கேள்வி: விக்கிரக ஆராதனையின் (உருவ வழிபாடு) தத்துவம் என்ன?

அம்மா: உண்மையில் இந்துக்கள் விக்கிரகத்தை (கல்லை) வணங்குவதில்லை. எங்கும் நிறைந்திருக்கும் தெய்விக சைதன்யத்தைத்தான் விக்கிரகத்தின் மூலம் வணங்குகின்றனர். தந்தையின் படத்தைக் காணும் மகன் , அதை வரைந்த ஓவியரை நினைப்பதில்லை; தந்தையையே நினைவு கூர்கிறான்.காதலி அளித்த ஒரு பேனாவையோ, கைக்குட்டையையோ காணும்போது காதலன் தனது காதலியை நினைக்கிறானே அன்றி அந்தப் பொருட்களை நினைப்ப தில்லை. அவன் அதற்குப் பதிலாக வேறு எந்தப் பொருட்க ளைக் கொடுப்பதாகக் கூறினாலும் அவற்றைப் பிறருக்குக் கொடுக்க மாட்டான். ஒரு சாதாரண  வாலிபனுக்கு இப்படிப்பட்ட மனோ பாவம் இருக்குமேயானால் இறைவனின் நினைவை மனதில் விழிப் புறச் செய்யும் விக்கிரகம் பக்தனுக்கு எத்தனை விலைமதிப்புள்ளதாக இருக்கும்! விக்கிரகம் பக்தனைப் பொறுத்தவரை வெறும் சிலை அல்ல;சைதன்யம் நிறைந்த தெய்விக உருவமாகும்.

சிலர், ” திருமணம் என்பது வெறும் தாலி கட்டும் நிகழ்ச்சி தானே?” என்று சொல்லக்கூடும். உண்மைதான், வெறும் நூலைத்தான் கழுத்தில் கட்டுகிறார்கள், ஆனால் அந்த நூலுக்கும் அந்த முகூர்த்தத்திற்கும் எவ்வளவு மதிப்புக் கொடுக்கிறோம்! இல்லற வாழ்வின் அடித்தளத்தை எழுப்பும் முகூர்த்தமாகும். இதேபோல் விக்கிரகத்தின் மதிப்பு வெறும் கல்லின் விலை அல்ல. அது விலைமதிப்பற்றதாகும். பிரபஞ்சத்தின் தலைவனுக்கு நிகரான இடத்தை அதற்கு அளிக்கி றோம். விக்கிரகத்தை வெறும் சிலையாகக் காண்பது அறியாமை யாகும். “இதன் மூலமாக நான் இறைவனையே வணங்குகிறேன்” என்ற சங்கல்பத்துடன் தான் பூஜை செய்கின்றனர்.

எங்கும் நிறைந்த இறை சைதன்யத்தை எந்தவிதமான சின்னத்தின் உதவியும் இன்றி வணங்குவது என்பது சாதாரண மக்களுக்கு சிரமமானதாகும்.பக்தி உணர்வை வளர்க்கவும், மனதை ஒருமுகப்ப டுத்தவும் விக்கிரகம் மிகவும் உதவியாக இருக்கிறது.விக்கிரகத்திற்கு முன்னால் நிற்கும்போது கண்களை மூடிதான் நாம் வணங்குகிறோம். இவ்வாறு மனதை உள்முகமாக்கவும் உள்ளே இருக்கும் சைதன் யத்தை விழிப்படையச் செய்யவும் விக்கிரகம் உதவுகிறது. தங்கத்தை உபயோகித்துத்தான் வளையல்,தோடு,சங்கிலி, மோதிரம் என அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.தங்கமே அனைத்து நகைகளுக்கும் ஆதாரம். அதுபோல் அனைத்தின் ஆதாரமாகத் திகழ்பவர் கடவுள்.சிவனாக இருந்தாலும் விஷ்ணுவாக இருந்தாலும் முருகனாக இருந்தாலும் அனைத்திலும் ஒன்றேயான தெய்விக சைதன்யத்தைத் தரிசிக்க வேண்டும். மக்கள் பல கலாசாரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் தான் இப்படி பலவிதமான தெய்விக உருவங்கள் வடிவமைக்கப்பட்டன. அவரவர்களுக்கு விருப்பமான கடவுள் வடிவத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

