இந்த உலகமே என்னவோ தனக்காக மட்டும்தான் என்கிற தவறான கண்ணோட்டத்தில் இத்தனை காலம் உலா வந்துகொண்டிருந்தான் மனிதன். அந்த மனப்பாங்கிலேயே பற்பல நூற்றாண்டுகளாய் மனித இனம் இயற்கையையும், அவளது செல்வங்களையும் அவளது பற்பல பிற ஜீவராசிகளையும் தமது சுயநலத்துக்காகச் சுரண்டி அழித்துக்கொண்டே வந்திருக்கிறது. தான் உட்கார்ந்திருக்கும் மரக்கிளையையே ஒருவன் வெட்டுவதுபோல ஓர் காரியத்தை செய்து வந்திருக்கிறோம் என்று நாம் உணரவே இல்லை. இப்போது பூமியின் நிலப்பரப்பில் சுமார் 30%தான் காடுகள் எஞ்சியிருக்கின்றன. நாம் இதே போக்கில் போய்க்கொண்டிருந்தால் இன்னும் சில வருடங்களில் பூமியில் உள்ள கடைசி மரமும் வெட்டப்பட்டு காணாது போய்விடும்!

கடலின் நிலைமையும் கிட்டத்தட்ட இதே கதைதான். கடல் வாழ் சிறிய உயிரினங்களைக் கொன்று அழிப்பது ஷார்க்குகளோ திமிங்கலங்களோ அல்ல; மனிதன் உண்டாக்கிய பிளாஸ்டிக் கழிவுகள் தாம்! வளி மண்டல ஆகாயம், மனிதன் உண்டாக்கிய தொழிற்சாலைகள் வெளிவிடும் புகைகள், வாயுக் கழிவுகளால் அசுத்தப் பட்டு இருளோடிக்கொண்டே இருப்பதும் தெரிந்ததே. வளி மண்டலத்துக்கு அப்பால் உள்ள ஆகாயம் கூட இப்போது சுத்தமாய் இல்லை; மனிதன் அனுப்பிய செயற்கைக் கோள்களின் உதிரிகள், வேலை செய்யாது காலம் கடந்து போன பழைய செயற்கைக் கோள்கள் இவற்றால் மாசு பட்டிருக்கிறது.

பல ஆறுகளின் தண்ணீரிலும் மனிதர்களும் தொழிற்சாலைகளும் வெளியிட்ட கழிவு நீர் கலந்து மாசுற்று ஓடிக்கொண்டிருக்கின்றன. விவசாய நிலங்களோ விளைச்சலைக் கூட்ட என்று மனிதன் இட்ட செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தாக்கத்தால் மாசுற்றும், வீரியமிழந்தும் நலிவுற்றுக்கொண்டிருக்கின்றன. மாமிசத்துக்காகவே வளர்க்கப்படும் மிருகங்களை அதி வேகமாகக் கொழுக்க வைக்க ஹார்மோன் ஊசிகளைக் குத்தி, அந்த மாமிசங்களும் மாசுற்று இருப்பதால் அவற்றை உண்ணும் மனிதன் பல்வேறு நோய்களால் பாதிக்கப் படுகிறான். இப்படியாக, மனிதனுக்கு இயற்கையாய் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பெரிதும் பாதிக்கப் பட்டுவிட்டது. இயற்கைக்கும் அதே நிலை தான். அதனால் தான் மனித இனம் வெகு எளிதாகப் புதிய புதிய நோய்களால் தாக்கப்பட்டு அவற்றோடு போராடி வெல்லும் சக்தியை இழந்து வருகிறான்.

முழு உலகத்தையுமே வெறும் வியாபாரத் தலமாகக் காணும் கண்ணோட்டம் நமக்கு வந்தாயிற்று. அதனால், எந்த ஒரு பொருளாதாரச் செயல்பாடோ, வியாபாரமோ கட்டுக்கடங்காத வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வந்துவிட்டது. ஆனால் அப்படிப்பட்ட ஓர் வளர்ச்சி நன்மை பயக்கும் வளர்ச்சிதான் என்று சொல்ல முடியாது. உடம்பில் புற்று நோய் வந்தால் அந்த புற்று நோய் செல்கள் கட்டுக்கடங்காது வளர்ந்து கடைசியில் மனிதனின் உயிரையே குடித்துவிடுகின்றன
. இப்போது நாம் “இன்னும் எடு, எடு, ” என்றே சதா செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். வீட்டில் நான்கு பேர் இருந்தால் ஆளுக்கு ஒரு கார் என்று ஆகிவிட்டது. நாலு பேர் உள்ள வீட்டில் எட்டுக் கார்கள் உள்ள ஆடம்பரங்களையும் நாம் காண்கிறோம். வேகம்தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. 10 மணி நேரம் சாலையில் பயணிப்பதற்கு பதில் 1 மணி நேரத்தில் விமானப் பயணத்தில் போய்விடலாம் எங்கிற மனப்பாங்கு கூடிவிட்டது.

இப்படி வாழ்க்கையே அதி வேகமாகிவிட்டதாலோ என்னவோ, இப்போதெல்லாம் சாவும் அதி வேகமாக வர ஆரம்பித்து விட்டது!
மக்கள் தொகை ஒரு பக்கம் பெருகப் பெருக, அத்தனை பேருக்கும் பசிப்பிணியும் அதனால் சாவும் வராது உணவு தர வேண்டும் என்று வரும்போது, மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஈடாக உணவு உற்பத்திப் பெருக்கமும் மற்ற பல புதிய கண்டுபிடிப்புகளும் வந்தன. காய் கறி பழங்கள் எல்லாம் பெரிது பெரிதாய்க் காய்க்கும் விதத்தில் கண்டுபிடிப்புகள். தக்காளி, மா போன்ற செடிகளும் மரங்களும் இயற்கைக்கு மாறாக மூன்றே மாதங்களில் பூப்பூக்கும் விதத்தில் கண்டு பிடிப்புகள் என்றெல்லாம் வந்தது பட்டினிச் சாவுகள் வராமல் பார்த்துக்கொள்ளவே. அதைப் போலவே மாமிச உணவுகள் கூடுதல் கிடைப்பதற்காக, மிருகங்கள் விரைவில் கொழுத்து வளர்வதற்கான மருந்துகள், ஹார்மோன்களின் கண்டு பிடிப்புகள்.

ஆனால் இவற்றின் பின் விளைவாக, மனிதன் உண்ணும் உணவில் நச்சுத் தன்மை கூடிக் கூடிக்கொண்டே போகும் அவலம் வந்துவிட்டது. மனிதனின் தேவைக்காக மரங்கள் மிக அதிக அளவில் வெட்டப்பட்டுக்கொண்டே வருவதால் காற்றில் மாசு கூடிக்கொண்டே போகும் அவலம். செயற்கை உரங்களால் நிலத்தின் இயற்கை சக்தி நஷ்டப் பட்டுக்கொண்டே போகும் அவலம். அதனால் எத்தனை உரமிட்டாலும் போதவில்லை என்கிற நிலை. தொழிற்சாலைகள் வெளியிடும் புகையினால் மாசுபட்டிருக்கும் காற்றை நாம் சுவாசிப்பதால் வரும் நோய்கள். ஆற்று நீர் மாசு பட்டிருப்பதால், அவற்றைக் குடி நீராக மாற்றுகையில் கூடுதலாய் குளோரின் சேர்த்து வினியோகிக்கிறார்கள். அந்தக் குளோரினும் உடம்புக்குப் பிரச்சனை ஆகிறது. அதிகப்படி குளோரின் வயிற்றில் அமிலத்தைக் கூட்டுகிறது; புற்று நோய் வருவதற்கு ஒரு காரணி ஆகிறது.
இப்படி நாம் சுவாசிக்கும் காற்றும், உண்ணும் உணவும், குடிக்கும் நீரும் எல்லாமே மாசு பட்டிருப்பதால் மனித உடம்பின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி பெருமளவில் பாதிக்கப் பட்டிருக்கிறது. முன்பெல்லாம் குழந்தைகளுக்கு சாதாரணக் காய்ச்சல் வந்தால் துளசி மற்றும் வேறு சில மூலிகைகள் சேர்த்த கஷாயம் வீட்டிலேயே செய்து தருவார்கள். நீராவியை முகர வைப்பார்கள். அவற்றிலேயே குணமாகிவிடும்; ஆனல் இன்றோ கூடுதல் அதிகம் ஆண்டிபயாட்டிக் மருந்துகள் கொடுத்தாலே குணமாகும் நிலை. இதெல்லாம் கடந்த சில வருடங்களில் நேர்ந்தவை. இப்போது எல்லாவற்றிற்கும் புதிய மருந்துகள் கண்டு பிடிக்கவேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு மனித உடம்பு பலவீனப் பட்டுப் போயிருக்கிறது.

