செப்டம்பர் 26-ஆம் நாள் நிகழ்ச்சிகளில் அடுத்து முக்கியமாக, அம்மாவின் பல்கலைக் கழகத்தோடு இணைந்தும், தனியாகவும் செயல் பட்டுக்கொண்டிருக்கும் அம்மாவின் பல்வேறு ஆராய்ச்சி மையங்களிலிருந்து சாதாரண மக்களின் நலம் கருதி உருவாக்கப்பட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.
அவற்றில் முக்கியமான சில பின்வருமாறு:

1)மீநுண் (நானோ) தொழில்நுட்பத்தில் இயங்கும் மின் சேமிப்போடு இணைந்த சூரிய ஒளி மின் உற்பத்திக் கலம்:
தற்போது உபயோகத்தில் உள்ள சூரிய ஒளி மின் உற்பத்திக் கலங்களில் உள்ள ஒரு பெரும் குறைபாடு, மின் உற்பத்தியை சேமித்து வைக்கும் வழிவகையில்லாததாகும். சூரிய வெளிச்சம் உள்ளபோது மட்டுமே மின் உற்பத்தி செய்ய இயலும்.

கொச்சியில் உள்ள அமிர்தா மீநுண் விஞ்ஞான, மூலக்கூறு மருத்துவ ஆராய்ச்சி மையம், அமிர்தபுரியிலுள்ள அமிர்தா பொறியியல் கல்லூரியோடு இணைந்து, நானோ தொழில்நுட்பத்தைக்கொண்டு மேற்கூறிய குறைபாட்டுக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளது.

மூன்று அங்கங்களையுடையது இந்தக் கண்டுபிடிப்பு: மீநுண் பொருட்களாலான சூரிய ஒளி மின் உற்பத்திக் கலம், மீநுண் மின்தேக்கி மற்றும் இவையிரண்டையும் ஒருங்கிணைக்கும் மின்னியல் சுற்றமைப்பு ஆகியவையாகும். குறைந்த செலவில் பெருமளவில் உற்பத்தி செய்யக்கூடிய தொழில்நுட்பத்திற்கு அடிகோலும் விதமாக அமைந்த மாதிரிக் கலம் தற்போது காட்சிக்கு வைக்கப் பட்டது. கைபேசி, மடிக் கணினி போன்றவற்றின் மின்கலங்களுக்கு மின்சக்தி ஏற்றுவது, இரவில் தெருவிளக்குகளுக்கு ஒளி தருவது போன்றவற்றிற்கு இந்த சூரியஒளி மின்கலம் பெருமளவில் பயன்படும்.

2) திருடனைப் பிடிக்க உதவும் கைபேசிப் பயன்பாட்டு மென்பொருள்:
அமிர்தாவின் மின்வலைக் கல்வி மையம் (E-learning) கண்டுபிடித்துள்ளது இந்த கைபேசிக்கான பயன்பாட்டைக் (MOBILE APP) கொண்டு, (திருட்டு போன்ற) சந்தேகத்திற்கிடமான ஏதோ காரியங்கள் நடக்கும் இடத்தில் இருக்க நேர்ந்த ஒருவர் தமது கைபேசியைக் கொண்டு போலீஸ்/ நண்பர்கள்/ உறவினர்களுக்கு (3 தொடர்பு எண்களுக்கு) தாமிருக்கும் இடத்திலிருந்து உடனடியாக புகைப்படமோ, வீடியோவோ, ஒலிச்செய்தியாகவோ குறுஞ்செய்தியாகவோ நடப்பைப் பதிவு செய்து அனுப்பிவைக்க இயலும். செய்தியைப் பெறுபவர், அந்த ஆபத்தைக் குறித்தும் சம்பவம் நடக்கும் சரியான இடத்தையும் உடனே அறிந்துகொள்ள முடியும்.

3) தனிமனிதப் பாதுகாப்புக்கு உதவும் கருவி:
அமிர்தா இணையப் பாதுகாப்பு மையம் (Amrita Centre for cyber security) வடிவமைத்துள்ள இக்கருவி குறிப்பாகப் பெண்களுக்கு .பெரிதும் உபயோகமாகும். அளவில் சிறிதான, உடம்பில் மறைவாய் அணிந்து கொள்ளக்கூடிய இக்கருவியிலிருந்து ஒரு பொத்தானை ஒரு ஆபத்துக் காலத்தில் அழுத்தினால், அதிலிருந்து அவசரச் செய்தி காவல் நிலையத்துக்கும், உறவினர்க்கும் SMS ஆகவோ, குரல்/ ஒலிச் செய்தியாகவோ உடனே போய்ச்சேரும். பாதிக்கப் பட்டவர் உள்ள இடம் பற்றிய தகவலும் போகும். இதை அணிபவருக்கு உதவியாக இக்கருவியில், மிக அருகிலுள்ள காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை பற்றிய தகவல்களும் தானாகவே காணக் கிடைக்கும்.

4) கைக் கணிப் பலகை மூலம் ஆரம்பக் கல்வி
அமிர்தாவின் மேம்பட்ட தொழில்வழிக் கல்வி முறை மையம் (Amrita CREATE) இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. ஆரம்பப் பள்ளியளவில், குழந்தைகளுக்கு கைக்கணிப் பலகை (Tablet) மூலம் காட்சி-ஒலியோடு சேர்ந்து ஆர்வமாய்ப் பாடம் கற்க உதவும் வகையில் இந்தக் கல்வி மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை உபயோகிக்க இணையத் தொடர்பு தேவையில்லை. தொலைதூர, மலைவாழ் குழந்தைகளுக்கும் இக் கல்வி முறை பயன்படும். குறிப்பிட்ட சில மாதிரிப்பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் இதைப் பயிற்றுவித்ததில் நல்ல பயன்பாடும், உற்சாகத்தோடு கூடிய ஈடுபாடும் காணக்கிடைத்துள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் தற்போது இதற்கான பாடங்கள் உருவாகி வருகின்றன.

5) தனிமனித உடல்நலத் தகவல் கையடக்க பதிவேடு :
புதிதாய் ஓர் மருத்துவ மனையில் போய் ஒரு நோயாளி சிகிச்சை செய்துகொள்ள நேரும்போது, அவரது முந்தைய ஆரோக்கிய நிலை, கடந்த காலத்தில் அவருக்கு உடலிலிருந்த பிரச்சனைகள், அதற்காக அவருக்குத் தரப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருந்து விவரங்கள், மருந்து ஒவ்வாமை போன்ற தகவல்கள், முன்பு எடுக்கப்பட்ட கதிரியக்கப் படங்கள் போன்ற எல்லா விவரங்களும் அந்த நோயாளியின் கையிலேயே ஒரு மின் தகவல் பெட்டகமாக இருக்குமானால், உடனடியாக அத்தகவல்களைக் ஒரு கணினியின் மூலம் கண்டு நோக்கி, பிழையின்றித் தக்க சிகிச்சை அளிக்க மிகவும் உதவியாக இருக்கும் அல்லவா? இத்தகைய மிகப் பயனுள்ள ஒரு புதிய கண்டுபிடிப்பைத்தான் அமிர்தா தொழில்நுட்பங்கள் இயக்கம் (Amrita Technologies) இப்போது அறிமுகம் செய்யதுள்ளது.

நோயாளி கையோடு கொண்டுசெல்லகூடிய ஒரு நிரல் திரட்டி (Pen drive/ memory stick)யில் அடங்கியுள்ள ஒரு எளிய மென்பொருளின் உதவி கொண்டு நோயாளிக்கு சிகிச்சை தந்த மருத்துவமனைகளிலிருந்து அவ்வப்போது இந்தத் தகவல்களை அதில் பதிவு செய்து வைத்துக் கொள்ளவேண்டும்; அவ்வளவே.

