பாரிஸில் நடந்த காலநிலையைக் குறித்த ( summit for conscience) உச்சி மாநாட்டில் அம்மா ஆற்றிய காணொளி உரை. ஜூலை 21, 2015 பாரிஸ், பிரான்ஸ்

அன்பின் வடிவாகவும் ஆத்மாவின் வடிவாகவும் இருக்கும் அனைவர்க்கும் அம்மாவின் முதற்கண் வணக்கம்.

சிலர் வந்து அம்மாவிடம் “அம்மா எனக்குத் தலை சுற்றுகிறது என்று கூறுவதுண்டு, அவர்களின் தலைவலிக்குக் காரணம் காதில் உள்ள திரவத்தின் சமநிலையின்மையும் சில செல்களின் இட்மாற்றமுமேயாகும். இப்பொழுது இயற்கையின் நிலையும் இதுவேயாகும். அதனால் நாம் துப்பாக்கி முனையில் நிற்கும் வீரனைப் போன்ற கவனத்துடன் இந்தப் பிரச்னையைக் கையாள வேண்டும்.

அம்மாவின் சிறுவயதில் அடுத்துள்ள வீடுகளுக்குச் சென்று காய்கறிகளின் மீதித்தோல்களைக் கொண்டுவந்து கால்நடைகளுக்குக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு வீட்டிற்குச் சென்றபோது அந்த வீட்டின் தலைவி அம்மாவிடம், “நேற்று பணம் எதுவும் கிடைக்காததால் வீட்டில் சமையல் செய்யவில்லை. அதனால் மீதமான காய்கறிகள் எதுவும் இல்லை” என்று கூறினார். அவர்களுக்கு மொத்தம் பதினோரு குழந்தைகள் இருந்தனர். அனைவரும் பசியின் மிகுதியால் அந்தத் தாயின் மடியில் தலைவைத்துப் படுத்திருந்தனர். அம்மா அவரிடம், “யாரிடமிருந்தாவது கடன் வாங்கிக் குழந்தைகளுக்கு உணவு தயாரித்துக் கொடுத்திருக்கலாம் அல்லவா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நேற்று என் கணவர் கடலுக்குச் சென்றும் மீன் ஒன்றும் கிடைக்காமல் திரும்ப நேர்ந்தது. இங்கிருந்து பத்து கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஒருவரிடம் கடன் வாங்கக் கால்நடையாகவே சென்றார். அங்கும் கடன் கிடைக்காததால் திரும்ப நடந்து வந்துகொண்டிருந்தார். நேரம் இருட்டாகிவிட்டது. அன்று நல்ல நிலவொளியாக இருந்த காரணத்தால் அவர் நடந்து வரும் வழியில் ஆமை ஒன்று கரையில் வந்து முட்டையிடுவதைத் தெளிவாகக் காணமுடிந்தது. அந்த ஆமை கடலுக்குள் செல்லும்வரை காத்திருந்து, அது கடலுக்குள் சென்றதும் நூறு முட்டைகளிலிருந்து பாதியை எடுத்து வந்து குழந்தைகளுக்கு அதை வேகவைத்துக் கொடுக்கச் சொன்னார்.

அப்போது எங்களது ஒரு மகள் “அப்பா! அங்கிருந்த எல்லா முட்டைகளையும் எடுத்து வந்திருக்கலாம் அல்லவா?” என்று கேட்டாள். அதற்கு அவர் “மகளே, உங்களில் ஒருவர்கூட பாக்கியில்லாமல் அனைவரும் இறக்க நேரிட்டால் பெற்ற எங்களுக்கு எவ்வளவு மனதில் வலியிருக்குமோ அதே அளவு வலி அந்த ஆமைக்கும் இருக்குமல்லவா? எனவேதான் அனைத்து முட்டைகளையும் எடுக்காமல் பாதியை மட்டும் எடுத்துவந்தேன். அதுமட்டுமின்றி, நமது சுயநலத்தை மட்டும் கருதி இன்று நாம் அனைத்து முட்டைகளையும் எடுத்தோமேயானால் ஆமையின் இனமே அழிந்துவிடுமல்லவா? அதனால் வருங்காலத்தில் பசியால் வாடும் சந்ததியினருக்கு முட்டை கிடைக்காமல் போய்விடும் அல்லவா? என்றார்” என்று கூறினார்.