கலப்பினப் பயிர்களையே எடுத்துக்கொள்ளுங்கள். அவைகளுக்கு அடிக்கடி உரம் போட வேண்டியிருக்கிறது; பூச்சி மருந்து அடிக்க வேண்டியிருக்கிறது. அடிக்கடி மருந்து அடிக்காவிட்டால் நுண்ணிய புழுக்கள் வந்து தாக்கிப் பயிர்களை அழித்துவிடுகின்றன. இந்தப் புழுக்களைத் தன் இயற்கை சக்தி கொண்டு எதிர்க்க அப்பயிர்களுக்குத் தெம்பில்லை. கலப்பினப் பசுக்களோ, கலப்பினக் கோழிகளோ சாதகமான சில கால நிலைச் சூழல்கள் உள்ள இடங்களில் மட்டுமே வளர்கின்றன. அவை வளரும் இடங்களில் தட்ப வெப்ப நிலையை சரியான அளவில் எப்போதும் நிலை நிறுத்த வேண்டியிருக்கிறது. அவைகளுக்கென சிறப்பாக உருவாக்கப் பட்ட உணவுகளையே கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் பாரம்பரிய நாட்டு மாடுகளுக்கோ கோழிகளுக்கோ இந்தமாதிரி கட்டுப்பாடுகளெல்லாம் தேவையில்லை.

இப்போது மனிதர்களும் இந்தக் கலப்பின மிருகங்கள், பயிர்கள் போல ஆகிவிட்டார்கள்! போகிற போக்கைப் பார்த்தால் கூடிய விரைவில், நிலாவில் இறங்கி ஆராய்ச்சி செய்த மனிதர்கள் போலவே பூமியில் வாழும் மனிதர்களும் ஆளுக்கு ஒரு பிராணவாயு சிலிண்டரை முதுகில் சுமந்து கொண்டு அதிலிருந்து சுவாசிக்கும் நிலைக்கு வந்துவிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தோன்றுகிறது! ( தொடரும்)

அம்மாவின் செய்தி

குழந்தைகளே,

நமது பாரத தேசத்தின் கலாசாரத்தின் சின்னமாய் இருப்பது சம்ஸ்கிருத மொழி. மிகத் தொன்மையான நமது பாரதீய கலாசாரத்தின் வாகனமாக விளங்குவது சம்ஸ்கிருத மொழி.  மனித மனத்தில் ஓர் மாற்றத்தை உருவாக்கக் கூடிய ஓர் தனிப்பட்ட சக்தி சம்ஸ்கிருத மொழிக்கும் அதன் ஒலி அதிர்வுகளுக்கும் உண்டு.

பாரதத்தில் மட்டுமல்ல, உலகத்திலுள்ள எத்தனையோ மொழிகளுக்கு மாதாவாக இருப்பது சம்ஸ்கிருதம்.

எல்லா பாரத மக்களின் பல்வேறு கலாசாரங்களையும் ஒன்றாய்க் கூட்டி  இணைப்பது சம்ஸ்கிருத மொழியாகும். சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ள வேதங்களும், புராணங்களும், ராமாயண மகாபாரத இதிகாசங்களும் பாரதத்தில் உள்ளேயும் வெளியேயும் உள்ள எத்தனையோ மொழிகளில் உள்ள சிறப்பான படைப்புகளுக்கு  மூலங்களாய் அமைந்துள்ளன.

உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த நூல்களைப் படித்தும், கேட்டும், மனனம் செய்தும் மெய்யறிவு  பெறுபவர்களாக ஆகிவருகின்றனர். அறநெறி உணர்வும், பக்தியும், ஞானமும், நல்லொழுக்கங்களும் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

நமது கலாசார ஒருமைப் பாட்டுக்கும், மக்களின் அறிவு மேம்பாட்டுக்கும், சம்ஸ்கிருத மொழி வழிகோலுகிறது. இலக்கிய மேடைகளிலும், கலைகளின் அரங்கங்களிலும் நம் எல்லோரையும் ஒருங்கிணைத்ததும், அறிவு நல்கியதும் சம்ஸ்கிருதமேயாகும். சம்ஸ்கிருதத்திலுள்ள அகர வரிசையே நம்  நாட்டில் உள்ள எல்லாமொழிகளிலும் அனேகமாகப் பின்பற்றப் படுகிறது. ஆகவே பாரதத்தின் உண்மையான தேசிய மொழி சம்ஸ்கிருதமேயாகும்.

நமது பண்டைய பாரதத்தின் சாத்திரங்களையும், இலக்கியங்களையும் மிகச் சரியான விதத்தில் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கு சம்ஸ்கிருத மொழி அறிவு மிகவும் இன்றியமையாதது. சுருக்கிச் சொல்ல வேண்டுமென்றால், சம்ஸ்கிருத மொழிக்குப் புத்துயிர் கொடுப்பதன் மூலமே நமது கலாசாரத்தை உன்னத நிலைக்குக் கொண்டுவர முடியும்.

ஆகவே சம்ஸ்கிருத மொழியைக் கற்பதையும், அதைப் பிரச்சாரம் செய்வதையும் உற்சாகப்படுத்த வேண்டியது, நமது தேசத்தின் பண்பாட்டை நேசிப்பவர்களும், ஆதரிப்பவர்களும் அவசியம் செய்ய வேண்டிய ஓர் கடமை ஆகும்.

இம்மொழியை பெருமளவு பரப்பாமல் நமது கலாசாரத்துக்கு புது உத்வேகம் தருவது சாத்தியமில்லை.  இந்தத் திசை நோக்கிப் பயணப்பட நம் மக்கள் செய்யும் எந்தவிதப்  பிரச்சாரங்களும், செயல்பாடுகளும் போற்றுதலுக்கு உரியவை. 

இவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூடுதல் சக்தி உண்டாகட்டும் என்றும்,  அது மேலும் மேலும் வளரட்டும் என்றும், குறிக்கோள் விரைவில் நிறைவேறட்டும் என்றும் அம்மா பரமாத்மாவிடம் பிராத்திக்கிறேன்.

கொரானா வைரஸின் தாக்கத்தினால் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பல நாட்களாக நாமெல்லாம் நம் வீடுகளுக்குள்ளோ அடுக்ககங்களுக்குள்ளோ அடைபட்டு இருக்கிறோம். உங்களில் பெரும்பான்மையான பேர்களுக்கு இது வெறுத்துப் போயிருக்கும்; துன்பமாயும் கூட இருக்கும். செய்யவேண்டிய காரியங்களுக்காகப் போட்ட திட்டங்கள் எல்லாம் முடங்கிப் போயிருக்கும். ஆனாலும் என் குழந்தைகள் முடிந்தவரை மகிழ்ச்சியுடன் உற்சாகமாக இருக்க முயலவேண்டும்.


வைரஸின் பாதிப்பு இந்த அளவிலாவது கட்டுக் கோப்பில் இருக்கிறது என்றால் அதற்கு நீங்களெல்லாம் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருந்ததே காரணம். இப்போது நமது சிரத்தை சிறிதளவு சுணங்கிப் போய்விட்டாலும் கூட இத்தனை நாட்கள் நாம் செய்த முயற்சிகள் வீணாகிவிடும். ஆகவே என் குழந்தைகள் தொடர்ந்து எச்சரிக்கையோடு கூடிய விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.


அரசாங்கம் இந்தக் கொரானா எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் இருந்து கொண்டு, வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, இந்தக் கடினமான நாட்களில் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு மிகவும் உகந்த ஆலோசனைகளைத் தந்து கொண்டிருக்கிறது. அதனால், அரசாங்கம் சொல்லும் வழிகாட்டு முறைகளைப் பின்பற்றுவது மிகமிக அவசியமாகும்.

என் குழந்தைகள் தொடர்ந்து பொறுமையுடன் இருக்கவேண்டும். உலகமே இப்போது மிகவும் பரிதாபகரமான நிலைமையில் இருக்கிறது. உலகளாவிய, இந்த வைரஸின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டி விட்டது. சில நாடுகள் மற்ற நாடுகளை விடக் கூடுதல் பாதிப்பு அடைந்திருக்கின்றன. நம் நாட்டிலும் சில மாநிலங்களில் பாதிப்பு கூடியிருக்கிறது. நம் நாட்டில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம். ஆதலால் நாம் கூடுதலாகவே எச்சரிக்கையாய் இருக்கவேண்டியிருக்கிறது.

அம்மா முன்பே சொல்லியிருப்பது போல, அம்மா இந்த உலகத்தை ஓர் மலர் போலக் காண்கிறேன். அம்மலரில் உள்ள ஒவ்வொரு இதழ் போலத்தான் ஒவ்வொரு நாடும். மலரின் ஒரு இதழை ஒரு புழு தாக்கினாலும் விரைவில் முழு மலரும் பாதிக்கப் பட்டுவிடும். அதே போன்ற ஓர் நிலைமையைத்தான் நாம் இப்போது கண்டு வருகிறோம். இந்த உலகமாகிய மலர் ஆரோக்கியமாகவும் அழகாகவும் தொடர்ந்து இருக்கவேண்டுமென்றால் உலகின் ஒவ்வொரு நாட்டு மக்களிடையிலும் நேர்மையான முயற்சிகளும் ஆக்கப் பூர்வமான எண்ணங்களும் அவசியம். எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஒரு தாய்– பிள்ளைகள் போல உலக மக்கள் யாவரும் ஒற்றுமையுடன் கை கோர்க்கவேண்டிய தருணம் இது. உலகளாவிய சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கையைப் பாதுகாக்கும் கொள்கைகளை மறு ஆய்வு செய்து, பழைய தவறுகளைத் திருத்தி முன்னோக்கிப் போக வேண்டிய தருணம் இது. அம்மாவின் பல குழந்தைகளும் இந்த சமயத்தில் பல விதங்களில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சிலருக்கு பொருளாதார ரீதியில் கஷ்டம்; சிலருக்குத் தம் நெருங்கிய உறவினர்களை, நண்பர்களை சந்திக்க முடியாமல் இருப்பது குறித்த வருத்தம். குழந்தைகளே, உங்களிடையே இந்த வருத்தம் இருப்பவர்கள் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எத்தனை சிறந்த நண்பர்கள் ஆனாலும் கூட எல்லாரும் எல்லா சமயத்திலும் சந்தித்துக்கொண்டே இருப்பதில்லையே? மக்கள் பலரும் தங்கள் குடும்பங்களைப் பிரிந்து பல்வேறு இடங்களுக்குப் பயணித்தபடிதானே இருந்தார்கள்? குறிப்பாக வெளி நாட்டில் வேலை பார்ப்பவர்களை நினைத்துப் பாருங்கள்.