6) ‘அமிர்த ஸ்பந்தனம்’ – இதய நோயாளிகளின் ECG ஐத் தொடர்ந்து கண்காணிக்கும் கம்பியில்லா அணி கருவி:
கழுத்திலோ, இடுப்பிலோ அணிந்துகொள்ளக் கூடிய இக்கருவி, மருத்துவ மனையில் போய் ECG எடுக்கத் தேவையில்லாது, ஒரு இதய நோயாளியின் இதயத்துடிப்புத் தகவல்களை தொடர்ந்து கண்காணித்து, தொலைவிலுள்ள மருத்துவருக்கு உடனுக்குடன் அவரது கைபேசிக்குத் தகவல் அனுப்பக்கூடிய திறன் வாய்ந்ததாகும்.

அமிர்தபுரியிலுள்ள அமிர்தா கம்பியில்லா தகவல் தொடர்பு பயன்பாட்டு நிறுவனம் (Amrita Wireless Network Applications) , கொச்சியிலுள்ள அமிர்தா AIMS மருத்துவமனையைச் சார்ந்த இதய மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் இப்பயன் மிக்க உயர் தொழில் நுட்பக் கருவியை உருவாக்கியுள்ளது.

7) தொலைத் தொடர்பில் தொழில் கற்க ஓர் இணைய வலை வாயில் (Online Portal) :
‘எனது குழுமம்’ (My Sangam) என்ற பெயரில் அமிர்தாவின் அம்மாச்சி ஆய்வுமையம் உருவாகியுள்ள இந்த வலை வாயில் மூலம், தொலைதூரக் கிராமங்களில் உள்ள எளியவர்களுக்கும் ஒலி-ஒளிப் படிப்பின் வாயிலாக கைத்தொழில்கள் கற்கவும், கைத்தொழில் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரவும், கைத்தொழில் உற்பத்திப் பொருள்களுக்கு ஒரு சந்தைத் தொடர்பை ஏற்படுத்தித் தரவும், வேலைவாய்ப்புக்கான தகவல் பரிமாற்றத்துக்கு வழிகோலவும் முடியும்.

இப்போது, அரசாங்கம் ஏற்படுத்தித் தந்துள்ள ஒளியிழைத் தொடர்பின் மூலம் ஏராளமான கிராம பஞ்சாயத்துகளுக்கும் இணையத் தொடர்பு கிடைத்துள்ளதால், இத்தகைய தொலைதூரக் கல்விமுறை உயர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இன்று சாத்தியம் ஆகிவிட்டது.

8) இதர கண்டுபிடிப்புகள்:
மீநுண் (நானோ) தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘பாலிமர் வேஃபர்’ உதவியோடு மூளைக் கட்டிக்கு சிகிச்சைத் தீர்வு, மீநுண் விஞ்ஞான, மூலக்கூறு மருத்துவத்தின் வாயிலாக ‘மருந்துக்குக் கட்டுப்படாத’ ரத்தப்புற்று நோய்க்குத் தீர்வு, மாரடைப்பு வந்து சிகிச்சை பெற்றவர்களுக்கு மீண்டும் அடைப்பு வராமல் இருக்க ஒரு நுண்சிகிச்சை முறை, சக்கரநாற்காலியை உபயோகித்தே தீரவேண்டிய பாதிப்புள்ளவர்களுக்கு, அவர்களது கை அசைவைக் கண்காணித்தே தானாய் இயங்கி திசை திரும்பும் சக்கர நாற்காலி – முதலிய கண்டுபிடிப்புகளும் விழாவின் முதல் நாள் (26 செப்டம்பர்) நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.

விழாவின் முக்கிய பகுதியாக அமிர்தானந்தமயி மடம் இப்பிறந்தநாளை ஒட்டித் தொடங்குகின்ற மாபெரும் தேச நலப் பணியான “101 கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டம்” பற்றிய விவரங்கள் அறிவிக்கப் பட்டன. ‘அமிர்தா சுய சார்புக் கிராமங்கள்’ Amrita Self Relient Villages – Amrita seRVe என்ற பெயரில் இயங்கப் போகும் இந்த திட்டத்தின் கீழ், அனைத்திந்திய அளவில் 101 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு, அக்கிராமங்கள் எல்லா விதங்களிலும் சுயச் சார்புடன் செயல்படும் விதத்தில் வேண்டிய எல்லா கட்டமைப்பு வசதிகளும் அமிர்தானந்தமயி மடத்தினால் செய்துகொடுக்கப்படும். கிராமப்புற வளர்ச்சியில் மற்ற எல்லா கிராமங்களுக்கும் முன்னுதாரணமாய்த் திகழும் விதத்தில் வேண்டிய வசதி வாய்ப்புகள் இந்த 101 கிராமங்களில் உண்டாக்கித் தரப்படும்.

இந்தத் திட்டத்தைப் பற்றி அம்மாவைக் கேட்டபோது அம்மா கூறியதாவது: “இந்தியாவின் அடித்தளமே கிராமங்கள் தான்; தேசத்தின் உயிர் நாடி கிராமங்களிலிருந்தே வருகிறது. அவற்றை நன்கு பராமரிப்பது நமது சமுதாயத்தின் பொறுப்பாகும்; உண்மையில் நகரங்களில் வசிப்பவர்களை வாழவைத்துக் கொண்டிருப்பது கிராமங்கள்தான்; தானியங்களும் காய்கறிகளும் பயிர் செய்து நமக்களித்து நம் உயிர்வாழ்வைப் பேணும் கிராமங்களை நாம் உண்மையில் ஒதுக்கி ஓரம்கட்டிக் கொண்டிருக்கிறோம். அதை விடுத்து, முழு மனதோடும் இதயத்தோடும் கிராமங்களைப் பாதுகாத்து அவற்றிற்கு சேவை செய்யும் நேரம் வந்துவிட்டது”
ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டை மனதிற் கொண்டு செயல்படும் இத்திட்டம், கீழ்க்கண்ட 9 விஷயங்களில் குறிப்பாக செயலாற்றும்:

1. கட்டமைப்பு மற்றும் வசதிகள்
தத்தெடுத்த கிராமங்களில் ஒவ்வொருவருக்கும் வீடு, பள்ளிக்கூடக் கட்டிடங்கள், தெருவிளக்குகள், சமுதாயக் கூடங்கள் மற்றும் சரியான கழிவுநீர் வடிகால் வசதி செய்து கொடுத்தல் அடங்கும்.
2. ஆரோக்கியம், மருத்துவ சேவை
ஒவ்வொரு கிராமத்திலும் அடிப்படை மருத்துவ வசதிகள், அவற்றில் பணி செய்ய, பயிற்சி பெற்ற மருத்துவர்/ பணியாளர்கள்.

3. சக்தி
சுத்தமான, இயற்கை சக்திகளைச் சார்ந்த மின் சக்தி உற்பத்தி மற்றும் உபயோகம் என்பதை அடிப்படையாக வைத்து, சூரிய ஒளி மூலம் தெருவிளக்குகளுக்கு மின் சக்தி வழங்கப்படும். நானோ தொழில்நுட்பத்தில் சக்தி சேமிப்போடு கூடிய குறைந்த செலவு சூரிய ஒளி மின் சக்தி உற்பத்தி முறை (அமிர்தாவின் ஆராய்ச்சி நிருவனங்களின் ஒரு புதிய கண்டுபிடிப்பு) இங்கே பயன்முறையில் இந்த கிராமங்களுக்குக் கொண்டுவரப்படும்.

4. வாழ்வாதாரத்துக்கு வழிசெய்தல், கைத் தொழில் திறங்களை வளர்த்தல்
இந்த 101 கிராமங்களிலும் கைத்தொழில் பயிற்சி நிருவனங்கள் அமைத்தல், பெண்களின் சுய உதவிக் குழுக்களை (முன்பே உள்ள ‘அமிர்த ஸ்ரீ’ உதவி திட்டதின் கீழ்) அமைத்து தொழில் செய்ய மூலதன வசதி செய்து கொடுத்தல், ஆதரவற்ற பெண்களுக்கு (முன்பே செயலில் உள்ள ‘’அமிர்த நிதி’ பென்ஷன் திட்டத்தின் கீழ்) பென்ஷன் வசதி செய்துகொடுத்தல் முதலியன.