கண்ணாடியில் நம் முகத்தைத் தெளிவாகக் காண வேண்டுமெனில், அதிலுள்ள தூசியையும் பிற அழுக்குகளையும் துடைத்து நீக்க வேண்டும். அதேபோல் நமது மன அழுக்குகளை நீக்கினால் தான்
இறைவனைத் தரிசிக்க முடியும். நமது மனத்தைத் தூய்மைப்ப்டுத்தி ஒருமுகப்படுத்துவதற்கு உதவியாக விக்கிரக வழிபாட்டையும் பிற ஆசாரங்களையும் நம் முன்னோர் ஏற்படுத்தி வைத்தனர். ஸநாதன தர்மத்தில் கடவுளை உள்ளேதான் தேடுகிறோம்; புறத்தில் அல்ல. உள்ளே இறைவனைத் தரிசிக்க முடிந்தால் எங்கும் அவரைக் காண இயலும்.

உண்மையில் இறைவனுக்கு அகமும் புறமும் இல்லை. நமக்கு “நான்”என்ற எண்ணம் இருப்பதால் தான் அகம், புறம் என்று தோன்று கிறது. இப்போது நம் மனம் வெளிமுகமாக இருக்கிறதே அன்றி உள்முகமாக இல்லை. அது பல பொருட்களிலும் அவற்றின் மீதுள்ள பற்றினாலும் பிணைக்கப் பட்டுள்ளது. அப்படிப்பட்ட மனதை மீண்டும் நம் கைவசம் கொண்டு வந்து நம்முள்ளே இருக்கும் இறை சக்தியை விழிப்புறச் செய்வதற்காகவே விக்கிரக வழிபாடு ஏற்பட்டுள்ளது.

பயபக்தியும் அறிவியலும்

நமது எல்லாச் செயல்களிலும் பயபக்தியைக் காணலாம். பயம் இருப்பதால்தான் நாம் எதையும் கவனமாகச் செய்கிறோம். இல்லாவிடில், நமக்குச் சிரத்தை வருவது கடினம். நடக்கும்போது கவனமாக இருப்பது, விழுந்துவிடுவோம் என்ற பயத்தால் ஆகும். ஒவ்வொருவரும் அவரவர் இயல்புக்கேற்ப மனதில் தோன்றியதைப் பேச ஆரம்பித்தால், அனாவசியமான பலவற்றைப் பேசநேரிடும். அது பின்னர் வழக்கானால் சிறைக்குச் செல்ல நேரிடும். அந்தப் பயத்தால் பேச்சிலும், செயலிலும் கவனம் செலுத்துகிறோம். சிரத்தையுடன் படிப்பது தேர்வில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால்தான். இப்படிப் பார்த்தால் ஒவ்வொரு நிமிடமும் நாம் பயந்துதான் வாழ்கிறோம்.

விதை விதைத்தால் சரியான நேரத்தில் நீரும், உரமும் இட வேண்டும். இல்லையெனில், விதை அழிந்துவிடும்; நாம் பட்டினி கிடக்க நேரிடும். பட்டினியைக் குறித்து நினைத்தபோது, மனிதனிடம் சிரத்தை வந்தது; விவேகமும், வைராக்கியமும் விழிப்படைந்தன. இவ்வாறு ஒரு விதை, ஆயிரக்கணக்கில் பழங்களும், விதைகளும் தரும் பெரிய மரமாக மாறியது. பட்டினியைக் குறித்து இருந்த பயமானது, சிரத்தையுடன் வேலை செய்யத் தூண்டுதல் அளித்தது. இறைவன்மீதுள்ள பயபக்தியும் இதுபோன்றதே. அது விவேகத்துடன் வேலை செய்ய மனிதனுக்குத் தூண்டுதல் அளிக்கிறது. அந்தப் பயம் நம்மைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்கிறது.