அவரவர் வேலைகள் வெவ்வேறு ஊர்களில் இருப்பதாக அமையும் போது கணவன்-மனைவி கூட நீண்ட நாட்கள் பிரிந்து வாழவேண்டிய நிலைமைகள் உண்டே? அப்படி நேரும்போது அதனை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப அனுசரித்துக்கொண்டு போவது சகஜம் தானே! அதே கண்ணோட்டத்தில் தற்போது கொரானாவின் பாதிப்பால் வந்துள்ள பிரிவுகளையும் பாருங்கள். வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் ஆண்டுக்கு ஒரு முறைதான் இந்தியா வந்து ஒரு சில நாட்களே தம் உறவினரோடு வந்து சேர்ந்திருக்க முடிகிறது. ஆக, அவசியம் ஏற்படும்போது இத்தகைய பிரிவுகளை ஏற்றுப் பழகிக்கொள்ள முடியும். என் குழந்தைகளுக்கு மனதில் வருத்தம் வரும்போது இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்து ஆக்கப் பூர்வமான மனநிலையையும் மனவலிமையும் வளர்த்துக் கொண்டு முன்னே போகவேண்டும். எது நடந்தாலும் துணிவைக் கைவிடக் கூடாது. மனோ தைரியத்தை விடாது இருந்தால்தான் நம்மால் சரியாய்ச் சிந்திக்கவும் செயல்படவும் முடியும்.

குழந்தைகளே, உங்கள் வசம் இப்போது இருக்கும் நேரத்தை எவ்வாறு சிறப்பாக உபயோகப் படுத்திக்கொள்ள முடியும் என்று சிந்தியுங்கள். ஆக்கப் பூர்வமாயும், உற்சாகம் தரும் விதத்திலும் உள்ள செய்திகளையே அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லாரிடமும் கை பேசி இருக்கிற காலம் இது. நம்பிக்கை ஊட்டும் செய்திகளையும் உத்வேகம் தரும் தகவல்களையும் மட்டுமே அனுப்புங்கள். ஒருவருக்கொருவர் ஆறுதலாய்ப் பேசிக்கொள்ளுங்கள். இந்த விதத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள முடியும். நீங்களெல்லாம் ஏற்கனவே இவ்வாறு தான் செய்து கொண்டிருப்பீர்கள் என்றே அம்மா நம்புகிறேன். இப்படிச் செயல்படுவது தான் நல்லது. எல்லாருமே அதிக பட்ச ஒத்துழைப்பு, பொறுமை, அன்பு, ஒற்றுமை இவற்றை வீட்டிற்குள்ளும் வீட்டிற்கு வெளியிலும் செயல் படுத்த வேண்டிய தருணம் இது. பிரார்த்தனையுடன் கூடிய மனத்தோடு சரியான முயற்சிகளையும் நாம் மேற்கொண்டால் நாம் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.


மற்ற எல்லா தீர்மானங்களைப் போலவே மகிழ்ச்சியாக இருப்பதும் ஒரு தீர்மானம்தான் என்று அம்மா அடிக்கடி சொல்வதுண்டு. ‘சூழ்நிலை எப்படி இருந்தபோதிலும் நான் மகிழ்ச்சியுடனும் தைரியத்துடனும் இருப்பேன்’ என்ற தீர்மானத்தை நாம் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். நாம் அழுதாலும் சரி, சிரித்தாலும் சரி, காலம் போகும். ஆகவே, குழந்தைகளே, நீங்கள் சிரித்துக்கொண்டு இருக்கப் போகிறீர்களா அல்லது சோகமாக இருக்கப் போகிறீர்களா? தீர்மானியுங்கள். என்ன விளைவு நிகழ்ந்தாலும் நீங்கள் மகிழ்ச்சியுடன் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார் என்கிற உறுதியான தீர்மானத்தை எடுத்துவிட்டீர்கள் என்றால் அப்போது உங்களைச் சுற்றி ஓர் மகிழ்ச்சியான சூழல் தானாகவே உருவாவதை நீங்கள் பார்க்கலாம். அந்த சூழலில் அங்குள்ள மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் எழுவதைக் காண முடியும்.

சந்தோஷமான மனிதனே உறுதிமிக்க மனிதன். அப்படிப்பட்ட ஒருவன், சோகமயமான ஒருவனை எதிர்கொண்டால், அவனது சோகத்தை மாற்றிவிடக் கூடிய மனப்பாங்கும் சக்தியும் முன்னவனுக்கு இருக்கும். அடுத்தவர் சோகத்தை மாற்றுவதே கூட ஓர் பெரும் செயலாகும்.

ஓரு மன நோயாளி, உளவியல் மருத்துவரோடு செலவழிக்கும் நேரத்தில், அந்தக் குறைந்த கால அளவிலாவது மன நிம்மதியை அனுபவிப்பான். மனச்சோர்வு,, கவலை இவற்றால் அவதியுறுபவர்கள், மன நல மருத்துவரோடு பேசிக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் மருத்துவரிடம் இருக்கும் ஆக்கப் பூர்வமான சக்தியிலிருந்து தாங்களும் சிறிது பெற்றுக்கொண்டு திரும்புகிறார்கள். அதே போல, நாமெல்லாம் குழந்தைகள் கூடிச் சிரித்து விளையாடும் ஓர் இடத்தில் இருந்து வேடிக்கை பார்க்கையில், நம்மை அறியாமல் புன்னகைக்கிறோம். சிறு குழந்தைகள் பலரும் உள்ள ஓர் அறையில் ஒரு குழந்தை அழ ஆரம்பித்தால், அடுத்தடுத்துப் பல குழந்தைகளும் அழுவதைப் பார்க்கலாம்.

உதாரணமாக, அம்மாவிடம் வித்யாரம்பத்திற்காகக் குழந்தைகளைப் பெற்றோர் அழைத்து வரும்போது, ஒரு குழந்தை அழ ஆரம்பித்தால் அடுத்தடுத்து மற்ற குழந்தைகளும் அழ ஆரம்பிப்பார்கள். விரைவிலேயே 10-15 குழந்தைகள் பெரிய குரலெடுத்து அழுவதைப் பார்க்க முடியும்! மாறாக, ஓரிரு குழந்தைகள் சிரித்துக்கொண்டிருந்தால், மற்ற எல்லாக் குழந்தைகளும் மகிழ்ச்சியாய் இருப்பதையும் காண முடியும்.


இத்தகைய உணர்வுகளெல்லாம் ஓர் அதிர்வுபோலவும் அலைகள் போலவும் பரவும் தன்மை உள்ளவை. ஆக, ஒரு மனிதனால் அடுத்தவர்கள் உணர்வுகளைப் பாதிக்க முடியும் என்பது உண்மை. அதனால், என் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் தற்காலிகமாவது அடுத்தவரிடையே மகிழ்ச்சியைப் பரப்பவும், துன்பங்களைக் குறைக்கவும் இயலும். ஆகவே, குழந்தைகளே, அடுத்தவர்களுக்குள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் எழுப்பிவிட உங்களால் முடிந்தவரை செயலாற்றுங்கள்.
எப்படியானாலும் துன்பங்களும் துயரங்களும் நம் வாழ்க்கையில் வரவே செய்யும். அவை பலவும் நம்மை மேலும் உறுதிவாய்ந்தவர்களாக ஆக்கவே உதவும். நாம் ஒரு பாதையில் ஓடிக்கொண்டிருக்கையில் காலில் ஒரு முள் தைத்துவிட்டால், நின்று அந்த முள்ளை எடுப்போம். அது மட்டுமல்ல, இனி ஓடவேண்டிய பாதைமீது அதிக கவனமும் வைப்போம். வழியில் வேறு எங்காவதும் முட்கள் இருக்கின்றனவா என்று கவனமாகப் பார்த்தவாறே நின்று நிதானித்தே முன்னோக்கிச் செல்வோம். முன்பை விட அமைதியாகவும், மெதுவாகவும், எச்சரிக்கையாகவுமே பயணிப்போம். இப்படிப் போகையில் நமக்கு இதுவரை கண்ணில் படாத ஆபத்துகள் வழியில் புலப்படலாம். உதாரணமாக வழியில் ஒரு பாம்பு இருந்தால், முன்பு அதனைக் கவனிக்காது போயிருக்க வாய்ப்புண்டு. ஆனால் அது இப்போது கண்டிப்பாக நம் கண்ணில் படும். அப்போது தெரியும், வழியில் காலில் குத்திய முள், உண்மையில் விஷப் பாம்பை மிதித்துக்கொண்டு போகும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றியிருக்கிறது என்பது! இப்படி நினைப்பது தான் ஆக்கப் பூர்வமான சிந்தனை. அத்தகைய சிந்தனை, நிகழ்காலத்தை சரியான முறையில் எதிர்கொள்ள உதவுகிறது.