5. இயற்கைப் பேரழிவிலிருந்து தற்காப்பு
சுனாமி, பூகம்பம், புயல் தாக்குதல் போன்ற பல்வேறு இயற்கைச்சீற்றங்களில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு துயர் துடைப்புப் பணிகளில் கடந்த காலத்தில் ஈடுபட்டு அதன் மூலம் பழுத்த அனுபவம் பெற்றுள்ள மடம், தத்தெடுக்கும் இந்த 101 கிராமங்களிலும் வருங்காலங்களில் இயற்கைச் சீற்றப் பாதிப்பு எத்தனை தூரம் நிகழ சாத்தியம் என்பதை ஆராய்ந்து கணக்கில் கொண்டு அதற்காக இயன்ற அளவு பாதுகாப்பு கட்டமைப்புகளை முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கும்.

6. பள்ளிக் கல்வி, முதியோர் கல்வி
ஏற்கனவே அமிர்தாவின் நலப்பணிகளின் கீழ் பல்லாயிரக்கணக்கான வசதிகுறைந்த மாணவ மாணவிகளுக்குக் கொடுக்கப்படும் கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) இந்த 101 கிராமத்திலுள்ள குழந்தைகளுக்கும் முதியோர் கல்வி பயில்பவர்களுக்கும் விஸ்தரிக்கும்.
இது தவிர அமிர்தா ஆராய்சி நிருவனங்களின் புதிய கண்டுபிடிப்பான கைக்கணினிப் பலகை மூலம் ஆரம்பக் கல்வி தரும் தொழில் நுட்பம் இந்த கிராமங்களில் பயன்பாட்டில் கொண்டுவரப்படும்.

7. சுற்று சூழல் பாதுகாப்பு/ காடு வளர்ப்பு
ஏற்கனவே அமிர்தா பெருமளவில் நடத்திவரும் மரவளர்ப்புப் பணிகளின் கீழ் இந்த கிராமங்களிலும் காடுவளர்ப்புப் பணிகள் முடுக்கிவிடப்படும்.

8. ஆத்ம சக்தியை மேம்படுத்துதல்
அமிர்தானந்தமயி ஆசிரமத்தின் மூலம் ஏற்கனவே பரவலாகவும் இலவசமாகவும் கற்றுத்தரப் படுகின்ற யோகா முறையான I AM TECHNIQUE (Integreted Amrita Meditation) – ஒருங்கிணைந்த யோக – தியான முறை, இக்கிராம மக்களுக்கும் கற்றுத் தரப்படும். தவிர, போதைப்பொருட்கள், குடிப்பழக்கம், புகையிலை உபயோகம் இவற்றிற்கெதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பெறும்.

9.தகவல் தொடர்பு, கண்காணிப்பு
திட்டமிட்ட பணிகள் செவ்வனே நடைபெறுவதை உறுதிசெய்ய தகவல் தொடர்பும், கண்காணிப்பும் அத்தியாவசியம். ஆகையால் இதற்கு வேண்டி இந்த எல்லா கிராமங்களிலும் அடிப்படியான இணையத் தொடர்பு தரப்பட்டு, அமிர்தாவின் e-Learning உருவாக்கியுள்ள A-VIEW எனும் தொலைக்கல்வித் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒலி-ஒளி வழி தடையற்ற கருத்துப் பரிமாற்றமும், கண்காணிப்பும் நிகழும்.
மேற்கண்ட பல்வேறு அங்கங்களும் விழாவில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களால் தனித்தனியாகத் முறைப்படித் தொடங்கிவைக்கப்பட்டன.

செப்டம்பர் 26 – சிறப்பு நிகழ்ச்சிகள்

60 ஆண்டு நிறைவு காணும் அம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், அமிர்தபுரியில் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் வள்ளிக்காவில் அமைந்துள்ள அமிர்த விஸ்வ வித்யாபீடம் (பொறியியல் கல்லூரி) வளாகத்தில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் துவங்கியது.

விடியற்காலை 5:30 முதல் மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கி, தொடர்ந்து லலிதா சஹஸ்ரநாம பாராயணமும், பஞ்சாரி மேள வாத்திய முழக்கமும் நிகழ்ந்தன. தொடர்ந்து, அமிர்தபுரி ஆசிரமத்திலிருந்து, அம்மாவின் பிறந்தநாளுக்கென வந்து சேர்ந்திருக்கும் எல்லா வெளிநாட்டு பக்தர்களும் தத்தமது நாட்டுக் கொடிகளை ஏந்தி விழாப்பந்தலுக்கு ஊர்வலமாக வந்து சேர்ந்தனர். நமது நாட்டுக்கொடியோடு மற்ற எல்லா நாட்டுக்கொடிகளும் விழா அரங்கத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டன.

அடுத்து, ஒரு வரவேற்பு நாட்டிய நிகழ்ச்சி தொடங்கியது. இந்தியாவின் பாரம்பரிய நடனங்களின் தொகுப்பாக நமது கலாசாரம், பண்பாட்டுப் பெருமைகளை விளக்கும் விதத்தில் மனதையும் கண்களையும் கவரும் விதமாக அமைந்தது இந்த நிகழ்ச்சி.
சுமார் பத்தரை மணியளவில், அம்மா ஆசிரமத்திலிருந்து விழா மேடைக்கு வந்து சேர்ந்தார். அன்றைய காலை நிகழ்ச்சிகளின் முக்கிய விருந்தினராகப் பங்கேற்றவர், குஜராத் மாநில முதல்வரான நரேந்திர மோடி அவர்கள். அவருடன் காலை விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மற்ற முக்கிய பிரமுகர்கள்: சுவாமி விச்வேஷ தீர்த்தர் (உடுப்பி பெஜாவர் மடாதிபதி), ஃபிலிபோஸ் மார் கிறிஸ்டோட்டம் (மார்த்தோமா வலிய மெட்ரொபாலித்தன்), முகம்மது மஸ்தான் காலிஃபா சாஹிப் (நாகூர் தர்கா தலைமைப் பொறுப்பாளர்), ஸ்ரீ பய்யாஜி ஜோஷி (ஆர். எஸ். எஸ். அகில இந்திய தலைமை நிர்வாகி) ஸ்ரீ வெள்ளாப்பள்ளி நடேசன் (ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன யோகத்தின் தலைமை செயலாளர்), ஸ்ரீ P. பரமேஸ்வரன் (விவேகானந்தா கேந்திர தலைமைப் பொறுப்பாளர்), ஸ்ரீ S. குருமூர்த்தி (சுதேசி ஜாக்கிரண் மன்சின் தலைவர்), மற்றும் பல அரசியல், சமூக நலப் பிரமுகர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஆன்மீக இயக்கங்களின் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என்று பலரும் அடங்குவர்.

ஸ்ரீ நரேந்திர மோடி உரை:

ஸ்ரீ நரேந்திர மோடி பேசுகையில், தாம் அம்மாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பது, ஒரு மாநிலத்தின் முதல்வராகவோ அல்லது ஒரு தேசியக் கட்சியின் தலைவர்களில் ஒருவராகவோ இல்லை, அம்மாவின் ஒரு பக்தனாகத்தான் என்றார். கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி என பல துறைகளிலும் ஒரு அரசாங்கம் உண்மையில் செய்யவேண்டிய பல காரியங்களை மாதா அமிர்தானந்தமயி மடம் செய்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். நமது இந்தியப் பாரம்பரியத்தில், ரிஷிகளும், முனிவர்களும் எல்லாக் காலங்களிலுமே நமது தேசத்தின் உருவாக்கத்திலும், முன்னேற்றத்திலும், பெரும் பங்கு அளித்துள்ளனர்; ஆனால், “மெக்காலே கல்விமுறையில்” படித்து வளர்ந்தவர்கள் இதைப் புரிந்துகொள்ளாமல் மகாத்மாக்களைக் குறித்துத் தவறான கண்ணோட்டத்தைப் பரப்புகின்றனர் என்றார் அவர். பண்டைய காலத்தில் இருந்தது போல மீண்டும் பாரதம் உலக குருவாக உயரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
புதிய திட்டங்கள், கண்டுபிடிப்புகளின் அறிமுகம்
அமிர்தா ஆன்மீக ஆய்வு மையம் துவக்கம்:
அம்மாவின் 60 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, அமிர்த விஸ்வ வித்யாபீடத்தின் ஒரு அங்கமாக தொடங்கப்பெற்றது இந்த மையம்.