இவ்வளவு வறுமையிலும், இப்படிப்பட்ட ஏழ்மையிலும் கூட மற்ற உயிரினங்களைப் பற்றிச் சிந்திக்கவும், அவற்றின் வலியை உணரும் தன்மையையும் நமது முன்னோர்கள் பெற்றிருந்தனர். ஆனால் இன்றோ, பணத்திற்காகவும் இறைச்சிக்காகவும் மக்கள் ஆமைகளை ஏற்றுமதி செய்கின்றனர்.

நாம் ஒவ்வொரு முறை ஒரு மரத்தை வெட்டும்பொழுதும் அது நமக்காகச் செய்யப்படும் சவப்பெட்டியாகும். இதை நாம் எப்பொழுதும் சிந்திக்கவேண்டும். இத்தகைய நிலையில், நாம் ஒரு மரத்தை வெட்டினால், அதற்குப் பதிலாக ஒரு மரத்தை மட்டும் நட்டு வளர்த்தால் போதாது. குறைந்தது நாற்பது மரங்களையாவது நடவேண்டும்.

இப்பொழுது ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு காற்றின் மூலமாக புற்றுநோய் பரவியிருக்கிறது. இதற்குக் காரணம் இயற்கை மாசு அடைந்ததேயாகும். இயற்கை மலினமடைந்ததற்கு பின்வரும் விஷயமே உதாரணம். அமமாவின் சிறுவயதில் இந்த கிராமத்தில் யாருக்காவது உடலில் புண் ஏற்பட்டால், அவ்விடத்தில் சிறிது மாட்டுச்சாணத்தை வைத்தால் போதும். அப்புண் நாளடைவில் சரியாகிவிடும். ஆனால் இப்பொழுதோ, மாட்டுச்சாணத்தை வைத்தால், புண் பழுத்துப் பெரிதாகிவிடுகிறது. அன்றைய மருந்து இன்று நஞ்சாகிவிட்டது.

இந்த இயற்கையில் ஒன்றையும் எளிதாக நினைத்துத் தள்ளிவிடக்கூடாது. எப்படி ஒரு விமானம் பறக்க அதன் எஞ்சின் மிகவும் முக்கியமானதோ, அதேஅளவு முக்கியம் ஒரு சிறிய திருகாணிக்கும் உண்டு. சிறிய திருகாணி இல்லாமல் பறக்க முடியாமல் நின்ற விமானங்களும் உண்டு. நாம் மிகச்சிறிய உயிர் என்று நினைக்கும் தேனீக்கும் இயற்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தேனீக்களால் நடக்கும் மகரந்தச் சேர்க்கையினாலேயே நமக்குக் காய்கறிகளும் பழங்களும் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட தேனீக்கள் விஷத் த்ன்மை மிக்க வேதி உரங்கள் உபயோகித்து வளர்த்த பூக்களில் அமர்ந்து தேன் பருகுவதால் தங்களுடைய நினைவாற்றலை இழக்கின்றன. முன்பு சுமார் 3 கிலோமீட்டர் பறந்து சென்று தேன் சேகரித்துக் கொண்டிருந்த தேனீக்களால் இப்பொழுது தங்களது கூட்டை நினைவு வைத்துக் கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கின்றன. இந்நிலை நீங்க நாம் காடுகளுக்கு இடையே விஷத்தன்மை உள்ள வேதிஉரங்கள் பயன்படுத்தப் படாத செடிகளை வளர்த்து அவற்றின் மூலமாக தேனீக்களுக்கு உதவவேண்டும். லட்சக்கணக்கான அம்மாவின் பக்தர்கள் இப்போது இதைச் செய்து கொண்டிருக்கின்றனர். இனிமேலும் அனைத்து பக்தர்களும் தங்களால் இயன்ற அளவு இம்முறையில் தேன்கூட்டை வளர்க்க முயல வேண்டும்.