நிகழ்காலத்தில் நமக்கு வருகின்ற பிரச்சனைகள், நமக்கு கூடுதல் கவனத்தைத் தந்து இனி வரப்போகும் பிரச்சனைகளைத் துணிவோடு எதிர்கொண்டு வெல்வதற்காகவே வந்திருக்கின்றன என்று நினைக்கவேண்டும். ஆக காலில் ஒரு முள் குத்துவதை ஏற்றுக்கொள்ளுங்கள்; பொறுமையாய் இருங்கள்; இதைத் தாண்டியும் நாம் வாழ்வோம். இந்தக் கண்ணோட்டத்தில் தான் நாம் வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளையும் நோக்க வேண்டும். சில பேர்க்கு வாழ்க்கையில் வரும் அற்பமான பிரச்சனைகளைக் கூட எதிர்கொள்ளும் திறன் இருக்காது. வேறு சிலரோ, மலை போல வரும் பிரச்சனைகளையும் சிரித்தமுகத்துடன் எதிர்கொள்வார்கள்; தம்முடன் இருப்பவர்களுக்கும் உற்சாகத்தைத் தருவார்கள். நாம் எப்போதும் இந்த இரண்டாம் வகை மனிதர்கள் போல ஆகவே முயலவேண்டும்.


வாழ்க்கையில் கஷ்டங்களும் பிரச்சனைகளும் எப்போதும் இருக்கத் தான் செய்யும். அவை பெரும்பாலும் நம்மை மேலும் உறுதியாக்கவே செய்யும். ஒரு பென்சிலுக்குள் ‘லெட்’ எனும் எழுதுபொருள் மரத்தாலான தண்டுப் பகுதிக்குள்ளே இருக்கிறது. அந்த மரப் பகுதியைச் சீவினால் தான் லெட் வெளியே தெரியும்; அப்போது தான் அதை வைத்து எழுத முடியும். பென்சிலைச் சீவச் சீவ, முனை கூராகிறது. அதே போலத்தான் நம்முள் மறைந்திருக்கும் சக்தியும் பிரச்சனைகள் வர வரத் தான் கூர்மை பெறுகிறது. நம்மால் சிறப்பாகச் செயலாற்ற முடிகிறது.


பின் பென்சில் கொண்டு எழுதக் காகிதம் இருக்கிறது. அதன் தரம் மாறுபடலாம்; அது மெலிதாகவோ, தடியாகவோ, சொரசொரப்பாகவோ, அல்லது வழுவழுப்பாகவோ இருக்கலாம். ஆனால் கிடைத்துள்ள காகிதத்தில் நாம் பென்சிலை வைத்துக்கொண்டு எத்தனை அழகான கவிதையை எத்தனை சிறப்பாக எழுதுகிறோம் என்பதில் தான் நம் திறமை இருக்கிறது. அது மட்டும் தான் நம் கையில் இருக்கிறது. இறைவனின் கையில் ஒரு பென்சிலாகவோ பேனாவாகவோ நம் ஆக முயலுவோம்.


நாம் பென்சிலை வைத்து எழுதுகையில் பிழை ஏற்படலாம். பென்சிலின் அடியில் அழிக்க ஓர் ரப்பரும் இருக்கும். அதைக்கொண்டு, தவறாய் எழுதியதை அழித்து விட்டு, மீண்டும் சரியாக எழுத முடியும். முழுவதும் எழுதி முடித்த பின்னர் நாம் எழுதியதைத் தொடக்கத்திலிருந்து ஒரு முறை மீண்டும் படித்துப் பார்ப்போம். எங்கேனும் சொற்பிரயோகங்கள் தவறாக இருப்பது தெரிந்தால் அதனை அழித்துவிட்டு மேலும் சிறப்பான சொற்களை உபயோகித்துத் திருத்தி எழுத முடியும். அதற்குப் பொறுமை அவசியம். நாம் செய்த தவறுகளைச் சரி செய்ய நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும்.

இன்றைய அவசர யுகத்தில், மக்கள் தங்கள் எண்ணங்களை செயலில் கொண்டு வருவதற்கு முன் யோசிப்பதற்காக நேரத்தை வீணடிப்பதில்லை. அந்தப் பொறுமை இல்லாததால்தான் பலருக்கும் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்கோப்பில் வைக்க முடிவதில்லை. எண்ணத்துக்கும் செயலுக்கும் இடையே சிறிது நேரம் தந்தால் அங்கே ஓர் இடைவெளி உருவாகிறது. அந்த இடைவெளி வழியாகத்தான் விவேகத்தின் ஒளி அங்கே பாய முடியும். எங்கே விவேகம் ஒளிர்கிறதோ அங்கே நமக்கு எதையும் சரியாக நோக்கி எடை போடும் திறன் வரும். அப்போது நம்மால் நம் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.


சூரியனுக்கு நேரே கிடக்கும் ஒரு வித்து முளைக்காது. ஆனால் மண்ணுக்குள் பொதிந்த வித்துதான் முளைக்கும். நாம் சிந்திக்காமல் பேசிவிடும் வார்த்தைகள் அடுத்தவர்களைப் புண்படுத்திவிடக் கூடியவை. தீயினால் சுட்ட வடு ஆறிவிடும்; ஆனால் வாயினால் சுட்ட வடு ஆறாது. ஆகவே நாம் அடுத்தவருக்கு ஒரு செய்தியை அனுப்பும் போதோ அல்லது வாய் வார்த்தையில் பேசும்போதோ நாம் கவனமாய் சிந்தித்தே செயல்பட வேண்டும். ஆனால் இன்றோ, சிந்திக்காமல் செயலாற்றுவது, செயலாற்றி விட்டு சிந்திப்பது என்பதே கொள்கையாக ஆகிவிட்டது போலத் தோன்றுகிறது!

இன்று கொரோனா வைரஸ் பெரும் தொற்றுநோயாய் பரவியுள்ளதே உலகில் ஓர் மாபெரும் நிகழ்வாக ஆகியிருக்கிறது; அது நமது வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது; வாழ்க்கையை நாம் எப்படிக் கண்டு, எப்படிக் கையாள்வது என்கிற கண்ணோட்டத்தையே முற்றிலும் மாற்றிவிட்டது. நம் குழந்தைகளின் வாழ்க்கை முறையை எடுத்துக்கொண்டால், அது எத்தனை பரபரப்பான ஒன்றாக இருந்தது! பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களையே சரியாகக் கண்ணால் பார்க்க முடியாத ஒரு நிலை இருந்தது. குழந்தைகள் படுக்கையிலிருந்து எழும் முன்பே பெற்றோர் அலுவலகத்துக்குக் கிளம்பிப் போயிருப்பர்; தந்தை இரவு அலுவலகத்திலிருந்து திரும்பும் நேரத்திலோ பிள்ளைகள் உறங்கி இருப்பர். விடுமுறை நாட்களில் கூட பெற்றோர் தம் மடியில் மடிக் கணினிகளை வைத்துக்கொண்டு மும்முரமாயிருப்பார்கள். அந்த மடியில் தம் குழந்தைகளைத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சிப் பேச இடமே இல்லையே?
பெற்றோரிடம் இருந்து அன்போ அரவணைப்போ அதிகம் கிடைக்காமலேயே குழந்தைகள் வளர்ந்தார்கள். கொரோனா வருவதற்கு முன் இதுதான் நிலைமை. ஆனால் இப்போதோ, குழந்தைகளுக்குத் தம் பெற்றோரோடு செலவழிக்க நேரம் கிடைத்திருக்கிறது.


பல தந்தைமார்க்கும் தாய்மாருக்கும் மற்றவரது வாழ்வில் ஒரு நாளில் என்னென்ன காரியங்களெல்லாம் இருக்கின்றன, பிரச்சனைகள் இருக்கின்றன என்றெல்லாம் புரிந்து கொள்ள நேரம் கிடைத்திருக்கிறது. அதனால் ஒருவரோடு ஒருவர் அனுசரித்துப் போகும் மனப்பாங்கும் கூடியிருக்கிறது.


நம் நாட்டில் இன்னும் பல பெண்கள் (வேலைக்குப் போகாத) இல்லத்தரசிகளாய் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடக்கிறார்கள். அப்படி வீட்டிலேயே அடைந்து கொண்டு வீட்டை நிர்வகிப்பதில் அவர்களுக்கு உள்ள கஷ்டங்களையும் பொறுப்புகளையும் பல கணவன்மார்கள் இப்போது அன்றாடம் நேரில் கண்டு புரிந்துகொண்டு, ஆதரவாய் இருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அந்தக் காலத்திலெல்லாம் வெளியே போய் வேலை பார்த்தவர்கள் எப்போதடா வீட்டுக்கு வந்து சேருவோம் என்று ஆவலாய் இருப்பார்கள். அவர்களுக்கு வீடு தான் பாதுகாப்பான, மனதுக்கு நிம்மதி தரும் இடமாக இருந்தது. ஆனால் (கொரோனா வருவதற்கு முன்பான) நிகழ் காலத்திலோ, வீட்டுக்குத் திரும்பி வந்தால், எப்போதடா வீட்டிலிருந்து தப்பித்து மீண்டும் வெளியே போகலாம் என்று மாறிவிட்டது. இருவரும் வீட்டுக்குள் சேர்ந்து இருந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தாலே சண்டைதான் என்பதாக நிலைமை ஆகிவிட்டிருந்தது!