இந்த மையத்தின் நோக்கங்கள்: நமது சனாதன தர்மத்தின் அடித்தளத்தில், ரிஷி, குரு பாரம்பரியத்தில் வந்த மகாத்மாக்கள் காட்டியுள்ள வழியில் அமைந்துள்ள பாரத உயர் கலாசாரம், பாரம்பரியம், ஆன்மீக ஞானம், சாத்திரங்கள், பழக்கவழக்கங்கள் இவற்றில் ஆய்வும் ஆராய்ச்சியும் செய்தல், அதன் மூலம் நாட்டின் ஆன்மீக, சமுதாய, கலாசார முன்னேற்றத்துக்கு அடிகோலுதல், அம்மாவின் ‘அன்பு செய், சேவை செய்’ என்ற உலகளாவிய செய்தியின் அடிப்படையில் சுயநலமற்ற சேவையை கல்வியின் ஒரு அங்கமாகவே கொண்டுவருதல் முதலியன.

இந்த மையத்தின் மேற்பார்வையில் முதுகலைப் பட்டப் படிப்புகளும், முனைவர் பட்டப் படிப்புகளும் அளிக்கப்படும். நமது வேதம், உபநிஷதம், பகவத் கீதை, பத்து தரிசனங்கள் போன்றவற்றில் ஆராய்ச்சி, கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் ஆன்மீகத்தோடு இயைந்துள்ள விஷயங்களைக் குறித்த ஆய்வு, மருத்துவத்துறையில் அலோபதிக்கும் ஆயுர்வேதத்துக்கும் இணைப்பு ஏற்படுத்தக்கூடிய ஆராய்ச்சிகள், அம்மாவின் ஆன்மீக, சமுதாய நலப் பணிகள், அம்மா அருளித்தந்த யோகா பயிற்சிகள் குறித்த ஆய்வுகள் போன்ற பல செயல்பாடுகள் இந்த மையத்தின் திட்டத்தில் அடங்கும்.
அடுத்து, ஆசிரமத்தின் புதிய புத்தக வெளியீடுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
அன்றைய தின நிகழ்ச்சிகளில் அடுத்து முக்கியமாக, அம்மாவின் பல்கலைக் கழகத்தோடு இணைந்தும், தனியாகவும் செயல் பட்டுக்கொண்டிருக்கும் அம்மாவின் பல்வேறு ஆராய்ச்சி மையங்களிலிருந்து சாதாரண மக்களின் நலம் கருதி உருவாக்கப்பட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.

புதிய கண்டுபிடிப்புகள்/ திட்டங்கள் அறிமுகத்திற்குப் பிறகு, வந்திருந்த பக்தர்களுக்கு அம்மா வழக்கம்போல் தனித்தனியே அரவணைத்து மாலை வரை தரிசனம் தரத் தொடங்கினார்.
மேடையின் மற்றொரு பகுதியில் அடுத்தடுத்து கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. குரு அருணா மொஹந்தியின் ஒடிஸ்ஸி நடனம், பண்டிட் நயன் கோஷின் சிதார் வாத்தியம், ஸ்ரீ உமையாள்புரம் சிவராமனின் மிருதங்க தனி ஆவர்த்தனம், கென்யா நாட்டைச்சேர்ந்த எரிக் வாய்னாய்னாயின் ஆப்பிரிக்க ஃப்யூஷன் இசை ஆகியவை நடந்தன.

மாலை/ இரவு நிகழ்ச்சிகள் (26 ஆம் தேதி)
அன்றைய தின மாலை நிகழ்சிகளில் தலைமை விருந்தினராக கேரள மாநில முதல்வர் திரு. உம்மன் சாண்டி கலந்துகொண்டார். அவர் பேசுகையில் அம்மா ஆசிரமத்தோடு தமக்கு சமீபகாலங்களில் கிடைத்துள்ள தொடர்பைப் பற்றிக் குறிப்பிட்டார். சிரித்த முகத்தோடு ஆயிரக்கணக்கானவர்களை தினம் தினம் தனித்தனியே கண்டு அரவணைத்து அவர்தம் குறைகேட்கும் அம்மாவின் அளப்பெரும் சக்தி தம்மை எப்போதும் வியப்பிலாழ்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.

அடுத்து இடுக்கி நிலச்சரிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆசிரமம் நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அடுத்து அம்மாவின் மாலை நேர பஜனையும் பிறகு பொதுமக்களுக்கு தரிசனம் தருவதும் தொடர்ந்தது. நள்ளிரவையும் தாண்டித் தொடர்ந்தது அம்மாவின் தரிசனம். தரிசனம் நடக்கையிலேயே உலகப் புகழ் வாய்ந்த கலைஞர்களின் கலா நிகழ்ச்சிகள் விழா மேடையில் நிகழ்ந்தன. பண்டிட் அஜொய் சக்ரவர்த்தியின் இந்துஸ்தானி வாய்பாட்டு, திருமதி மஞ்சு வாரியரின் குச்சுப்புடி நடனம், திரு சிவமணி மற்றும் ஸ்டீபன் தேவாசியின் தாள வாத்திய இசை, ஆகியவை அன்றிரவு நிகழ்ச்சிகளில் முக்கியமானவை.

செப்டம்பர் 27 (பிறந்த தினம்)

அம்மாவின் 60ஆவது திருஅவதார தினமான இன்று, காலை 5 மணி முதல் மஹா கணபதி ஹோமமும், தொடர்ந்து லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தன. காலை 8 மணியளவில் பத்மஸ்ரீ ஷோபனா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் அதன் முடிவில், அம்மாவின் மூத்த துறவிச் சீடராகிய சுவாமி அமிர்த சொரூபானந்தபுரியின் உரையும் தொடர்ந்தன.

தமது உரையில் சுவாமிஜி, அம்மாவுடன் தமக்கு 37 ஆண்டுகாலமாகக் கிடைத்த அனுபவங்களும் ஏதோ ஒரு நொடிப்பொழுதில் பௌதீகக் கால வரையறைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தளத்தில் நிகழ்வதாகவே தோன்றுகிறது என்றார். அம்மாவுக்கு பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதில் ஒரு சிறிதும் விருப்பம் இல்லை என்றும், பக்தர்களின் பிடிவாதமான வற்புறுத்தலுக்குப் பிறகு அம்மா “எனக்குத் தெரியாது” என்று சொன்னதை சம்மதமாகக் கொண்டு குறைந்த காலக்கெடுவுக்குள் விழா ஏற்பாடுகள் நடந்ததாகவும் சொன்னார், அம்மாவின் அருள் இன்றி நடப்பதற்கு சாமானியமாய் சாத்தியமே இல்லை என்பதற்கு ஓர் உதாரணமாக, இரண்டே வாரங்களில் நிர்மாணிக்கப் பட்ட அந்த பிரும்மாண்டமான விழாப் பந்தலே சான்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
அம்மா சரியாகக் காலை 9 மணிக்கு பஞ்ச வாத்தியம் முழங்க விழா மேடைக்கு வந்து சேர்ந்தார். உடன் பாத பூஜை துவங்கியது. அம்மாவின் துறவிச் சீடர்கள் அனைவரும் சூழ்ந்திருக்க மூத்த துறவி சுவாமி அமிர்த சொரூபானந்தபுரி அவர்கள் அம்மாவின் 108 நாமாவளி பாராயணத்துடன் பாத பூஜையை செய்தார்.
padapuja-17

தொடர்ந்து அம்மாவின் துறவிச் சீடர்களும், அம்மாவின் பூர்வாசிரமக் குடும்பத்தினரும், விழாவுக்கு வருகை தந்து மேடையில் வீற்றிருந்த முக்கிய பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களும் அம்மாவுக்கு மாலை அணிவித்து வணங்கினர்.

