(ஐயப்ப பக்தர்கள் சங்கமம், திருவனந்தபுரம், ஜனவரி 20, 2019)

அன்பின் வடிவாகவும் ஆன்மாவின் வடிவாகவும் இங்குள்ள அனைவருக்கும் அம்மாவின் பணிவான வணக்கங்கள்.
அண்மையில் சபரிமலை திருக்கோவில்     தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகள் யாவும் வருந்தத்தக்கவையாகும். திருக்கோவில் பிரதிஷ்டையை பற்றியும் ஆலய வழிபாடு முறைகள் பற்றியும் ஞானம் இல்லாதது தான் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம்.
ஒவ்வொரு ஆலயத்திற்கும் அதற்குரிய பிரதிஷ்டை சங்கல்பம் உள்ளது. அதை அலட்சியம் செய்வது சரியல்ல. 


ஆலயத்தில் உள்ள ‌‌விக்கிரகத்திற்கும் எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். எங்கும் நிறைந்த இறைவனுக்கு எல்லைகள் ஏதுமில்லை. இறைவனுக்கு ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை.
இறைவன் எல்லையற்ற சக்தியே.
ஆனால் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் தேவதை இப்படிப்பட்டது அல்ல.
கடலில் உள்ள மீனுக்கும் நீர் தொட்டியில் உள்ள மீனுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.


நீர் தொட்டியில் உள்ள மீனுக்கு தக்க நேரத்தில் உணவளிக்க வேண்டும். நீர் சுழற்சிக்கும் காற்று சுழற்சிக்கும் வழிவகுக்க வேண்டும். ஆனால் கடலில் வாழும் மீனுக்கு இப்படிப்பட்ட தேவைகள் எதுவும் இல்லை. அதேபோல் நதி நீரில் குளிப்பதற்கு விதிமுறைகள் இல்லை. ஆனால் அதே நதிநீரை ஒரு நீச்சல் குளத்தில் நிரப்பும்போது அந்த நீருக்கு குளோரின் முதலிய வேதிப்பொருட்களை சேர்க்க வேண்டும். நீரை தூய்மைப்படுத்த வேண்டும். மேலும் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு செல்லும் முன் நாம் வேறு நீரில் நீராடி உடலில் இருக்கும் வியர்வையை கழுவிக் கொண்ட பிறகு தான் நீச்சல் குளத்தில் இறங்க வேண்டும்.


நீச்சல் குளத்தில் நீந்துவதற்கு நீச்சல் ஆடை அணிய வேண்டும். நீச்சல் குளத்தில் சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது. நதி நீர் தான் நீச்சல் குளத்தில் நிரப்பப்பட்டு இருக்கிறது என்றாலும் கூட, மேல் சொன்ன கட்டுப்பாடுகள் நீச்சல் குளத்திற்கு தேவை. 
எங்கும் உள்ள இறை பேருணர்வுதான் ஆலயத்தில் குடிகொண்டிருக்கிறது என்றாலும் கூட தூய்மை பேணுவது ஆசாரங்களை கடை பிடிப்பது போன்றவை இன்றியமையாதவை.


 நாம் ஒரு விதை விதைத்து நீர் ஊற்றி உரம் இட்டால் அது வளர்ந்து பூக்களையும் காய்களையும் வழங்கும். அதுபோல் ஆலய தேவதைக்கு தக்க நேரத்தில் பூசை செய்ய வேண்டும். நைவேத்தியம் படைக்க வேண்டும். இதர நடைமுறை விதிகளை கடைபிடிக்க வேண்டும். எங்கும் நிறை இறைவனுக்கு இவ் விதிமுறைகள் ஒன்றும் வேண்டாம். 
ஆலயத்தில் ஒவ்வொரு தேவதைக்கும் தனித்தனியான சங்கல்பங்கள் உள்ளன. ரெளத்ர பாவத்திலுள்ள தேவதையின் சங்கல்பம் வேறு. சாந்த பாவத்தில் திகழும் தேவதையின் சங்கல்பம் வேறு. அதுபோல் ஒவ்வொரு கோவில் பிரதிஷ்டைக்கும் அதற்குரிய சங்கல்பங்கள் உள்ளன. இப்படிப்பட்ட பூசைகள் வேண்டும், ஆசாரங்கள் வேண்டும், தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன. பரம்பரையாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஆசாரங்களை சரிவர கடைபிடிக்கவில்லை எனில் ஆலயத்தின் சூழ்நிலைக்கு பாதிப்பு ஏற்படும். 