அம்மா ஒரு நகைச்சுவைத் துணுக்கு கேள்விப்பட்டேன். வீட்டில் இருந்த கணவன், மனைவியிடம் “நீ ஏன் பாதுகாப்பு முகக் கவசம் அணியாமல் இருக்கிறாய்?” என்று கேட்டானாம். அதற்கு மனைவி, “நாம் வீட்டுக்குளே தானே இருக்கிறோம்? அதற்கு எதற்காக மாஸ்க் போட்டுக்கொள்ள வேண்டும்? “ என்றாள். அதற்குக் கணவன், “நீ உடனே மாஸ்க்கைப் போட்டுக்கொள்; அப்போதுதான் எனக்கு உன் முழு முகத்தையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் நிம்மதியாய் இருக்கிறது” என்றானாம்! அதாவது கணவனுக்கு மனைவியின் முகத்தைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போய்விட்டதாம்! இருவர் எப்போதுமே சேர்ந்து இருந்தால் இப்படியும் ஆகிவிடுகிறது!

கொரோனா அச்சத்தால் வீட்டில் அடைந்து கிடக்கும் இந்த சமயத்தில் உலகம் பூராவும் எல்லா வீடுகளிலும் சண்டை சச்சரவுகள் அதிகமாகி வருகின்றனவாம். அது பற்றிய கேள்விகள் அம்மாவுக்கு வந்துகொண்டிருக்கின்றன.
ஒரு வேளை அம்மாவின் குழந்தைகளும் வீட்டில் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டாலும், மீண்டும் சமாதானம் செய்து கொண்டுவிடுங்கள். வீடு என்று இருந்தாலே சச்சரவுகள் வராமல் இருக்காது. உங்களால் இயன்றவரை அனுசரித்துப் போக முனையுங்கள்.


கொரோனா வைரஸ் தாக்கமானது நம் வாழ்வின் ஓர் மிகப்பெரும் சம்பவமாக ஆகி, வாழ்க்கை பற்றிய நம் கண்ணோட்டத்தையே புதிதாய் மாற்றி எழுதும் ஓர் நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறது. பல தொழில்கள் முடங்கிவிட்டன; விமானப் பயணம் நின்றுபோயிற்று; பல நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.
மறு புறம் பார்த்தால், காற்று மண்டலம் சுத்தமாகி இருக்கிறது; சுற்றுச் சூழலில் ஏற்பட்டிருந்த சீர்கேடுகள் குறைந்து சம நிலை சிறிதேனும் திரும்பும் நிலைமை வந்திருக்கிறது. காற்றில் மாசு குறைந்ததால் பஞ்சாபிலிருந்து தொலைவிலுள்ள இமய மலையை இப்போது மீண்டும் கண்ணால் காணும் சூழல் வந்துள்ளதாம். ஆறுகளில் நீர் சுத்தமாக ஓடுகின்றதாம். புனித நதியான கங்கையில் சாக்கடை நீர், பிணங்கள், தொழிற்சாலைக் கழிவுகள், மாமிசத்திற்காக வெட்டப்படும் மிருகங்களின் கழிவுகள் என்றெல்லாம் வந்து கலப்பதால் சுமார் 75 சதவீதம் வரை மாசு பட்டுவிட்டிருந்தது. அந்த நீர் தற்போது ஓரளவு சுத்தமாக ஓடுகிறதாம். முன்னர் ஒரு ஒரு காலத்தில் கங்கையில் நீந்திய கங்கா டால்ஃபின் மீன்கள் அழிந்து போகக் கூடிய ஆபத்திலிருக்கும் ஓர் உயிரினமாகக் கருதப்பட்ட நிலையில் அவை தற்போது மீண்டும் அங்கே நீந்துவது காணக் கிடக்கிறதாம்!
இவற்றையெல்லாம் கேள்விப்படும்போது, இயற்கை ஓரளவேனும் தன் சம நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது என்கிற நன்னம்பிக்கை நமக்கு வருகிறது. ஒரு பக்கம் கொரோனாவினால் உண்டாகும் மரணங்கள் நமக்குக் கவலையைத் தந்தால், மற்றோரு புறம் கொரோனாவின் அச்சத்தால் வந்த பல செயல் முடக்கங்களின் பயனாக இயற்கை தன்னைச் சரி செய்து கொள்வது மன நிம்மதியையும் தருகிறது.


மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால், சாலை விபத்துகளும் அவற்றால் வரும் சாவுகளும் நிகழவில்லை. கொலை, கொள்ளை, சூறையாடல், அடிதடிகள் என்று நிகழும் சமுதாயக் குற்றங்கள் பெருமளவில் நிகழவில்லை.
இந்தக் கொரோனா கால கட்டத்தில் ஒரு இருளாழ்ந்த குகையின் முடிவில் வெளிச்சம் தெரிவது போல சில நல்ல விஷயங்களும் வெளிவந்துள்ளன.

ஒரு நாளைக்குக் கூட நம்மால் துறக்கமுடியாத சில விஷயங்களை இப்போது துறந்திருக்கிறோம். அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது மதுபானம். அது கிட்டாது போனதினால் ஒரு சிலரேனும் அந்தக் குடிப்பழக்கத்தை விட்டுவிட முடிந்திருக்கிறது. அதே போலத்தான் ‘ஷாப்பிங்’ எனும் நவீன போதைப் பழக்கம். சில பேர்களுக்கு கடைகளுக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் போய் தேவையுள்ளதையும் தேவையற்றதையும் கண்டபடி வாங்கிப் போடுவது ஒரு போதைப் பழக்கம் போலவே ஆகிவிட்டது.
அவசியப் பொருள்களை வாங்கக் கடைகளுக்குப் போகத்தான் வேண்டும் என்றாலும் தற்போது வந்துள்ள தடை, இந்த ஷாப்பிங் போதையில் சிக்கியவர்களுக்கு ஓர் சுய கட்டுப்பாட்டையும், விழிப்புணர்வையும் தரும் என்று அம்மா எதிர்பார்க்கிறேன்.
அப்படியே, பல பேருக்கு சதா மாமிசம் உண்ணும் வேட்கையைக் கட்டுப்படுத்தி, சைவ உணவுப் பழக்கத்தை நோக்கி மனதைத் திருப்ப இந்த ஊரடங்கு உதவியிருக்கிறது. நம்மால் அடக்கிக் கொள்ளவே முடியாத பல ஆசைகளும் தேவைகளும் இப்போது கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்றன. ஆக, இப்படிப்பட்ட கட்டுப்பாடான ஓர் வாழ்க்கையை வாழ்வதும் நமக்கு சாத்தியமே என்கிற பாடத்தை நாம் இப்போது கற்றிருக்கிறோம்.


பலருக்கும் எப்போதும் வெளியில் போய்ச் சாப்பிடவேண்டும் என்கிற பழக்கம் இருந்தது; வேறு பலருக்கும் வீட்டிலேயே இருந்து கொண்டு, ஆனால் சமைக்காமல் ஓட்டலில் ஆர்டர் கொடுத்து வீட்டுக்கே உணவு வகைகளை வரவழைத்து உண்ணும் பழக்கம் வலுத்திருந்தது. இவர்கள் வெளி உணவை உண்ணும் ஆசையில் வீட்டில் சமைத்த உணவுகளைக் கூட தூக்கி எறிந்து வீணடிப்பார்கள். இப்போதோ வீட்டில் சமைத்தே சாப்பிட்டாகவேண்டிய நிர்ப்பந்தம் வந்து விட்டது; வீட்டுச் சாப்பாட்டின் அருமையை ரசிக்கவும் முடிகிறது.
அதற்காக, அம்மா வெளியிலேயே சாப்பிடவேண்டாம் என்று சொல்ல வரவில்லை. வெளியே உணவகங்கள் நடத்துபவர்களுக்கு அது தொழில்; அதற்கு வரும் வாடிக்கையாளர்கள் மூலம்தான் அவர்கள் வாழ்க்கை ஓடுகிறது; அவர்களும் பிழைக்க வேண்டும்.


ஆனாலும், இந்த சூழ்நிலையின் மூலமாக அம்மாவின் மக்களுக்கு அக முகமாக நோக்கி, நம்மை நாமே சரியாகப் புரிந்து கொள்வதற்கு ஓர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தங்களது கெட்டபழக்கங்களிலிருந்து விடுபட இது ஓரு அரிய வாய்ப்பாக அமைந்துவிட்டது. ஊரடங்கெல்லாம் நீங்கிய பின் என் குழந்தைகள் மீண்டும் பழைய தீய பழக்கங்களுக்குப் பின்னே திரும்பிப் போய்விடாமல் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். எத்தனையோ குடும்பங்களிலிருந்து பிள்ளைகள் பலரும் வந்து “அம்மா, என் தந்தை குடிகாரராய் இருக்கிறார்” என்றெல்லாம் சொல்லி அழுகிறார்கள். அவர்களது கண்ணீரைக் காண அம்மாவுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். அப்படிப்பட்ட தந்தைமார்கள் இந்த சமயத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முழு முயற்சி எடுப்பார்கள் என்று அம்மா எதிர்பார்க்கிறேன். இதை அவர்களுக்கு என் வேண்டுகோளாக வைக்கிறேன்.