அதேசமயம், வேறு எல்லா பயங்களும் மனதின் அமைதியைக் குலைக்கும்போது, இறைவன்மீதுள்ள பயபக்தி அமைதியை அளிக்கிறது. இதுவே மற்ற பயங்களுக்கும், இறைபக்திக்கும் இடையிலுள்ள முக்கியமான வேறுபாடாகும். இறைபக்தி உள்ளவன் அம்மாவின் மடியில் இருக்கும் குழந்தையைப் போல் கவலையின்றியும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறான். அதனால், அவன் தவறை நோக்கிச் செல்வதில்லை. அவனுடைய செயல் தனக்காக உரியதல்ல; இறைவனுக்கு உரியதாகும். அத்தகு செயல்கள் அனைத்து உயிரினங்களுக்கும் நலன்புரிவதாக இருக்கும். சொர்க்கம் எங்கே இருக்கிறது என்று கேட்டால், வேலை இருக்குமிடத்தில் இருப்பதாக அம்மா கூறுவேன். உழைப்பு எங்கே இருக்கிறதோ அங்கே சொர்க்கம் இருக்கிறது. உழைப்பு இல்லாத இடம் நரகமாகும். ஆனால், செய்யும் செயல் தர்மத்தோடு கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறு, தர்மத்தோடு கூடிய செயல் செய்யுமாறு மதம் தூண்டுகிறது.

இறைவன் எப்போதும் கருணை பொழிந்து கொண்டிருக்கிறார். அதை முறையாகப் பயன்படுத்துமாறு மதம் கூறுகிறது. பகல்வேளையில் கதவுகளை எல்லாம் அடைத்துவிட்டு, அறைக்கு உள்ளே இருந்துகொண்டு, இருளாக இருப்பதாகக் கூறி, சூரியனைப் பழிசொல்வதால் பயனேதுமில்லை. கதவைத் திறந்து, நாம் ஒளி உலகிற்கு வரவேண்டும். அதற்கு இறைவன் தந்த ஆரோக்கியமும் இருக்கிறது. சிலர், நமது மனோவாசனைகளை அடக்குவது தவறு; மனவாசனைகளுக்கேற்றவாறு செயல்படவேண்டும்“ என்று கூறுவர். ஒருவன் அடுத்த வீட்டுக்காரனைக் கொல்ல விரும்பக்கூடும். அந்த மனோவாசனைகளுக்கேற்ப நடக்க அவன் தீர்மானித்தால், அதன் பலன் என்னவாக இருக்கும்? எனவே, மனோவாசனைகளைச் சரியான பாதையில் திருப்பிவிட முயல வேண்டும். இறைவன்மீது பயபக்தி வேண்டும் என்று கூறுவது அதற்குத்தான்.

இன்று இயற்கைப் பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றி எத்தனையோ விஷயங்களை அறிவியல் சொல்லிக் கொடுத்தாலும், அவற்றில் ஒன்றையாவது நடைமுறையில் கொண்டுவர நாம் முயல்கிறோமா? இருக்கும் சோலைகளையும், காட்டையும் வெட்டி அழிக்கவல்லவா செய்கிறோம்? அதற்கு பதில் விவசாயத்திற்கு ஏற்ற, லாபம் தரும் சில மரங்களை நடுகிறோம். அவை வளர்வதற்குச் செயற்கை உரங்களும், கிருமிநாசினிகளும் தேவை. நாட்டு மரங்களுக்குள்ள கிருமிகளை எதிர்க்கும் சக்தி அவற்றிற்கில்லை. மாலையில் இறைபூஜையை நினைவுபடுத்தும் நறுமணம் கமழும் முல்லை, மல்லிகை இவற்றிற்குப் பதிலாக இன்று வீட்டு முற்றத்தைக் கள்ளி, முள் செடிகள் அலங்கரிக்கின்றன. மனிதனின் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே அவன் வளர்க்கும் செடிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகிறது.