நம்மைப் பெற்ற தாய் கூட ஒரு வேளை நான்கோ ஐந்தோ வயது வரை தனது மடியில் அமர நம்மை அனுமதிக்கலாம். ஆனால் இந்த பூமித்தாயோ தமது வாழ்நாள் முழுவதும் நாம் அடித்தாலும் துப்பினாலும் குத்தினாலும் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு அவளது மடியில் நம்மை அமர அனுமதிக்கிறாள். அப்படிப்பட்ட இந்த பூமித்தாயிடம் நாம் நன்றியற்றவர்களாக நாம் செய்ய வேண்டிய கடமையை ஒருபோதும் மறந்து விடக் கூடாது.

பத்து மாடிக் கட்டிடத்தில் வசிக்கும் ஒருவர் அங்கிருந்து கீழ்தளங்களில் வசிப்பவர்களை நோக்கிக் கத்துகிறார்,” ஐயோ! யாராவது உடனே இங்கே ஓடிவாருங்கள். இங்கே தீப்பிடித்து விட்டது. அப்போது கீழே வசிப்பவர்கள் கூறுகின்றனர்,”அது உன்னுடைய வீடுதான், நீயே பார்த்துக்கொள்.” பத்தாவது மாடியில் உள்ள தீயை உடனே அணைக்கா விட்டால் அது பரவி கீழ்தளத்தில் உள்ள வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி அங்கே உள்ளவர்களையும் எரித்து விடும் என்று யாரும் சிந்திப்பதில்லை. அதுபோல வருங்காலத்தில் வரவிருக்கும் இயற்கைச் சீரழிவை நேரிடாமல் இருக்க நாம் மாறியே ஆகவேண்டும்.

எனவேதான் அம்மா கூறுவதுண்டு,” இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒரு தாளகதியுண்டு. ஒவ்வொரு உயிர்களுக்கும் இடையே பிரிக்க முடியாத் ஓர் ஒற்றுமை உண்டு. ஒரு உயிருக்கு ஏற்படுத்தும் ஆபத்து அறிந்தோ அறியாமலோ மற்ற உயிர்களையும் பாதிக்கும். இந்தப் பிரபஞ்சம் என்பது அனைத்து உயிர்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த ஒரு இணையமாகும். நான்கு பேர் சேர்ந்து பிடித்திருக்கும் ஒரு வலையில் ஏற்படும் அதிர்வு எப்படி நான்கு பேரையும் பாதிக்கிறதோ, அது போல இப்பிரபஞ்சத்தில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ நாம் அறிந்தோ அறியாமலோ செய்யும் அனைத்து செயல்களும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இப்பிரபஞ்சத்திலுள்ள அனைவரையும் அது பாதிக்கிறது. எனவே நம்மால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்யவேண்டும் முதலில் பிறர் மாறட்டும; பிறகு நான் மாறுகிறேன் என்று நினைப்பதைவிட நாம் முதலில் மாற முயலவேண்டும்

எப்படி அன்னையர் தினம, தந்தையர் தினம் என்று நாம் உற்சாகமாகக் கொண்டாடுகிறோமோ அதுபோல் இந்த இயற்கையைப் பேணிக்காக்க ஒரு தினம் வேண்டும். அன்றைய தினத்தில் இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவரும் செடிகளை நட்டு இயற்கையைப் பேணிக்காக்க வேண்டும்

நாம் நமது சொந்த சுகத்திற்காக இயற்கையை வீணாக்கக்கூடாது. இப்பிரபஞ்சத்தின் இப்போதைய நிலையை மனதில் கருதி ஆடம்பரத்தைக் குறைக்க முயலவேண்டும். உதாரணமாக 3000 சதுர அடியில் ஆடம்பரமாக வீடு கட்ட நினைப்பவர்கள் அதை 1500 சதுர அடியாக குறைக்க முயலவேண்டும். இப்படியே 2000த்தை 1000மாகவும் 1000த்தை 500 ஆகவும் குறைப்பதின் மூலமாக தேவைக்கதிகமாக மரம் வெட்டுவதை வெகுவாகக் குறைக்கலாம். இப்படிச் செய்வதின் மூலமாக மின்சாரத் தட்டுப்பாடு உண்டாகாது. காகிதத்திற்காக நாம் மரம் வெட்டுவதும் குறையும்.