எவையெல்லாம் இல்லாமல் முடியாது என்று இத்தனை நாட்கள் நினைத்திருந்தோமோ அவையெல்லாம் அப்படியொன்றும் இன்றியமையாதவை அல்ல என்று இப்போது புரிந்துகொண்டிருக்கிறோம். சில விஷயங்கள் இல்லாது போனாலும் கூட நிம்மதியாய் வாழமுடியும் என்பதை நம் இளம் பிள்ளைகள் இப்போது புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

. நமது எண்ணத்திலும் செயலிலும் உள்ள தவறுகளை சரிசெய்தே ஆகவேண்டும். அதை இப்போது தான், இந்த நிகழும் கணத்தில் தான் செய்ய முடியும். அதைச் சாதிப்பதற்கான திறனை அந்த பரமாத்மா அருளட்டும் என்று அம்மா பிரார்த்திக்கிறேன்.

உலகம் முழுமையுமே பாதிக்கப்பட்டு வலியில் அழுவதைக் காண்கையில் என் இதயம் வேதனயால் துடிக்கிறது” என்று அம்மா, இன்று மடத்திலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ” இந்நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் மன அமைதி பெறவும், உலகம் சாந்தி பெறவும் நாமெல்லாம் இறைவனின் அருள் வேண்டிப் பிரார்த்திப்போம்.”

கடந்த சில பத்தாண்டுகளாகவே அம்மா மனிதகுலம் தான் வாழும் வாழ்கக்கை முறைமையை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றி வற்புறுத்தி வந்திருக்கிறார். இயற்கையோடு இயைந்த விதத்தில் வாழ வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதோடு, அத்தகைய மாற்றம் நிகழாமற் போனால் இயற்கைப் பேரழிவுகளும், நோய்ப்பரவல்களும் அதிகமாகும் என்று எச்சரிக்கையும் விடுத்துக்கொண்டே தான் இருந்தார் அம்மா.

“தன் சுய நலத்திற்காக மனிதன் இயற்கையை அழித்துவந்ததன் எதிர்வினை இப்போது இத்தகைய கொள்ளை நோய்த் தாக்கத்தின் மூலம் வெளி வந்திருக்கிறது” என்றார் அம்மா. “நாமெல்லாம் இயற்கையின் சேவகர்களேயன்றி எஜமானர்களல்ல என்கிற மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொண்டாக வேண்டும். அடக்கம், மரியாதை, சேவக மனப்பான்மை இவற்றை நாம் பயின்றே ஆகவேண்டும். குறைந்த பட்சம், இயற்கையின் முகத்திற்கெதிரான நமது பணிவற்ற நடவடிக்கைகளை இப்போதாவது நிறுத்துவோம். இயற்கைச் சக்திகளின் முன்பு நாம் பணிந்து வணங்கும் நேரம் வந்துவிட்டது; நமது அத்துமீறல்களுக்காக இயற்கையன்னையிடம் மன்னிப்பை வேண்டிக் கேட்கும் நேரம் வந்துவிட்டது. இயற்கையன்னைக்கு எதிரே நாம் செய்யும் எல்லாத் தவறுகளையும் அவமரியாதைகளையும் தாங்கிக்கொள்வாள், பொறுத்துக்கொள்வாள், நம்மை மன்னிப்பாள் என்று இத்தனை காலம் நாம் அலட்சியமாய் இருந்த மெத்தனப்போக்கை உதறித் தள்ளும் நேரம் வந்துவிட்டது. இப்போது இயற்கை நம்மை எழுப்பிவிட்டு சுற்றிலும் பார்க்கும்படி கட்டளையிட்டுவிட்டது. மனித் குலத்தை உலுக்கி எழுப்புவதற்காகவே இயற்கை கோவிட்-19 இன் மூலம் ஓர் எச்சரிக்கை மணியாகப் பேரொலியை எழுப்பியிருக்கிறது.” என்கிறார் அம்மா.

கோவிட்-19 நோயைக் கட்டுப் படுத்தி, அதன் தாக்கத்தை முறியடிக்கும் முயற்சிகளில் பங்கேற்கும் விதமாகவும், இந்நோயால் உடல், மனம், பொருளாதாரம் இவை பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு ஆறுதல் தரும் வகையிலும் மாதா அமிர்தானந்தமயி மடம் ரூ 13 கோடியை (1.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நன்கொடை அளிப்பதாக இன்று அறிவித்துள்ளது. இதில் ரூ. 10 கோடி, பாரதப் பிரதமரின் பி எம் – கேர்ஸ் (PM-CARES) நிதிக்காக்கவும் ரூ. 3 கோடி கேரள அரசின் முதல்வர் அவசரநிலை நிதிக்காகவும் வழங்கப்படுகிற்து. அதோடு, மடம் கொச்சியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் (அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் ஸைன்ஸஸ்) கோவிட்-19 ஆல் பாதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்கு இலவச சிகிச்சையும் அளிக்கும்.

“உலகம் முழுமையுமே பாதிக்கப்பட்டு வலியில் அழுவதைக் காண்கையில் என் இதயம் வேதனயால் துடிக்கிறது” என்று அம்மா, இன்று மடத்திலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ” இந்நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் மன அமைதி பெறவும், உலகம் சாந்தி பெறவும் நாமெல்லாம் இறைவனின் அருள் வேண்டிப் பிரார்த்திப்போம்.”

அம்மா கேட்டுக்கொண்டபடி, அமிர்தா மருத்துவமனை, இலவச மன நல ஆலோசனை தருவதற்க்கென அவசரத் தொலை பேசித் தொடர்பு (24-மணியும் இயங்கக் கூடிய) ஓர் ‘ஹாட் லைன்’ (0476 280 5050) வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நோயின் காரணமாக மன அழுத்தம், கவலை, மனத் தாழ்ச்சி அடைந்துள்ளவர்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு இலவச மன நல ஆலோசனை பெறலாம். சென்ற வாரம் அம்மா இம் மருத்துவமையின் டாக்டர்கள், மன நோய் மருத்துவர்கள், மன நல ஆலோசகர்களிடம் இவ்விதமான சேவைக்கென நேரம் ஒதுக்குமாறு பொதுவான ஓர் வேண்டுகோள் விடுத்திருந்தார். “இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு மன நல ஆலோசனை அவசியமான ஒன்று; இதை என் வேண்டுகோளாக ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இறை நம்பிக்கை உள்ளவராகவோ, இல்லாதவராகவோ இருக்கலாம்; ஆனாலும் ஒரு நாளைக்கு ஓரிரு மணி நேரமாவது இவ்விதமான ஆலோசனை தேவைப் படுவோர்க்கு இலவசமாய் அதை வழங்க நேரம் ஒதுக்குங்கள்” என்று சொல்லியிருந்தார் அம்மா.

கொரோனா வைரஸ் பற்றி அம்மாவின்  அறிவுரை

அம்மாவின் குழந்தைகள் கொரானா வைரஸ் பற்றிய அச்சத்தில் வாழ்கிறீர்கள் என்பதை அம்மா அறிவேன். அமமா உங்கள் எல்லாரையும் பற்றி நினைக்கிறேன்; உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். நீங்கள் எல்லாரும் மிகுந்த எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டிய நேரம் இது. இந்த சவாலை துணிச்சலோடும், சுய கட்டுப்பாடோடும் ஒற்றுமையாகவும் எதிர்கொள்ளவேண்டிய நேரம் இது. நீங்களெல்லாம் அச்சத்துடன் இருக்கிறீர்கள் என்று அம்மாவுக்குத் தெரிகிறதென்றாலும், அச்சம் எவ்விதத்திலும் நமக்கு உதவப் போவதில்லை.  வேண்டியது எச்சரிக்கையும் விழிப்புணர்வும் மட்டுமே. இப்போது துணிச்சல் தான் அத்தியாவசியம். துணிச்சல் இருந்தால் எதையுமே நாம் வெற்றிகொள்ள முடியும். அதனால் பயத்தை விட்டொழித்து துணிச்சலை வரவழைத்துக்கொள்ளுங்கள்.  இந்த வைரஸை ஒழிக்கும் எதிர் வைரஸ் துணிச்சல் மட்டுமே.  தைரியமே நம் மனதின் எதிர்-வைரஸ்.  நீங்கள் தைரிய லட்சுமியை நட்பாக்கிக்கொண்டால், எந்தச் சவாலையும் வெல்லும் துணிச்சலையும் பலத்தையும் பெறுவீர்கள்.