இன்றைய விழாவில் பங்கெடுத்த முக்கிய பிரமுகர்களில் சிலர்: (பல்வேறு மாநில ஆளுநர்களாக இருக்கும்) திரு சங்கரநாராயணன், ரோசைய்யா, அஜிஸ் குரேஷி, பி எல் ஜோஷி, (மத்திய/ மாநில அமைச்சர்களாக இருக்கும்) திரு வயலார் ரவி, ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ், ஹரீஷ் ராவத், சசி தரூர், கே வி தாமஸ் மற்றும் பலர், பல்வேறு அரகியல் கட்சிப் பிரமுகர்களான திரு ரமேஷ் உன்னித்தலா, ஜகதம்பிகா பால், ஓ ராஜகோபால் மற்றும் பலர், ஆன்மீக மடங்களைச்சார்ந்த சுவாமி பிரகாசானந்தா (சிவகிரி மடம்), சுவாமி பிரவாணந்த தீர்த்தர் (பன்மனா ஆசிரமம்) போன்ற பலர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வாழ்த்துரை, வீடியோ காட்சியாக ஒளிபரப்பப் பட்டது. பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்த்துரை மத்திய அமைச்சர் சசி தரூரால் வாசிக்கப் பெற்றது.
அடுத்து அம்மாவின் பிறந்தநாள் அருளுரை சிறப்பாக நடந்தது.

அமிர்தா சுயசார்புக் கிராமங்கள் திட்டத் துவக்கம்
அடுத்து, விழாவின் முக்கிய பகுதியாக அமிர்தானந்தமயி மடம் இப்பிறந்தநாளை ஒட்டித் தொடங்குகின்ற மாபெரும் தேச நலப் பணியான “101 கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டம்” பற்றிய விவரங்கள் அறிவிக்கப் பட்டன. ‘அமிர்தா சுய சார்புக் கிராமங்கள்’ Amrita Self Relient Villages – Amrita seRVe என்ற பெயரில் இயங்கப் போகும் இந்த திட்டத்தின் கீழ், அனைத்திந்திய அளவில் 101 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு, அக்கிராமங்கள் எல்லா விதங்களிலும் சுயச் சார்புடன் செயல்படும் விதத்தில் வேண்டிய எல்லா கட்டமைப்பு வசதிகளும் அமிர்தானந்தமயி மடத்தினால் செய்துகொடுக்கப்படும். கிராமப்புற வளர்ச்சியில் மற்ற எல்லா கிராமங்களுக்கும் முன்னுதாரணமாய்த் திகழும் விதத்தில் வேண்டிய வசதி வாய்ப்புகள் இந்த 101 கிராமங்களில் உண்டாக்கித் தரப்படும்.
இந்தத் திட்டத்தைப் பற்றி அம்மாவைக் கேட்டபோது அம்மா கூறியதாவது: “இந்தியாவின் அடித்தளமே கிராமங்கள் தான்; தேசத்தின் உயிர் நாடி கிராமங்களிலிருந்தே வருகிறது. அவற்றை நன்கு பராமரிப்பது நமது சமுதாயத்தின் பொறுப்பாகும்; உண்மையில் நகரங்களில் வசிப்பவர்களை வாழவைத்துக் கொண்டிருப்பது கிராமங்கள்தான்; தானியங்களும் காய்கறிகளும் பயிர் செய்து நமக்களித்து நம் உயிர்வாழ்வைப் பேணும் கிராமங்களை நாம் உண்மையில் ஒதுக்கி ஓரம்கட்டிக் கொண்டிருக்கிறோம். அதை விடுத்து, முழு மனதோடும் இதயத்தோடும் கிராமங்களைப் பாதுகாத்து அவற்றிற்கு சேவை செய்யும் நேரம் வந்துவிட்டது”

புதிதாக துவங்கப் பெற்ற நலத் திட்டங்கள்
1. ரூபாய் ஐம்பது கோடி உத்தரா கண்ட் மாநில வெள்ள நிவாரண, மறு சீரமைப்புத் திட்டம். இதன் கீழ் கேதார்நாத்தை சுற்றியுள்ள 42 கிராமங்களில் 500 வீடுகள் கட்டித்தரப்படும்; மற்ற அத்தியாவசியக் கட்டடப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

2. ஏற்கனவே இருக்கும் அமிர்த நிதி உதவித் திட்ட விரிவாக்கம். இதன் கீழ் உதவி பெறுபவர்களின் எண்ணிக்கை 59000 இலிருந்து 69000 ஆக உயர்த்தப்படும்.
ஏற்கனவே இருக்கும் வித்யாம்ருதம் திட்டத்தின் கீழ் கல்வி உதவி பெறுவோரின் எண்ணிக்கையை விரிவாக்கும் திட்டம். உதவி பெறுபவர்களின் எண்ணிக்கை 41000 இலிருந்து 46000 பேராக உயரும்.

3. ரூபாய் 50 கோடி மதிப்புக்கு இலவச சிகிச்சைகளை AIMS மருத்துவ மனையில் இவ்வருடம் மேற்கொள்வதற்கான திட்டம். இதன் கீழ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள், இதய அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சைகள் போன்ற செலவு கூடுதலான சிகிச்சைகள் வசதியற்றோர் நலனுக்காக இலவசமாக நடத்தப்படும்.

அமிர்த கீர்த்தி விருதுகள் வழங்குதல்
ஆண்டுதோறும் அம்மாவின் பிறந்தநாளை ஒட்டி இந்திய பாரம்பரிய ஆன்மீக-தத்துவ இலக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றிய எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விதத்தில் அமிர்த கீர்த்தி விருதுகள் தேசிய அளவிலும் மாநில அளவிலும் ஒருவருக்கு மடம் வழங்கி வருகிறது.

அம்மாவின் இந்த 60 ஆவது பிறந்த தினத்தில் தேசிய அளவிலான அமிர்த கீர்த்தி விருது, ஆங்கில, ஒரியா எழுத்தாளரான பேராசிரியர் மனோஜ் தாஸுக்கு அம்மா விழா மேடையில் வழங்கினார். கடந்த 50 ஆண்டுகளாக பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் வாழ்ந்து தமது இலக்கியப் பணிகளை செய்துவருகிறார்.

அமிர்த கீர்த்தி மாநில அளவிலான விருது, திரு துறவூர் விஸ்வம்பரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வடமொழி, ஆயுர்வேதம், ஜோதிடம் ஆகிய துறைகளிலும், நமது தரிசன நூல்களிலும், இதிஹாஸங்களிலும் மட்டுமன்றி மேற்கத்திய இலக்கியங்களிலும் ஆழ்ந்த புலமை உள்ளவர் இவர். மஹாபாரதத்தைப் பற்றி இவர் எழுதியுள்ள ‘பாரத தரிசனம்’ என்ற விரிவான ஆய்வுநூல் பெரும் பாராட்டைப் பெற்ற ஒன்றாகும்.

தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து செய்திகள் வழங்கினர். அவர்களுக்கு நன்றியுரை வழங்கப்பட்டது.

அடுத்து வசதியற்ற ஏழைத் தம்பதியருக்குத் திருமண வைபவம் அம்மாவின் முன்னிலையில் மேடையில் நடத்திவைக்கப் பட்டன. மணமக்களுக்கான தாலி, நகைகள் ஆடைகள் போன்ற எல்லா செலவுகளையும் மடமே ஏற்று நத்தியது.

தொடர்ந்து வழக்கம்போல் அம்மா தம்மைத் தரிசிக்க இன்று ஆவலாய் வந்திருக்கும் எல்லா பக்தர்களையும் தனித்தனியே அரவணைத்து தரிசனமளிக்கத் தொடங்கினார்.

