்றும். தண்ணீர் வீணாவதை எப்படித் தடுப்பது? யாரை அழைத்தால் காரியம் நடக்கும் என்றெல்லாம் சிந்திப்பேன். வசதிகள் எதுவும் இல்லாமல் வளர்ந்ததாலும், பிறரது கஷ்டங்களை நேரடியாகக் காண முடிந்தது. விழிப்புணர்வு ஏற்பட்டது. .

ஒரு தாய் தனது குழந்தையை சுமார் இரண்டு வயதுவரை ம்ட்டுமே ம்டியில் இருத்தி வளர்ப்பாள். ஆனால் இந்த பூமித்தாய் நம்மை வாழ்நாள் முழுவதும் சுமக்கிறாள். அந்தத் தாய்க்குச் செய்ய வேண்டிய நன்றிக் க்டனை நாம் மறக்கக் கூடாது. இந்தத் தத்துவத்தைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு விஷ்யத்திலும் கவனத்தைக் கொண்டு வ்ரவேண்டும்.

அம்மாவுக்கு ஓர் ஆசை உள்ளது. அதாவது ஒவ்வொரு பல்கலைக் கழகத்தில் இருந்தும் மாணவர்களை இரு மாதங்களாவது கிராமங்களுக்கு அனுப்பி, அங்குள்ள பிரச்னைகளை நேரடியாகக் கண்டு புரிந்துகொண்டு, அதைப் பற்றிய விவரங்களை ஒரு விஷயமாக (அறிக்கை சமர்ப்பித்தல்) எழுத முயற்சிக்க வேண்டும். இதன்மூலம் நமக்கு ஏழைகளுக்கு உதவவும், இளமையான மனங்களில் கருணையை விழிப்புறச் செய்யவும் வேண்டும்.
இன்றைய பல்கலைக் கழகங்கள், அங்கே வேலை செய்யும் ஆராய்ச்சி மாணவர்களின் வளர்ச்சியையும் பதவி உயர்வையும் அவர்கள் எவ்வளவு நிதி கொண்டு வந்தார்கள்; எத்தனை பாடம் சம்பந்தமான அறிக்கைகளை சமர்ப்பித்தனர்; அறிவு பூர்வமாக அவர்கள் எவ்வளவு சிறப்பாகப் பணியாற்றினர் என்பதை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கின்றன. அத்துடன் சமூகத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு அது எவ்வளவு உதவியது? அவர்களுக்கு நம்மால் எந்த அளவு சேவை செய்ய இயலும்? எனபதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அப்படிச் செய்தால் தங்கத்திற்கு நறுமணமும் சேர்ந்தது போல் இருக்கும்.

அறிவியலை ஆன்மிகத்திலிருந்து வேறுபடுத்தியதுதான் கடந்த சில நூற்றாண்டுகள் மனித சமூகத்திற்குச் செய்த மிகப் பெரிய அபராதமாகும். ஒன்றாகக் கைகோர்த்துப் போகவேண்டிய விஞ்ஞானத்தின் இரு முக்கியக் கிளைகளை வேறுவேறாகப் பிரித்து, நவீன அறிவியலின் தலைவர்கள் என்றும் மத நம்பிக்கைகளின் பிரதிநிதிகள் என்றும் முத்திரை குத்தி விட்டனர். மனித குலம், சகல உயிரினங்கள், இயற்கை மற்றும் நாம் வசிக்கும் இந்தப் பூமியின் எதிர்காலத்தையும் அதன் நிலைப்பாட்டை நிர்ணயிக்கும் பருவ, கால மாற்றங்களும், சமீபத்தில் உலகின் பல பாகங்களில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களும் எல்லாம் இவ்வாறு வேறுபடுத்தியதன் தீய விளைவுகளாகும். ஆன்மிகமும் அறிவியலும் இணைந்து சென்றால்தான் உறுதியாக மாற்றத்தைக் கொண்டு வரமுடியும்

நமது வாழ்க்கையெனும் மரம் அன்பெனும் மண்ணில் உறுதியாக நிற்கட்டும்; நற்செயல்கள் அதன் இலைகளாகட்டும்; கருணை மிக்க சொற்கள் அதன் மலர்களாகட்டும்; அமைதி அதில் தோன்றும் பழங்களாகட்டும். அன்பால் ஒன்றாக இணைந்த ஒரு குடும்பமாக உலகம் வளர்ந்து பரந்ததாகட்டும். இவ்விதமாக அமைதியும் சமாதானமும் நிறைந்து காணும் ஒரு உலகம் நமது சொந்தமாகட்டும் என்று அம்மா பரமாத்மாவிடம் சமர்ப்பிக்கிறேன்.

ஒரு செயலின் வெற்றிக்கு மூன்று விஷயங்கள் ஒன்று சேர வேண்டுமென்று கூறுவர். அவை காலம், முயற்சி, கடவுள் அருள் என்பவையே. நாம் எங்காவது வெளியூர் பயணத்திற்குச் செல்லும்போது சரியான நேரத்தில் புறப்பட்டாலும் விபத்துக்குள்ளாகி சிலவேளை பயணம் தடை படலாம். அல்லது விபத்தில்லாமல்
விமான நிலையத்தை அடைந்தாலும் கால நிலை, இயற்கைச் சீற்றம் அல்லது எந்திரக் கோளாறு காரண்மாக பயணம் தடை படலாம். காலமும் முயற்சியுமிருந்தால் கூட இறை அருள் இல்லாவிட்டால் தடை ஏற்படும்.
எனவே இந்த மூன்றும் இருந்தால் ம்ட்டுமே ஒரு செயல் முழுமை அடையும். அவ்வாறு அருள்கிடைக்க நாம் நல்ல கர்மங்கள் செய்திருக்க வேன்டும். எல்லோருக்கும் அந்த அருள் கிடைப்பதற்கான சக்தியும் ஊக்கமும் ஏற்படட்டும். அதற்கு இறையருள் துணை நிற்கட்டும்.