அரசாங்கமும், சட்ட ஒழுங்கு நிர்வாகமும் தந்துள்ள எல்லா அறிவுறைகளையும் கட்டுப்பாடுகளையும் என் குழந்தைகள் எல்லாரும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதே சமயம் தீவிரமாக உள்ளம் உருகப் பிரார்த்தனையையும் செய்யுங்கள். நமது பாட்டிமார்கள் சொல்வார்கள் அல்லவா, “மருந்தையும் குடியுங்கள், மந்திரத்தையும் சொல்லுங்கள்” என்று? அது போல, இந்தச் சூழலில் நபது சிரத்தையான முயற்சிகளோடு கூடவே கடவுளின் அருளும் மிக அவசியம்.  ஒரு போர்க்களத்தில் போராடும் வீரன் எத்தனை சிரத்தையுடனும் கவனத்துடனும் இருப்பானோ அதுபோன்ற மனப்பான்மையை ஒவ்வொரு குடிமகனும் மேற்கொள்ளவேண்டும். குழந்தைகளே,  இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களை இழந்த குடும்பங்களுக்கு மன அமைதி கிட்டவும் பிரார்த்ததை செய்யுங்கள்.

மூன்று வருடங்களுக்கு முன் 2020இல் இவ்வுலகம் சந்திக்கவிருக்கும் ஓர் பேரழிவினைப் பற்றி அம்மா உள்ளுணர்வில் கண்டேன். இதன் பாதிப்பைத் தணிப்பதற்கென, இரண்டு வருடங்களுக்கு முன் அம்மா ‘வெள்ளை மலர்ப்பொழிவு தியானத்தை’  உலக அமைதிக்காகவும், இறையருளைப் பிரார்ததிப்பதற்காகவும் உருவாக்கினேன்.  வரும் ஆபத்திலிருந்து முற்றிலும் தப்பிக்க இயலாது, ஒரளவேனும் அதன் தாக்குதலை அனுபவித்துத் தான் ஆகவேண்டும் என்பதும் அத்  தியானத்தின் சூசகமான கருத்து. உலக நன்மைக்காக, அம்மா இந்த தியான முறையை விளக்கி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இதனை அம்மாவின் குழந்தைகளிடையே பரவலாக்கியும் வந்தேன். குழந்தைகளே, இந்த தியான முறையை நீங்களெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு முறையோ இரு முறையோ கடைப்பிடித்து முழு உலகிற்கும் நலன் பேணவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பிரபஞ்சத்தில் எல்லாமே அலைகள் போன்றும், அதிர்வுகளாகவுமே செயல்படுகின்றன. சென்ற நூற்றாண்டில் பிரஞ்சுக்காரர்கள் ‘கன்கார்டு’ எனும் ஒலிவேகத்தைக் கடந்த வேகத்தில் பயணிக்கும் விமானத்தைக் கண்டு பிடித்தனர். அது உண்டாக்கும்  ‘சோனிக் பூம்’ எனப்படும் ஒலி அலை, கட்டடங்களையே அதிரச்செய்தும் உலுக்கியும் சேதத்தை உண்டாக்கக் கூடியதாகவும் இருந்தது. அதே போல செவிக்கினிய ஓர் பாட்டும் காற்றில் ஒலியலைகளாகவும் அதிர்வுகளாகவும் பரவுகிறது. இப்படி எல்லாமே அலைகளாகவும் அதிர்வுகளாகவுமே உள்ளன. கோபத்தினால் உண்டாகும் அதிர்வுகள் ஒரு விதம்; அது, ஒரு தாய் தன் குழந்தைக் கொஞ்சும் அதிர்வுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அந்தத் தாயன்பும் கூடக் காதல் எனும் உணர்வு உண்டாக்கும் அதிர்வுகளிலிருந்தும்,  காமம் எனும் உணர்வு உண்டாக்கும் அதிர்வுகளிருந்தும் வேறுபட்டது. அதே போல, நமது பிரார்த்தனை எனும் செயல் உண்டாக்கும் அதிர்வுகள் மூலமும், கவனத்துடன் செய்யப்படும் செயல்பாடுகள் மூலமும் நம்மால் வைரஸையும் தடுக்க முடியும்.  தூய சங்கல்பத்தோடு கூடிய பிரார்த்தனைக்கு அத்தகைய சக்தி உண்டு.
படைப்பிலுள்ள எல்லாவற்றிலும் ஓர் தாள லயம் உண்டு. அதில் பூரணப் பிரபஞ்சத்துக்கும் அதில் வாழும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் இடையே மறுக்க முடியாத உறவு உண்டு. இந்தப் பிரபஞ்சமே ஒன்றோடு ஒன்றோடு பின்னிப்பிணைந்த ஓர் மாபெரும் வலை போன்றது. ஒரு வலையின் நான்கு மூலைகளை நான்கு பேர் பிடித்திருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் ஒரு மூலையில் அசைவை உண்டாக்கினால், அது வலையின் எல்லாப் பகுதிகளிலும் உணரப் படும் அல்லவா? அதே போல, நாம் அறிந்தாலும் அறியாவிட்டாலும் நம் ஒவ்வொருவருடைய செயல்பாடுகளும் பிரபஞ்சம் முழுவதிலும் அதிர்வுகளை ஏற்படுத்தத்தான் செய்கின்றன — நாம் தனி மனிதராய்ச் செய்தாலும் சரி, இல்லை ஓர் குழுவாய்ச் செய்தாலும் சரி. அதனால் தான் அம்மா அடிக்கடி சொல்கிறேன், ‘நாம் எவரும் தனித்தனித் தீவு அல்ல; நாமெல்லாம் ஒரு சங்கிலியின் பல கண்ணிகள் போல’ என்று. அதனால் ‘அடுத்தவர்கள் மாறட்டும் நானும் மாறுகிறேன்’ என்று நீங்கள் இருக்காதீர்கள். அடுத்தவர்கள் செய்கிறார்களோ இல்லையோ, நீங்கள் செய்யுங்கள்; உங்கள் உள்ளில் நீங்கள் உண்டாக்கும் மாற்றத்திலிருந்து வெளியுலகிலும் மாற்றம் உண்டாகும்.

ஒரு அடுக்கத்தின் பத்தாவது மாடியில் வசிக்கும் ஒருவர், தரை தளத்தில் வசிக்கும் ஒருவர் வீட்டில் தீப்பிடிப்பதைக் காண்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கீழே வசிப்பவர் உதவி கேட்டுக் கூக்குரல் எழுப்புவது இவருக்குக் காதில் விழுகிறது. இவர், “தரைத் தளத்தில் தானே நெருப்புப் பிடித்திருக்கிறது? அது உங்கள் பிரச்சனை; நான் ஏன் அதைப் பற்றிக் கவலைப் படவேண்டும்?” என்று இருந்தாரேயானால் அது முற்றிலும் முட்டாள்த்தனமானது. தரை நிலையில் பிடித்த தீ கண்டிப்பாக மேல் தளங்களுக்குப்  பரவிவிடும். அதே போல, வேறொருவரின் இன்றைய பிரச்சனை நமக்கே நாளைக்கு வரும்.

இதே போலத்தான் சீனாவில் இந்த கொரானா வைரஸ் தலையெடுத்த போது, நாமெல்லாமே ‘இது சைனாவின் பிரச்சனை; நமது பிரச்சனை அல்ல’ என்று நினைத்திருந்தோம்! கடைசியில் இது நமது பிரச்சனையாகவும் இப்போது ஆகிவிட்டதல்லவா?  அவர்கள் ஏன் இந்த நோயைக் கட்டுப்படுத்தவில்லை என்பது கேள்வியல்ல; நாம் எப்படி இதனை சமாளிக்கப் போகிறோம் என்பது தான் நம்முன் உள்ள கேள்வி. நாம் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும்,விடாமுயற்சியுடனும்  நடந்துகொண்டால் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதோடு, பிறருக்குப் பரவாமலும் தடுத்துக்கொள்ள முடியும். 
என் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும்? நாம் விழுந்து காலை உடைத்துக்கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது நாம் அறைக்குள்ளேயே  இரண்டு மாதம் முதல் ஆறு மாத காலம் வரையில் முடங்கித்தானே இருப்போம்? முறிந்த எலும்பு சேர்ந்து, கால் முற்றிலும் குணமாவதற்கு அத்தனை கால அளவு அவசியமாதலால், அதனைப் பெரும் சுமையாகக் கருதமாட்டோமல்லவா? அதேபோல, கொரோனா வைரஸிலிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் நம்மைத் தற்காத்துக்கொள்ள நம்மைத் தனிமைப் படுத்திக்கொள்தல், தூய்மை பரிபாலித்தல் போன்ற நியமங்களை மேற்கொண்டே ஆகவேண்டும்.  

இந்த வைரஸால் பீடிக்கப் பட்டவர்கள் அச்சப்படக்கூடாது, தனிமையை கண்டிப்பாகக் கடைபிடித்து அடுத்தவர்களுக்குப் பரவிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல், பாதிப்பின் முன் அறிகுறிகளை உணர்ந்தால் பொறுப்பான அலுவலர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்து உதவியை நாடவேண்டும்.

