பயபக்தியும் அறிவியலும் கட்டுரையின் தொடர்ச்சி….

கேள்வி: மனிதனிடம் பயபக்தியை வளர்க்கும் மதத்தைவிட இயற்கையைப் பற்றிக் கற்பிக்கும் நவீன அறிவியல் அல்லவா சிறந்தது?

அம்மா: மதத்தில் இல்லாத எதையும் அறிவியலில் காணமுடியாது. மதம் இயற்கையைக் காப்பாற்றுமாறுதான் கூறுகிறது. அனைத்தையும் இறைவனாகக் கண்டு அன்பு செலுத்தவும், தொண்டு செய்யவுமே மதம் கற்பிக்கிறது. மலைகளையும், நதிகளையும், மரங்களையும், காற்றையும் சூரியனையும், பசுக்களையும் ஒவ்வொரு விதத்தில் நம் முன்னோர் ஆராதித்து வந்தனர். பாலிலிருந்து தயிர், மோர், வெண்ணெய் அனைத்தும் நமக்கு கிடைப்பதுபோல், மதத்திலிருந்து நமக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்.
மதத்தில் கூறப்படும் பயபக்தி என்பது நம்மைப் பயமுறுத்துவதற்காக அல்ல; நம்மிடம் சிரத்தையை வளர்ப்பதற்காக ஏற்பட்டதாகும். எச்செயலும் சரியான பலனைத் தரவேண்டுமெனில் அதில் சிரத்தை இருக்கவேண்டும். சிரத்தை இருந்தால்தான் பொறுமை இருக்கும். பொறுமையுள்ளவர் செய்யும் செயலே சரியான செயலாக இருக்கும். இறைவனிடம் பயபக்தி என்பதைக் கொண்டு நீங்கள் பாவனை செய்வது என்ன? இறைவனிடம் காட்டும் பயபக்தி என்பது, ஒரு ஆசிரியரிடம் காட்டும் மரியாதை, தனது தாயுடன் உள்ள நெருங்கிய உறவு என இரண்டும் ஒருங்கே இணைந்ததாகும். இந்த மனோபாவம் தான் பரமாத்மாவின் மீது நமக்கு இருக்க வேண்டும். அது வெறும் பயமல்ல; மாறாக, நம்மிடம் விவேகத்தை வளர்க்க உதவும் தத்துவமாகும்.

தீயசெயல்கள் செய்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்க நேரும் என்று கூறுவது, நமது விவேக சக்தியை விழிப்புறச் செய்வதற் காகவே ஆகும்; அல்லாது, நமது கையை வெட்டுவதற்கு, எங்கோ ஆகாயத்தில் ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் இறைவன் வாள், கதையுடன் வருவார் என்பதல்ல அதன் பொருள். அனைத்து உயிரினங்களின் இதயங்களிலும்தான் இறைவன் உறைகிறார். இயற்கையில் ஒவ்வொரு உயிரினத்தையும் பாதுகாத்து, பராமரிப்பதன்  மூலம் நாம் இறைவனையே வணங்குகிறோம்.

“உன்னிடம் வைரக்கல் இருக்கிற்து. அது அறியாமை என்ற எண்ணெ யில் விழுந்து கிடப்பதால் அதன் ஒளி மங்கியிருக்கிறது. அதன் ஒளியை மீண்டும் பெறு. நீ உன்னைப் பார்; நீ யாரென்பதைப் அறிந்து கொள்; அகந்தையைத் துறந்து உன் உள்ளுணர்வை விழிப்புறச்செய். உனது தர்மம் என்ன என்பதைப் புரிந்துகொள். நீ ஐந்து அல்லது ஆறடி உயரத்தில் அடங்கும் ஒரு மனிதனல்ல; அழிவற்ற இறை தத்துவமா வாய். அதைப் புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்து“ என்றே மதம் சொல்கிறது. பூனையைக் கண்டால் பயந்து ஓடுகின்ற எலிக்குஞ்சைப் போல் ஆகாமல், விலங்குகளின் தலைவனான சிங்கத்தைப் போல் ஆகவே நாம் முயல வேண்டும். இதைத்தான் மதம் கற்பிக்கிறது. மதம் என்பது சக்தியின் மந்திரமா கும். மதம் என்பது மனிதனிடம் உள்ள மதத்தை (அகந்தையை) நீக்குவதற்குரிய தத்துவமாகும்.

இறைவன் மீதுள்ள பயபக்தி நமது பலவீனத்தைக் கடந்துசெல்ல நமக்கு உதவுகிறது. ஒரு நோயாளியின்  முன்னால் அவன் சாப்பிடக் கூடாத உணவுப்பொருள் இருந்தால், ஆசையை அடக்க முடியாமல் அவன் அதை எடுத்துச் சாப்பிட்டுவிடுவான். இதுதான் நமது மனோ வாசனை. அந்தச் சமயத்தில், அதைச் சாப்பிடுவதால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றியோ, மரணத்தைப் பற்றியோ கூட அவன் சிந்திப்பதில்லை. நாம் நம்மைவிட நமது மனோ வாசனைகளுக்குத் தான்  அடிமையாகி இருக்கிறோம். இந்தப் பலவீனங்களிலிருந்து விடுபட இறைவன்மீது உள்ள பயபக்தி உதவுகிறது. வெகுநாட்களாகப் புகைபிடித்துப் பழகிய ஒருவன், “இனி புகைபிடிக்க மாட்டேன்“ என்று கூறும்போதே அவனது உதடுகளில் சிகரெட் இருப்பதைக் காணலாம். காரணம், புகைபிடிப்பது என்ற மனோ வாசனைக்கு அவன் அடிமை யாகி விட்டான். அதிலிருந்து விடுபட வேண்டுமெனில், சிகரெட்மீது வெறுப்பு வராமல் முடியாது. புகைபிடிப்பதால் ஏற்படும் பின் விளைவு களை நினைவுகூர்ந்து மனதிற்கு அந்த வாசனையை வெறுக்கக்கூடிய ஆற்றலை அளிக்கவேண்டும். இதேபோல், இறைவன்மீது கொள்ளும் பயபக்தி மனதிற்கு ஆற்றல் அளிப்பதற்காகவே ஆகும்.