தரிசனம் நடைபெறும் போதே மேடையின் மற்றொரு பகுதியில் வழக்கம் போல் புகழ் வாய்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறலாயின.

இரவு முழுவதும் அம்மாவின் தரிசனமும் கலை நிகழ்ச்சிகளும் தொடர்ந்தன. அம்மாவின் தரிசனம் மறுநாள் பகல் 11 மணி வரை இடையீடின்றி நிகழ்ந்து நிறைவுற்றது. பாமர மக்களின் நலனுக்காக தம்மையே மெழுகு வர்த்திபோல் உருக்கிக்கொண்டு பாடுபடும் அம்மா, தரிசனத்துக்கு வேண்டி ஏங்கி நின்ற கடைசி நபர் வரை பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தரிசனம் கொடுத்து முடித்தபிறகே விழா மேடையை விட்டு இறங்கிச் சென்றார்.

செப்டம்பர் 25 – 26 கருத்தரங்கம் – ‘நமது கிராமங்கள், நமது உலகம் – நாம் எதை வழங்கப் போகிறோம்?

முன்னாள் ஜனாதிபதியும் ஏவுகணைத் தொழில்நுட்ப விஞ்ஞானியுமாகிய டாக்டர் ஏ .பி. ஜே அப்துல் கலாம் அவர்கள் துவைக்கிவைத்த இக்கருத்தரங்கத்தில் கிராமங்களின் ஆரோக்கியமான முன்னேற்றத்திலும் உலகின் நலனிலும் பெரிதும் அக்கறையும் ஆர்வமும் கொண்ட பல அறிஞர்களும், விஞ்ஞானிகளும், கல்வியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் கலந்துகொண்டு மிக ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் கனவுகளையும் பகிர்ந்துகொண்டனர்.
அமிர்தபுரியின் அமிர்த விஸ்வவித்யாபீடத்துப் பொறியியற் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசிய சில முக்கிய பிரமுகர்கள் பின்வருமாறு:
டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் (இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை), டாக்டர் லேலண்ட் ஹார்ட்வெல் (நோபெல் பரிசுபெற்ற விஞ்ஞானி), டாக்டர் சுரேஷ் சுப்பிரமணி (செயல் குழுத் துணைவேந்தர்,கலிஃபோர்னியா பல்கலைக் கழகம்), திரு ரவிகுமார், பொது மேலாளர், தேசிய சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம்), ஜி.வாசுதேவ் (தலைவர், விவேகானந்தா கேந்திரம்), ஸ்ரீ சி ஆர் .கே. நாயர் (இணைச் செயலர், கிராமப்புற மேம்பாடு அமைச்சகம்), டாக்டர் ராஜாராம் சர்மா (இணைச் செயலர், NCERT), அமிர்தா பல்கலைக்கழக முனைவர்களான டாக்டர். பிபின் நாயர், டாக்டர் ஜெய் தலைமையுரை ஆற்றிய மிஸ்ரா, டாக்டர் பிரேம் நாயர், பிர. சங்கர சைதன்யா, டாக்டர். பாலகிருஷ்ணன் சங்கர், டாக்டர். மனீஷா சுதீர் மற்றும் பலர்.

டாக்டர் அப்துல் கலாம் தமது தலைமை உரையில், “இந்திய கிராமங்களின் முன்னேற்றத்திற்கு, கிராமப் புற வேலைவாய்ப்பு பெரிதும் மேம்படுவதோடு கூடவே ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சியும் நிகழ்வது அவசியம் என்றார். கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் ஒரு இருவழிப் பாதை போல செயல் படவேண்டும்; ஒரு வழியில், நகரங்களில் கிடைக்கும் எல்லா வசதி-வாய்ப்புகளும் கிராமங்களிலும் கிட்டவேண்டும். அத்தகைய முன்னேற்றம் தொய்வில்லாமல் நீண்டகாலம் நிகழ்வதை உறுதிசெய்ய வள ஒதுக்கீடுகளும் மற்றொரு பாதை வழியே வந்துகொண்டிருக்க வேண்டும் ” என்றார்.
கேரள கிராம மேம்பாடு குறித்து டாக்டர் கலாம் பேசுகையில், திருவனந்தபுரம் முதல் காசர்கோடுவரை உள்ள எல்லா ஆறுகளையும், உப்பங்கழிகளையும், மனிதன் அமைத்த கால்வாய்களையும் ஓன்றிணைத்து, ஓர் ஒருங்கிணைந்த உள்நாட்டு நீர்வழிப் பாதை அமைப்பதைக் குறித்து அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இத்தகைய ஒரு திட்டத்தில் அம்மாவின் அமிர்தா ஆராய்ச்சி நிலையங்கள் ஒரு பெரும் பங்கு வகிக்க முடியும் என்றார் அவர்.
இந்தக் கருத்தரங்கத்தில் அலசப்பட்ட தலைப்புகள்: கிராமப்புறத் தேவைகளான பொது ஆரோக்கியம், பாதுகாப்பு, விவசாயம், சுய சார்பு, பள்ளிக்கல்வி, ஆசிரியர் பயிற்சி, வேலை வாய்ப்பு, கைத்தொழில் திறன் மேம்பாடு, உயர்தொழில் நுட்பத்தின் உதவியோடு தொழிலறிவு பயிற்றுவித்தல் போன்றவை. மேலும், உலகளாவிய பிரச்சனைகளான நீர்வளம், எரி சக்தி, குப்பை கழிவுகள் முதலியன.
இரண்டாவது நாள் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக சமூக நலனில் ஆன்மீகத்தின் தாக்கம் மற்றும் தேவை குறித்தும், அதில் அம்மாவின் அளப்பேரும் பங்கைப் பற்றியும் விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் நடந்தன. இந்தக் ஆய்வரங்கத்தில் அம்மாவின் மூத்தத் துறவிச் சீடர்களான சுவாமி ராமகிருஷ்ணானந்த புரி, சுவாமி அமிர்த கீதானந்த புரி, சுவாமி பிரக்ஞானாம்ருதானந்த புரி, மற்றும் பல மூத்த பிரம்மசாரிகளும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
அம்மாவின் பிறந்த நாள் (27 ஆம் தேதி) அன்று அறிவிக்கப்பட்ட மடத்தின் ஒரு மாபெரும் திட்டமான ‘101 கிராமங்களைத் தத்தெடுத்தல்’ எனும் திட்டத்திற்கு கட்டியம் கூறும் விதத்திலும், அத்திட்டத்தின் பல அம்சங்களுக்கு தக்க வடிவம் கொடுக்கும் விதத்திலும் இந்த சர்வதேசக் கருத்தரங்கம் அமைந்தது எனலாம்.

chandiசெப்டம்பர் 22 – 25 சண்டிகா மஹா யாகம்

அம்மாவின் 60ஆவது திருஅவதார தின வைபவத்தின் ஒரு அங்கமாக, ஸ்ரீ சண்டிகா மகா யாகம் அமிர்தபுரி ஆசிரமத்தில் மிகச் சிறப்பாக 4 நாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது.
கொல்லூர் மூகாம்பிகை, மைசூர் சாமுண்டேஸ்வரி கோவில் அர்ச்சகர்களாகவும் வேத விற்பன்னர்களாகவும் உள்ள அனுபவமிக்க ரித்விக்குகளால் இந்த மஹா யாகம் பாரம்பரியச் சிறப்புடன் நடத்தப்பெற்றது.
செப்டெம்பர் 22 ஆம் தேதி காலை மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது இந்த யக்ஞம். சுமார் பத்தரை மணியளவில் அம்மா, பஞ்ச வாத்தியம் முழங்க, யானை முன்வர, யக்ஞ சாலைக்கு வருகை தந்து குத்து விளக்கேற்றி, மலர்தூவி யாக நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார்.