கார்பூல் (carpool) திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக எரிபொருளைச் சேமிக்கலாம். நூறு ரூபாய் செலவழித்தும் ஆயிரம் ரூபாய் செலவழித்தும் பேனா வாங்கி நம்மால் எழுத முடியும். ஆனாலும் நாம் முடிந்தவரை ஆடம்பரத்தைக் குறைத்து, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு இல்லாதவர்களுக்கு உதவி செய்ய முயற்சிக்கலாம்.

ஒரு பெரிய குளம் மலினமடைந்து கிடப்பதைக் கண்டு, இதை நான் ஒருவன் மட்டும் எப்படித் தூய்மை செய்வது என்று நினைப்பதைவிட நம்மால் இயன்றதைச் செய்ய நாம் முயற்சித்தால் நம்மைக்கண்டு வேறொருவரும் அவரால் முடிந்ததைச் செய்வார். இப்படிச் சிறிது சிறிதாக அந்தப் பெரிய தடாகமே தூய்மையடைந்து விடும். Carpool திட்டம், தேன்கூட்டை வளர்த்தல், செடி நடுதல், இயற்கையைத் தூய்மைப் படுத்துதல், கழிவுகளை அகற்றும் திட்டம், காய்கறிகளை நடுதல் போன்றவற்றை நீண்ட நாட்களாக அம்மாவின் பக்தர்கள் செய்து வருகின்றனர். இப்போதுகூட கவனத்துடன் ஒன்று சேர்ந்து இவற்றையெல்லாம் செய்து இந்தப் பூமியைச் சொர்க்கமாக்க நம்மால் முடியும். அதற்கு அனைவருக்கும் இறைவனது அருள் உண்டாகட்டும் என்று அம்மா பரமாத்மாவை வேண்டிக்கொள்கிறேன்.

பாரிஸில் நடந்த காலநிலையைக் குறித்த ( Summit For Conscience) உச்சி மாநாட்டிற்கு அம்மாவை பிரெஞ்சு அதிபர் பிரான்ஸ்வ ஹோலொன்தெ தனது சிறப்புத் தூதர் மூலம் அழைப்பு விடுத்திருந்தாலும் அம்மாவின் அமெரிக்கப் பயணம் இருந்ததால் அம்மாவுக்கு அதில் கலந்து கொள்ள இயலவில்லை. அம்மாவின் பிரதிநிதியாக மாதா அமிர்தானந்த மயி மடத்தின் துணைத் தலைவரான சுவாமி அமிர்த சொரூபானந்த புரி அவர்கள் அம்மாவின் அருளுரையைத் தெரிவித்தார்.

இந்த வருடம் டிசம்பரில் பாரீஸில் நடக்க இருக்கும் சிறந்த நிலையான வளர்ச்சியைக் குறித்துள்ள உச்சி மாநாட்டில்-COP21 ஆற்றல் மிக்கதும் பயனுள்ளதுமான விஷயங்கள் உலக அளவில் விவாதிக்கப் பட வேண்டிய அவசியம் உண்டு என உலகளவில் உள்ள மத, ஆன்மிக மற்றும் பொதுத்தொண்டு நிறுவனங்களின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்ட உச்சி மாநாடு சுட்டிக்காட்டியது. கான்ஸ்டான்டி நோபிள் ஆர்ச் பிஷப் பர்த்தலோமியா ஒன்னாமன், ஐ. நா. சபையின் முன்னாள் பொதுச் செயலர், திரு. கோபி அன்னான், நோபல் பரிசு பெற்ற டாக்டர். முகமது யூனூஸ், நடிகரும் சமூகசேவகருமான அர்னால்டு ஷார்ஸெனகர் போன்ற பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் மதத்தலைவர்கள், ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் ஐ.நா. சபையின் பல்வேறு துணை அமைப்புகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.