அம்மாவின் செய்தி

குழந்தைகளே,

நமது பாரத தேசத்தின் கலாசாரத்தின் சின்னமாய் இருப்பது சம்ஸ்கிருத மொழி. மிகத் தொன்மையான நமது பாரதீய கலாசாரத்தின் வாகனமாக விளங்குவது சம்ஸ்கிருத மொழி.  மனித மனத்தில் ஓர் மாற்றத்தை உருவாக்கக் கூடிய ஓர் தனிப்பட்ட சக்தி சம்ஸ்கிருத மொழிக்கும் அதன் ஒலி அதிர்வுகளுக்கும் உண்டு.

பாரதத்தில் மட்டுமல்ல, உலகத்திலுள்ள எத்தனையோ மொழிகளுக்கு மாதாவாக இருப்பது சம்ஸ்கிருதம்.

எல்லா பாரத மக்களின் பல்வேறு கலாசாரங்களையும் ஒன்றாய்க் கூட்டி  இணைப்பது சம்ஸ்கிருத மொழியாகும். சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ள வேதங்களும், புராணங்களும், ராமாயண மகாபாரத இதிகாசங்களும் பாரதத்தில் உள்ளேயும் வெளியேயும் உள்ள எத்தனையோ மொழிகளில் உள்ள சிறப்பான படைப்புகளுக்கு  மூலங்களாய் அமைந்துள்ளன.

உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த நூல்களைப் படித்தும், கேட்டும், மனனம் செய்தும் மெய்யறிவு  பெறுபவர்களாக ஆகிவருகின்றனர். அறநெறி உணர்வும், பக்தியும், ஞானமும், நல்லொழுக்கங்களும் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

நமது கலாசார ஒருமைப் பாட்டுக்கும், மக்களின் அறிவு மேம்பாட்டுக்கும், சம்ஸ்கிருத மொழி வழிகோலுகிறது. இலக்கிய மேடைகளிலும், கலைகளின் அரங்கங்களிலும் நம் எல்லோரையும் ஒருங்கிணைத்ததும், அறிவு நல்கியதும் சம்ஸ்கிருதமேயாகும். சம்ஸ்கிருதத்திலுள்ள அகர வரிசையே நம்  நாட்டில் உள்ள எல்லாமொழிகளிலும் அனேகமாகப் பின்பற்றப் படுகிறது. ஆகவே பாரதத்தின் உண்மையான தேசிய மொழி சம்ஸ்கிருதமேயாகும்.

நமது பண்டைய பாரதத்தின் சாத்திரங்களையும், இலக்கியங்களையும் மிகச் சரியான விதத்தில் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கு சம்ஸ்கிருத மொழி அறிவு மிகவும் இன்றியமையாதது. சுருக்கிச் சொல்ல வேண்டுமென்றால், சம்ஸ்கிருத மொழிக்குப் புத்துயிர் கொடுப்பதன் மூலமே நமது கலாசாரத்தை உன்னத நிலைக்குக் கொண்டுவர முடியும்.

ஆகவே சம்ஸ்கிருத மொழியைக் கற்பதையும், அதைப் பிரச்சாரம் செய்வதையும் உற்சாகப்படுத்த வேண்டியது, நமது தேசத்தின் பண்பாட்டை நேசிப்பவர்களும், ஆதரிப்பவர்களும் அவசியம் செய்ய வேண்டிய ஓர் கடமை ஆகும்.

இம்மொழியை பெருமளவு பரப்பாமல் நமது கலாசாரத்துக்கு புது உத்வேகம் தருவது சாத்தியமில்லை.  இந்தத் திசை நோக்கிப் பயணப்பட நம் மக்கள் செய்யும் எந்தவிதப்  பிரச்சாரங்களும், செயல்பாடுகளும் போற்றுதலுக்கு உரியவை. 

இவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூடுதல் சக்தி உண்டாகட்டும் என்றும்,  அது மேலும் மேலும் வளரட்டும் என்றும், குறிக்கோள் விரைவில் நிறைவேறட்டும் என்றும் அம்மா பரமாத்மாவிடம் பிராத்திக்கிறேன்.