துளசி, வில்வம், அருகு போன்ற இலைகள் இட்ட நீரை, காலையில் பிரசாதமாக அருந்திய நம் முன்னோர்களுக்கு வேறு டானிக் தேவைப்படவில்லை. இவற்றின் மருத்துவ குணங்களைப் பரிசோதனை நடத்தி இன்று நிரூபித்துள்ளபோதும், முன்னோர் தினசரி வாழ்க்கையில் அவற்றிற்குக் கொடுத்திருந்த இடத்தை இன்று யாராவது கொடுக்கிறார்களா? எந்த வீட்டிற்கு விருந்தினர் சென்றாலும், முன்பெல்லாம் முதலில் நீர்மோரோ, இளநீரோ கொடுப்பார்கள். இன்றோ, காபி, தேநீர் அல்லது செயற்கை பானங்களில் ஏதாவது ஒன்றைக் கொடுக்கிறார்கள். சிறிதுகாலம் முன்புவரை எலுமிச்சம்பழ சர்பத் கிடைக்காத பெட்டிக்கடை இல்லை. இன்று அதற்குப் பதிலாக, பல நிறமும், சுவையுமுள்ள செயற்கை யான குளிர்பானங்கள் கிடைக்கின்றன. பலமடங்கு அதிகவிலை கொடுத்து, உடல்நலத்திற்குக் கெடுதல் என்பது தெரிந்தும் அதை வாங்கிக் குடிக்க நாம் தயங்குவதில்லை. தென்னை, எலுமிச்சை மரங்கள் இருந்த இடங்களில் இன்று ரப்பர் போன்ற மரங்கள் பயிரிடப்படுகின்றன. எதனால்? லாப நோக்கத்துடனா அல்லது இயற்கை மீது கொண்ட அன்பாலா?

சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கூட பயபக்தியால் வயதில் பெரியவர்களுக்கு முன்னால் புகைபிடித்ததில்லை. இன்று புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்கைப் பற்றி அறியாதவர் யாருமில்லை. புகைபிடிக்கக்கூடாது என்று கூறும் மருத்துவர் உதட்டிலும் ஒரு சிகரெட் புகைந்து கொண்டிருக்கும். சிகரெட் பெட்டியின் மேல் “இது உடல்நலத்திற்குத் தீங்கானது“ என்று எழுதியிருந்தபோதும், யாராவது அதைப் பொருட்படுத்துகிறார்களா?
புகைபிடிப்பவர் தனக்கு ஏற்படுத்திக் கொள்வதைவிட, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு அதிகத் தீங்கை ஏற்படுத்துகிறார் என்று அறிவியல் கூறுகிறது. மனிதனை நேர்வழியில் செல்ல உதவியதும், இயற்கைக்கு நன்மை தருவதாக அமைந்ததும், பயபக்தியுடன் கூடிய ஆசாரங்களா அல்லது வெறும் அறிவா? அறிவு வேண்டாம் என்று கூறவில்லை. அறிவைப் போலவே ஆசாரமும், அனுஷ்டானமும் வேண்டும்; அவ்வளவுதான். நமக்கு அறிவு இருக்கிறது. ஆனால், விவேக புத்தியில்லை. இந்த இடத்தில்தான் பயபக்தியின் முக்கியத்துவம் வருகிறது. அறிவு புத்தியோடு மட்டும் நின்றுவிட்டால் போதாது; இதயத்திலும் நிறைய வேண்டும்; வாழ்க்கையில் செயலாக வெளிப்படவேண்டும். அதற்கு மதம் அவசியம்.