யாகத்தின் கிரமப்படி, சண்டி சப்தசதி பாராயணம், லலிதா சஹஸ்ரநாமம் உட்பட மற்ற பாராயணங்களும் பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்றன.
யாகத்தின் இரண்டாம், மூன்றாம் நாட்களில் சண்டிகா சப்தசதி பாராயணம், நவாவர்ண ஹோமம் மற்றும் பல பாராயணங்களும் விசேஷ பூஜைகளும் யாக நியமப்படி தொடர்ந்து நடைபெற்றன. மூன்றாம் நாள் இரவில் அக்னி ஜனன மஹா பூஜை செய்து யாகத்தீ தொடங்கப் பெற்றது.

4 ஆவது, நிறைவு நாளான 25 செப்டம்பர் அன்று மந்திர பூர்வமாக யாக அக்னியோடு சத சண்டிகா மஹா யக்ஞம் தொடர்ந்தது. காலை சுமார் 10.15 மணியளவில் நாதஸ்வர வாத்தியத்தோடு அம்மா யாக சாலைக்கு வந்து சேர்ந்தார். அவரது முன்னிலையில் பூர்ணாஹுதி நிகழ்த்தப் பெற்றது.
.

chandika11

இந்த சண்டிகா மகா யாகத்தைப் பற்றி தலைமை பூஜாரி விளக்கும்போது, “மனித குலத்துக்கு மட்டுமின்றி, விலங்குகள் தாவரங்களுக்கும் நன்மை தரக்கூடிய விதத்தில் வேண்டப்பெறும் எல்லா பிரார்த்தனைகளும், இந்த யாகத்தின் மூலம் நிறைவேறும்; தேவியை முற்றிலும் சரணடைந்து பிரார்த்திப்பதின் மூலம் கிடைக்கும் பயன் அது; வறட்சியில் தவிக்கும் பிரதேசங்களில் மழை பொழியவும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் மழையின் சீற்றத்தைக் தணிக்கவும் இந்த யாகம் வழி கோலும்” என்றார்.
அமிர்தபுரி ஆசிரம வாசிகள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மஹா யாகத்தைக் கண்டும், வேத, மந்திர பாராயணங்களைச் செவி மடுத்தும், இந்த யாகத்தின் மூலம் சுற்றுப் புறத்தில் உண்டான தெய்வீக அதிர்வுகளை அனுபவித்தும் பெரு மகிழ்வு எய்தினர்.

கேள்வி: அம்மா பாரதம் மற்றும் வெளிநாடுகளில் பல வருடங்களாகப் பயணம் செய்து வருகிறீர்கள். இக்காலத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன?

அம்மா: பாரதத்தில் உள்ளவர்களே, ” இந்துக்கள் காட்டுமிராண்டிகள். அவர்களது பக்தியும் காட்டுமிராண்டித்தனமானது. குரங்கையும் யானைத்தலையுள்ள கணபதியையும் வழிபடுகிறார்கள் ” என்று சொல்கிறார்கள். ஆனால் இவற்றிற்குப் பின் உள்ள தத்துவத்தை, அறிவியல் உண்மையை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?. அதை அறிய எத்தனைபேர் முயன்றிருக்கிறார்கள்? அப்படியே அறியவேண்டும் விரும்பினாலும் அதை அறிவதற்குரிய வழி என்ன? இவை அனைத்தும் நாம் மிக முக்கியமாகச் சிந்திக்க வேண்டிய விஷயங்களாகும்.

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அங்கே பல வீடுகளில் ஓவியங்களைக் காண்பதுண்டு. ஒருவீட்டில் வரைந்திருக்கும் ஓவியத்தைக் கண்டபோது அது என்னவென்றே புரியவில்லை. நாலைந்து நிறங்களும் ஐந்தாறு கோடுகளும் மட்டுமே அந்த ஓவியத்தில் காணப்பட்டன. பார்ப்பதற்கு, துடைப்பத்தை வண்ணத்தில் தோய்த்து அதனால் வரைந்த படம் போன்று தோன்றும். அதைப்பற்றிக் கேட்டபோதுதான் அதன் விலை ஐந்துலட்சம் டாலர் என்பது தெரிந்தது. அது திருட்டுப் போய்விடாமல் இருப்பதற்காகச் சம்பளத்திற்குக் காவல்காரனை நியமித்து இருக்கிறார்கள். மேலும் அதைக் கண்காணிக்கக் காமிராவும் உண்டு. நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் அதைப் பற்றி மணிக்கணக்காக விவரிப்பார்கள். அதை வரைந்த ஓவியரை யாரும் முட்டாள் என்று கூறுவதில்லை. மாறாக அவரைச் சிறந்த கலைஞராக ஏற்றுக்கொள்கிறார்கள். ” எத்தனையோ ஏழைகள் பசியால் வாடும்போது இவ்வளவு விலை கொடுத்து எதற்காக இந்த ஓவியத்தை வாங்கினீர்கள் ” என்று அதன் உரிமையாளரிடம் யாரும் கேட்பதில்லை. ஆனால் சாதாரண மனிதனுக்கு அந்த ஓவியத்தின் பொருள் விளங்கவில்லை என்பதால் அதன் மதிப்பு குறைவதில்லை. அதுபோல் இந்து மதத்தின் தெய்வ வடிவங்களுக்குப் பின்னால் உள்ள தத்துவத்தைப் புரிந்துகொள்ளும் போதுதான் அதன் மகிமையை அறிய முடியும்.

ஹனுமானை வழிபடவேண்டும் என்று சொல்வதன்மூலமும் கணபதியை வழிபடச் சொல்வதன் மூலமும் நம் முன்னோரின் அறிவும் புத்தியும் அனுபவமும் எவ்வளவு சிறந்து விளங்கின என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

பிறநாடுகளின் சொந்தவிஷயத்தைக் குறித்துச் சொல்ல அம்மா விரும்பவில்லை. ஒவ்வொரு நாட்டிற்குச் செல்லும்போதும் அத்தகைய விஷயங்களைக் குறித்து அந்நாட்டவர்கள் பல கேள்விகள் கேட்பதுண்டு. அம்மா ஒன்றும் சொல்வதில்லை. அவ்விஷயங்களைக் குறித்துச் சிந்திக்கும் சுதந்திரம் அவர்க்ளுக்கு உண்டு. அந்நாட்டு மக்கள் தங்களுக்குள் விவாதம் செய்து தீர்மானிக்க வேண்டிய விஷயங்கள் அவை. ஒரு விஷயத்தைக் குறித்து இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. பல வருடங்களாக அம்மா அமெரிக்காவுக்குச் சென்று வருகிறேன். இத்தனை வருடங்களில் அந்நாட்டில் பொருள்களுக்கு ஏற்பட்ட விலை ஏற்றத்தை விட பல மடங்கு விலை ஏற்றம் பாரதத்தில் ஏற்பட்டிருக்கிறது.

வெளிநாட்டவர்கள் இங்குள்ளவர்களைப் போல சோம்பேறிகள் அல்ல. அவர்கள் எந்த வேலையையும் செய்ய அவர்கள் தயங்குவதில்லை. அந்நாடுகளில் பாரதத்தில் நிகழ்வதைப் போல மாதத்தில் இருபது நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறுவதில்லை.
( மீதமுள்ள பத்து தினங்களில் வேலை செய்கிறார்களா என்பது கூடச் சந்தேகத்திற்குரிய விஷயமாகும். )

அதே சமயம் பாரதத்தில் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் நிலைமையே மாறிவிடும். ஒரு நாளில் 22 மணிநேரம் வேலை செய்யவும் தயங்குவதில்லை. அதை விட அதிகமாக வேலை செய்பவர்களை அம்மாவுக்குத் தெரியும்! 22 மணிநேரம் வேலை செய்து விட்டு வந்து, தானே உணவு சமைத்து சாப்பிட்டு வி்ட்டு கலிபோர்னியா ஆசிரமத்திற்கு வந்து சேவை செய்யும் பாரத மக்கள் இருக்கிறார்கள். பாரதத்திலிருந்து போய்விட்டால் நமக்கு உழைப்பதற்கு எவ்விதமான சோம்பலுமில்லை.