மத தத்துவங்கள் மிகக் கடுமையாகத் தோன்றலாம். “இவ்வளவு கடுமையாக இருக்க வேண்டுமா?“ என்று நாம் சிந்திக்கலாம். ஆனால், தளர்வில்லாத இந்தக் கடுமைக்குக் காரணம் நம்மீது உள்ள உண்மை யான அன்பாகும். அறுவை சிகிச்சைக்காகக் கொண்டு வரப்பட்ட ஒரு சிறுவனிடம் மருத்துவர், “அன்புக் குழந்தாய்! அறுவை சிகிச்சை செய்தால் உனக்கு வலிக்கும்; அதனால் நீ போய்விடு“ என்று கூறினால், அது அந்தச் சிறுவன் மீது கருணையா அல்லது துரோகமா?  அதுபோல், தர்மத்தின் பாதையிலிருந்து நாம் விலகும்போது தெய்வத்தின் மீது உள்ள பயபக்தி நம்மை நேர்வழிக்குத்  திருப்பி விடு கிறது. அது நம்மிடமுள்ள மாசை அகற்று கிறது. இறைவன் தண்டிப்பார் என்ற பயமே நம்மிடம் சிரத்தையை ஏற்படுத்துகிறது. இறைவனின் தண்டனையும் உண்மையில் நமக்குப் பாதுகாப்பே ஆகும். சொல்வதைக் கேட்காமல் தவறு செய்யும் பிள்ளையைத் தாய் தண்டிப்பது, பிள்ளை மீது அன்பு குறைவாக உள்ளதால் அல்ல; அப்போது அனுபவிக்கும் வேதனை பின்னர் அவனைப் பெரிய ஆபத்துகளில் அகப்படாமல் காப்பாற்றும்.

இறைவன் மீதுள்ள பயபக்தியைக் குறித்துப் பலர் தவறான கருத்து கொண்டுள்ளனர். தவறு செய்யாத மனிதர் யாருமில்லை. “தவறு செய்தால் இறைவன் தண்டிப்பார்; எனவே, அதிலிருந்து தப்பிப்பதற் காகக் கோயிலில் பத்து ரூபாய்க்கு விளக்கு வழிபாடு செய்தால் போதும்.“ என்பதுதான் பலரின் எண்ணம். “எனது விளக்கின் வெளிச்சத்தில் அவர் இரண்டு கிலோமீட்டர் நடந்தபின் இறைவனுக்கு என்மீது அன்பு தோன்றும்“ என நினைப்பது சரியான இறை நம்பிக்கை யல்ல. இருக்கும் நம்பிக்கையையும் அழிக்கும் சிந்தனை ஆகும். பின் எதற்காக ஆலயங்களும் வழிபாடுகளும் என்று கேட்டால், நம் மனதில் தர்ம சிந்தனையை வளர்ப்பதற்காகவும், நமது மனதைப் பரந்ததாக மாற்றுவதற்காகவுமே ஆகும். மாறாக, இறைவனுக்குப் பாதை தெரிவதற்கு நாம் விளக்கேற்றத் தேவையில்லை. இது சூரியனுக்கு வழிகாட்டுவதற்காக, மெழுகுவத்தி வெளிச்சம் தருவது போன்றதாகும்.

மாலைநேரத்தில் நல்ல எண்ணெய் விளக்கு ஏற்றுவது இயற்கைக்கும் நலன் செய்யும். அதிலிருந்து வரும் புகை, சுற்றுப்புறத்தில் காணப் படும்  தீய கிருமிகளை அழிக்கும். இந்த ஆசாரங்களின் மூலம், மறைமுகமாக இயற்கைப் பாதுகாப்பையே நமது முன்னோர் கருத்தில் கொண்டிருந்தனர்.

பெரிய புலமையோ, கல்வித்தகுதியோ இல்லாவிடினும் நமது முன்னோர் காட்டித்தந்த அத்தகு பயனுள்ள ஆசாரங்களுக்குத் தடைவராமல் இருக்க மத உணர்வே நமக்கு வழிவழியாக உதவி வருகிறது. வீட்டில் பட்டினி என்றாலும், பத்துப் பைசா கிடைத்தால் எண்ணெய் வாங்கிவந்து மாலைநேர விளக்கு ஏற்றுவர்; மாலையில் தீபம் ஏற்றுவதை நிறுத்துவதில்லை. இறைவன்மீது கொண்ட பயபக்தியே இதன் காரணமாகும்.

(தொடரும்…)