இயற்கையை இறைவனின் அம்சமாகக் காணவும், அன்பு செலுத்தவும், வழிபடவும், அதனுடன் இணைந்து வாழவும் நமக்குப் பாதை வகுத்துத் தருவது மதமாகும். தான் இயற்கையின் பிரிக்க முடியாத அங்கமென்ற உணர்வை மனிதனிடம் ஏற்படுத்தவும், அத்துடன் இயற்கையைக் கடந்து நிற்கும் பரம தத்துவத்தை அனுபூதியில் அறியவும் கூடிய சக்தியை மனிதனிடம் விழிப்புறச் செய்யவும் மதம் உதவுகிறது.

மத உணர்வின்மூலம் மனிதனுக்குக் கிடைத்த பயபக்தி அவனுக்கும், இயற்கைக்கும் நன்மையையே செய்துள்ளது. அதன்மூலம் இயற்கை யின் மீது அன்பு செலுத்தவும், அதைப் பாதுகாக்கவும் அவன் கற்றுக்கொண்டான். ஒரு இடத்தில் சட்டத்தைக் காக்கும் காவலர் இருந்தால், காவலர் மீதுள்ள பயத்தால் அங்கு திருட்டு மிகவும் குறையும்; பாதுகாப்பு உணர்வு ஏற்படும். அதுபோல் இறைவனிடம் உள்ள பயபக்தி சமூகத்தில் தர்மத்தை நிலைநிறுத்த உதவும். சரியான மத உணர்வைப் பெறுவதன்மூலமும், ஆசாரங்களைப் பின்பற்றுவதன் மூலமும் மனிதனால் தவறுகளிலிருந்து விலகிநிற்க முடிகிறது.

(தொடரும்)

கேள்வி: மனித வாழ்வில் இறை நம்பிக்கையின் அவசியம் என்ன?
அம்மா: இறை நம்பிக்கை இல்லாமலும் வாழ முடியும். ஆனால், வாழ்வின் பாதகமான சூழ்நிலைகளில் மனம் பதறாமல் உறுதியாக முன்னேறிச் செல்ல வேண்டுமெனில், நாம் கடவுளைச் சரண்புகத் தயாராக வேண்டும். அவருடைய பாதையைப் பின்பற்றி வாழத் தயாராக வேண்டும்.

இறைவனை அடைக்கலம் அடையாத வாழ்க்கை, நீதிபதி இல்லாமல் இரு வழக்கறிஞர்கள் மட்டும் வாதாடுவது போன்றதாகும்.வெறும் வாதம் மட்டும் எந்தவொரு முடிவையும் அளிக்காது.வாதத்திற்குத் தீர்ப்பு எழுத வேண்டுமெனில் நீதிபதி தேவை. நீதிபதி இல்லாமல் வாதம் நடந்தால் வாதத்தைத் தொடரலாமே அன்றி தீர்ப்பு அளிக்க முடியாது.

இறை குணங்கள் நம்மிடம் வளர்வதற்காகவே இறைவனை வணங்குகிறோம். இறைவனை வணங்காமல் இறை குணங்களை வளர்த்துக்கொள்ள முடிந்தால் இறை நம்பிக்கை தேவையில்லை. நாம் நம்பினாலும் நம்பாவிடிலும் இறைவன் மெய்ப்பொருளாவார். அந்த மெய்ப்பொருளை ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிடிலும் அதற்கு ஒரு குறைவும் ஏற்படாது. புவிஈர்ப்பு சக்தி ஒரு உண்மையாகும். அதை நாம் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் அது இல்லாமல் போவதில்லை. அதேசமயம் அதை மறுத்து, உயரத்திலிருந்து குதிக்கும் போது
ஏற்படும் விபத்தின் மூலம் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும்; அவ்வளவுதான் . இதுபோல் உண்மைக்கு எதிராக முகத்தைத் திருப்பிக் கொள்வதானது கண்களை மூடிக்கொண்டு, “இருட்டு” என்று கூறுவதைப் போலாகும். இறைவன் என்ற மெய்ப்பொருளை ஏற்றுக்கொண்டு வாழ்வை முறைப்படுத்துவதன் மூலம் அல்லலற்ற வாழ்க்கை வாழ முடியும்.