 

ஜப்பானில் தினசரி 12 மணிநேரமாவது வேலை செய்யவில்லை என்றால் மனைவியர் திட்டுவர். சிறிது முன்னதாகவே வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டால், ” என்ன! வேலைக்குப் போய்விட்டு இன்று விரைவாகத் திரும்பிவிட்டீர்களே? ” என்று மனைவியர் கேட்பர். ஆனால் இங்கோ தினசரி 8 மணிநேரம் வேலை செய்கிறார்களா என்பதே சந்தேகம். உணவுக்கும் ஓய்வுக்கும் தேநீர் இடைவேளைக்குப் போக வேலை செய்வதற்கு எவ்வளவு நேரம் கிடைக்கும்! வெளிநாடுகளின் முன்னேற்றத்திற்கு அங்குள்ளவர்களின் உழைப்பே காரணமாகும்.

இங்குள்ளவர்களிடம் அதிக புத்தியும் திறமையும் இருந்தாலும் அதை விட சோம்பேறித்தனம் தலைதூக்கி நிற்கிறது. செய்யும் வேலையையும் எவ்வளவு குறைவாகச் செய்யலாம் என்பது தான் இவர்களது சிந்தனை. அதே சமயம் சம்பளத்தில் சிறிதளவு குறைவு ஏற்படுவதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று சிந்திப்பதில்லை. இந்த மனோபாவம் மாறாமல் நாடு எப்படி முன்னேற முடியும்? அப்படியே முன்னேறினாலும் அந்த முன்னேற்றத்தை நிலைநிறுத்தத் தேவையான சக்தியில்லாமல் போகிறது. அம்மா இப்படிக் கூறினாலும் பாரதம் முன்னேற்றத்தின் பாதையில்தான் செல்கிறது. ஆனால் அதை நிலைநிறுத்தக் கூடிய சக்தி குறைந்து விடக் கூடாது. நாம் விழித்து விட்டோம் என்றாலும் படுக்கையிலிருந்து எழவில்லை. விழித்துக் கொண்டது மட்டும் போதாது. எழுந்திருக்க வேண்டும். முனைந்து செயல்படவேண்டும். அப்போதுதான் விழித்ததின் பலன் கிடைக்கும். நாடு முன்னேற்றம் அடையும். பாரதம் பிறநாடுகளுக்கு ஒளிவிளக்காகத் திகழும்.
( நிறைவு)

ஓம் அமிர்தேஸ்வர்யை நம:

av60 tamil

அன்புடையீர்,
அம்மா – நமது தாய், குரு என்பதற்கு மேலாக லட்சக்கணக்கான மக்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்கி வருகிறார். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மனிதகுலத்திற்கு சேவை செய்வதுடன் ஞானம் பகர்ந்தும் வலிமையையும் அளித்து மிகச்சிறந்த தூண்டுகோலாக அம்மா விளங்குகிறார். அம்மாவின் வாழ்வு எப்போதும் நமக்கு நிலையான அன்பு, அமைதி, கருணை, தன்னலமின்மை போன்ற அனைத்து நற்பண்புகளையும் ஒருங்கே நமக்கு நினைவூட்டுகிறது. அம்மாவின் அன்பின் மூலம் வெளிப்படும் அரிய செயல்கள், மன வலிமை, சுயநலத்தியாகம் முதலியவை எண்ணற்றோருக்கு தன்னலமற்ற சேவையில் ஈடுபட ஒரு தூண்டுகோலாக இருக்கிறது.
அம்மா மனிதகுல மேன்மைக்காக எண்ணற்ற சேவைத்திட்டங்களை இந்தியாவிலும் அகிலத்தை அரவணைத்தல் (Embracing the world ) எனும் பெயரில் வெளிநாட்டிலும் செயல்படுத்தி வருகிறார்.
நமது மடம் ஐ.நா சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சேவைக்கான விருது பெற்ற இந்திய தொண்டு நிறுவனங்கள் சிலவற்றுள் ஒன்றாகும்.

அமிர்தவர்ஷம் – 60

அம்மாவின் 60-ஆம் பிறந்தநாள் விழா அமிர்தபுரியிலுள்ள அமிர்தா கல்லூரியில் செப்டம்பர்- 26 & 27 ஆகிய நாட்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள இணையதள அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அமிர்த வர்ஷம் — 60 – நிகழ்ச்சி நிரல்

செப்டம்பர் 25, புதன்
இரவு 9 மணி முதல் 12 மணிவரை — உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள்

செப்டம்பர் 26, வியாழன்
காலை 5மணி — 6.30 மணி வரை — மஹாகணபதிஹோமம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை
காலை 8மணி — 9.00 மணி வரை – கொடியேற்றம், செண்டைமேளத்துடன் கேரள பாரம்பரிய முறையில் வரவேற்பு

காலை 9 மணி — 10 மணி வரை — வரவேற்பு நடனம் — இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் நடன கலைஞர்களது பாரம்பரிய கலாசாரச் சிறப்பு நடனம்

காலை 10மணி — மதியம் 1 மணி வரை — பெண்கள் முன்னேற்றத் திட்டங்களின் தொடக்கம் மற்றும் பல்வேறு செயல் திட்டங்கள்

மதியம் 1 மணி — மாலை 5 மணி வரை – அம்மாவின் தரிசனம் மற்றும் உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள்

மாலை 6.30 மணி — 8.30 மணி வரை — அம்மாவின் பஜனை

செப்டம்பர் 27, வியாழன்
காலை 5மணி — 6.30 மணி வரை — மஹாகணபதிஹோமம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை

காலை 7.45 மணி — 8.15 மணி வரை — சுவாமி அமிர்தசொரூபானந்த புரி அவர்களின் ஆன்மிக உரை

காலை 9 மணி — 11 மணி வரை — அம்மாவின் திருப்பாத பூஜை மற்றும் அம்மாவின் அருளுரை

காலை 11மணி — மதியம் 1 மணி வரை — அமிர்தகீர்த்தி விருது வழங்கல்,
ஏழைகளுக்கான புதிய நலத்திட்டங்களின் துவக்கம் :
· ரூ. 50 கோடி செலவில், இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட உத்தர்கண்ட் மாநிலத்தில் 500 வீடுகளைக் கட்டிக் கொடுத்தல்.
· சமூக மேம்பாட்டைக் கருத்தில் கொண்ட நவீன தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள்.
·50 கோடி ரூபாய் செலவில் ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை.
·‘அமிர்தநிதி ’ விதவைகளுக்கான உதவித்தொகை மற்றும் ’ வித்யாமிர்தம் ’ கல்வி உதவித்தொகையை விரிவுபடுத்துதல்
·ஏழைப்பெண்களுக்கான இலவச திருமணங்கள்.
· ஏழைகளுக்கான ஆடைதானம்
. புதிய ஆசிரம நூல்களின் வெளியீடு

மதியம் 1 மணி முதல் —- அம்மாவின் தரிசனம் தொடங்குதல்

சிறப்பு நிகழ்ச்சிகள் :
செப்டம்பர் 24, 25 & 26 — அதிகாலை முதல் மாலை வரை உலக அமைதி மற்றும் நன்மைக்கான சிறப்பு மஹா சண்டி ஹோமம்

செப்டம்பர் 25 & 26 — நமது கிராமம், நமது உலகம் – ” நம்மால் என்ன செய்ய முடியும்? ” — அகில உலக விஞ்ஞானியர் மாநாடு — உலகம் முழுவதுமுள்ள மிகச்சிறந்த விஞ்ஞானிகள், சமூகத் தலைவர்கள், தலைசிறந்த கல்வியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்களின் பங்கேற்பு .

குறிப்பு:
இது பற்றி மேலும் விவரங்கள் அறிய www.amritapuri.org, www.amritavarsham.org ஐத் தொடர்புகொள்ளவும்.
மின்னஞ்சல் முகவரி: celebration (at) amritavarsham.org, info (at) amritapuri.org
தொலைபேசி : +91 9497714870, +91 (476) 2895288, 2896399

அனைவரும் வருக!! அம்மாவின் அருளைப் பெறுக !!