அமிர்தபுரி ஆசிரமத்தில் தற்போது சுமார் 3000 பேர் வசிக்கிறார்கள். இந்தியர்களைத் தவிர பிற தேசத்தும் மக்களும் இங்கே வசிக்கிறார்கள்.  ஆசிரமத்தில் அரசாங்கம் விதித்துள்ள நியமங்களைப் பொறுப்புடன் கடைபிடித்து வருகிறோம்.  வெளியாட்களை உள்ளே அனுமதிப்பதில்லை. இங்கு வசிப்பவர்கள் ஒரு வேளை வெளியூர் செல்ல நேர்ந்தால் பல நாட்களுக்கு அவர்களைத் திரும்பி உள்ளே வர அனுமதிப்பதில்லை.  இவையெல்லாம் அரசாங்கம் விதித்த நியமங்கள்; அவற்றைக் கடைப் பிடித்து வருகிறோம். இங்குள்ள 3000 பேர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இருக்கிறது. அதனால் தான் சட்டதிட்டங்களைப் பரிபாலிக்கிறோம்.

இந்த சமயத்தில் அம்மா, ஆசிரமத்தை விட்டுப் போகாமல் உள்ளேயே வசிக்கும் ஆசிரமவாசிகளைத் நேரிட்டுச் சந்திக்கிறேன். இது வருடத்துக்கொருமுறை நிகழும் ஓர் வழக்கமான சந்திப்பு ஆகும். இந்த சமயத்தில் தான் ஆசிரமவாசிகளுக்கு அம்மாவைத் தனிமையில்  சந்தித்துத் தம் பிரச்சனைகளை அம்மாவிடம் நேரில் பகிரும் வாய்ப்பு கிடைக்கிறது.  வருடா வருடம் சுமார் 25 நாட்கள் அம்மா இதற்கெனவே ஒதுக்குகிறேன். அரசாங்க நியமங்களை அனுசரித்து,  அம்மா தினசரி தியானத்திற்கும் பஜனைக்கும் என ஒரு முறை வெளியே வருகிறேன். (இப்போது இதுவும் நிறுத்தப்பட்டு விட்டது). மற்ற நேரங்களை ஆசிரம வாசிகளின் சந்திப்புக்கும் அவர்கள் பிரச்சனைகளைக் கேட்பதற்கும் ஒதுக்குகிறேன்.

நமது மத்திய அரசும், கேரள மாநில அரசும் மிகச் சிறப்பான விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் இந்த நோய்ப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதனால்தான் இந்தியாவில் இந்த அளவாவது இந்த நோய்ப் பரவலலை கட்டுக்குள் வைக்க முடிந்திருக்கிறது. நாம் மிகுந்த கவனத்துடனும் முன்னெச்செரிக்கையுடனும் கூடவே பிராத்தனைகளுடனும் இந்த நோய் பரவாமல் கட்டுக்குள் வரச் செயல்படுவோம். நமது பாதைக்கு ஒளி காட்டுபவர்களும் அல்லது இருள் உண்டாக்குபவர்களும் நாமே. நமது பாதையில் முள்ளாகவோ அன்றி மலராகவோ இருப்பதும் நாமே. 
மனித முயற்சிக்கு எப்போதும் ஓர் எல்லை உண்டு. நாம் சாலையில் எத்தனை கவனமாக வண்டி ஓட்டிச் சென்றாலும் வேறு ஒரு ஓட்டுனர் கவனக்குறைவாய்த் தம் வண்டியை ஓட்டி நம் மீது இடித்து விபத்து உண்டாக்கலாம். எந்த செயலும் தக்க பலனை நல்க இறையருள் எனும் அம்சம் அவசியம். முதலில் வேண்டியது சரியான முயற்சி. ஆனால் வெற்றி பெற அருள் இன்றியமையாதது. அந்த அருள் வர, பிரார்த்தனை அவசியம்.
தற்போதுள்ள இந்தக் கணத்தில் தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை என் குழந்தைகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்து விடும் மூச்சு கூட நம் வசத்தில் இல்லை.  நாம் நிகழ்காலத்தை  எவ்வளவு நன்றாய் உபயோகிக்கிறோம் என்பதே  நம் வாழ்வின் நீளத்தைத்  தீர்மானிக்கிறது. காரணம் அதில் தான் நம் ஜீவன் நிலை கொண்டுள்ளது. என் குழந்தைகள் தம்மை அறிதல் வேண்டும் என்றே அம்மா எப்போதும் சொல்லி வருகிறேன்.  நீங்கள் உங்களை அறிந்து கொள்ளுங்கள்; விழிப்புடனும், உற்சாகத்துடனும், அமைதியுடனும் உலகத்திற்காகப் பிரார்த்தியுங்கள்.
ஒவ்வொரு நாளும் உங்கள் அறையில் சிறிது நேரம் அமர்ந்து,   “ஓம் லோகா சமஸ்தா சுகினோ பவந்து” எனும் மந்திரத்தை ஜபியுங்கள். இந்த கடினமான கால கட்டத்தில் செய்யும் ஓர் நல்ல பழக்கவழக்கம் ஆகும் அது.

   “ஓம் லோகா சமஸ்தா சுகினோ பவந்து; ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி” 

சிவராத்திரி என்றவுடன் நாம், அது பகவான் சிவனின் இரவு என்றும், சிவனுக்கு வேண்டிய இரவு என்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் பகவான் ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு இரவும் இல்லை பகலும் இல்லை. அவர் உறங்குவதும் இல்லை. எல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவ பகவான் ஆகும்.

சிவராத்திரி, விரதங்கள், விழாக்கள், ஆச்சார அனுஷ்டானங்கள் போன்றவை எல்லாம் நமக்கு வேண்டியேயன்றி, அது கடவுளுக்கு அல்ல. நாம் இதிலிருந்தெல்லாம் அறிந்துகொள்ளவேண்டிய படிப்பினை என்னவெனில் “நீ உன்னை அறிவாயாக” எனும் செய்தியேயாகும்.

சிவன் என்றால் தியாகம் மற்றும் வைராக்கியத்தின் வடிவமாகும். நமக்கு நமது அகங்காரத்தின் பாரமே மிகப்பெரிய பாரமாகும். அந்த பாரத்தை நாம் விடும் பொழுது மட்டுமே சிவப்பதத்திற்கு நாம் உயர்வோம்.

நானே தியாகம் மற்றும் வைராக்கியத்தின் வடிவமான அந்த பரிபூரணமான சிவன் என்று அறிவதே சிவராத்திரி ஆகும்.

மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா என்பது மூன்று வெவ்வேறு சக்திகள் அல்ல. ஒரே ஒரு சக்தியின் மூன்று வடிவங்கள் ஆகும் மின்விளக்கு, மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி இம்மூன்றும் ஒரேயொரு மின்சாரத்தின் மூலமே இயங்குகிறது.ஆனாலும் மூன்றும் மூன்று வகையில் செயல்படுகிறது.

நம்முடைய ரிஷிகள் அனைவரும் ஈசாவாஸ்யம் இதம் சர்வம் என்று கூறியிருக்கின்றனர் இந்தப் பிரபஞ்சம் கடவுள் அணிந்திருக்கும் ஆடை ஆகும் அதில் வசிப்பதும் கடவுளே ஆகும் இவ்விதத்தில் காணும் பொழுது மட்டுமே கடவுளும் இந்த உலகமும் இரண்டல்ல ஒன்றே என்று புரியும். அதனால்தான் “வசுதைவ குடும்பகம்” “லோகா சமஸ்தா சுகினோ பவந்து” என்பதுபோன்ற மந்திரங்களும் உபதேசங்களும் பிரார்த்தனைகளும் ரிஷிகள் நமக்கு கூறியிருக்கின்றனர்.

பிப்ரவரி 21 2020 அமிர்தபுரி அம்மாவின் சிவராத்திரி உபதேசம்

கேள்வி: அம்மா, மனதின் சிந்தனைகளால் சக்தி நஷ்டப்படுமா?

அம்மா: ஆன்மிக சிந்தனையாக இருந்தால் சக்தி கிடைக்கும். உறுதியான மனதை நாம் பெறலாம். இறைவன் தியாகம், அன்பு கருணை இவற்றின் உறைவிடமாவார். இறைவனைப்பற்றி நினைக்கும் அளவுக்கு நம்மிடமும் அந்த நல்ல குணங்கள் வளருகின்றன. மனம் விரிவடைகிறது. ஆனால், உலகியல் விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கும் மனம் உலகப் பொருள்களால் நிறைகிறது. தொடர்ந்து பலப்பல சிந்தனைகள் மனதில் மாறிமாறித் தோன்றுகின்றன. எண்ணங்களுக்கேற்பு பலன்கள் செயல்படுகின்றன. தீய குணங்கள் அதிகரிக்கின்றன. மனம் குறுகியதாகிறது. நாம் விரும்பியது கிடைக்காத போது மனம் தளர்கிறது. கோபம் வருகிறது. சக்தி நஷ்டமாகிறது. டார்ச் லைட்டை ஒவ்வொருமுறை போட்டு அணைக்கும் போதும் அதன் சக்தி குறைகிறது. அதுபோல் பொருள்களின் மீதுள்ள விருப்பத்தை அதிகரிக்கச்செய்யும் விஷயங்களைப் பற்றிப்பேகம் போது நம் மனம் பலவீனமடைகிறது. ஆன்மீக விஷயங்களைப் பேசுவதும், சிந்திப்பதும் பாட்டரியை சார்ஜ் செய்வது போன்றது. இதனால் சக்தி அதிகரிக்கும்.