ஒரு குழந்தைக்கு பெற்றோர்களும் ஆசான்களும் தேவை என்பது போல் ஒரு ஆலயம் அதன் தந்திரி, பூசாரி மற்றும் பக்தர்களை சார்ந்து உள்ளது. நம்பிக்கையற்றவர்கள் ஆலயத்துக்குச் சென்றால் அவர்கள் ஆலயத்தை அசுத்தப்படுத்த கூடும். 
சபரிமலை ஐயப்பன் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரியாக திகழ்ந்தார். அவர் சமாதி ஆவதற்கு முன்பு தெரிவித்த விருப்பத்திற்கு ஏற்பவே ஆலய வழிபாடு முறைகள் வைக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் நம்புகிறார்கள். காலத்திற்கு ஏற்றார்போல் மாற்றங்கள் தேவை. ஆனால் ஆலயங்களை பொறுத்தவரை கண்மூடித்தனமான மாற்றங்களை ஏற்படுத்தினால், நமது பண்பாடு பாதிப்படையும். இது ஒரு குழந்தையை குளிப்பாட்டி குளிப்பாட்டி குழந்தையையே களைந்து விடுவதற்கு ஒப்பாகும். 
ஆதிசங்கரர், நாராயண குரு, சட்டம்பி சுவாமிகள் போன்றோர் அத்வைத சித்தாந்தத்தை தான் நிலைநாட்டினர். இருப்பினும் அவர்கள் நாடெங்கும் பல ஆலயங்களை அமைத்து விதிமுறைகளையும் வழங்கினர். அப்படிப்பட்ட ஒரு கோவிலின் அழைப்பை ஏற்று அம்மா அங்கு சென்றார். கேரளாவில் சிவன் கோவிலில் வலம் வைப்பதன் விதமே வேறு. அம்மா எங்கும் இறைவனையே காண்கிறார் என்றாலும் அங்கு சென்றபோது அம்மா அவ்விதிமுறையை கடைபிடித்தார்.  அம்மா பிரம்மஸ்தான திருக்கோவில் பிரதிஷ்டை செய்யும் முன்பு எல்லா தந்திரிகளையும் அழைத்து அவர்களோடு கலந்தாலோசித்தார். அதுபோல் அம்மா ஆசிரம சீடர்களுக்கு துறவறம் அளிக்கும் முன்பு சன்னியாச பரம்பரையை சேர்ந்தவர்களை அழைத்து அவர்களோடு கலந்தாலோசித்து பண்பாட்டிற்கு ஏற்பவே துறவு அளித்தார். அம்மா ஆசாரங்களை கைவிட்டதில்லை. 


ஆலயங்கள் நமது பண்பாட்டின் தூண்களாகும். எனவே ஆலயங்களை பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் அது நூல் அறுந்த பட்டத்தை போல ஆகிவிடும். 
அம்மா வெளிநாடுகளுக்கு செல்லும் போது விமானத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே புகைபிடிக்க அனுமதிப்பதை கண்டதுண்டு. அதுபோல் விமான நிலையத்திலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே புகை பிடிக்கலாம். இப்படிப்பட்ட விதிமுறைகளை பயணிகள் கடைபிடிக்கிறார்கள். 


மன்னார்சாலை கோவிலில் பெண்கள் தான் பூஜை செய்கிறார்கள். ஆண்களும் பெண்களும் தனித்தனியாக கல்வி பயிலும் பள்ளிகளும் கல்லூரிகளும் உள்ளன. அப்படிப்பட்ட கல்வி சாலைகளில் ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்த யாரும் முயல்வதில்லை. 


சபரிமலை திருக்கோவிலில் குறிப்பிட்ட வயது வரம்பிற்கு அப்பாற்பட்ட பெண்கள் ஆலய வழிபாடு செய்யலாம். எனவே சபரிமலை ஆலயத்தில் பெண்களை நிராகரிக்கவில்லை என்பதுதான் உண்மை. 


பொய் சொன்னால், கண் குருடாகும்! மூக்கு பெரிதாகிவிடும்! என்று தாய்மார்கள் குழந்தைகளை அச்சுறுத்துவது உண்டு. அது உண்மை  எனில் நாம் எல்லோரும் குருடர்களாக இருக்க வேண்டும். ஆனால் பகுத்தறிவு இல்லாத குழந்தைப் பருவத்தில் அக்கூற்று சிறுவர்-சிறுமியர்களை திருத்த உதவும். ஒரு சிறுவன் ஒரு படத்தை வரைந்து தனது தந்தையிடம் அப்பா நான் யானையின் படத்தை வரைந்து இருக்கிறேன் என்றான். அதை வாங்கிப் பார்த்த தந்தை இது யானையின் படம் அல்ல சில கோடுகள் மட்டுமே உள்ளன என்றார். இதைக் கேட்ட சிறுவன் அழத் தொடங்கினான். என்ன சொல்லியும் அவன் அழுகை நிற்கவேயில்லை. கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி எறிய தொடங்கினான். அப்போது அப்பா சொன்னார். ‘மகனே கண்ணாடி வைத்த பின்னர் தான் சரிவர காணமுடிந்தது. மிகச் சிறந்த முறையில் யானையை வரைந்துள்ளாய்’. அடுத்தவரது நிலைக்கு நாம் இறங்கி செல்ல வேண்டும். அதுவே இதயத்தின் மொழி எனப்படும். 

ஆலயங்களை படிக்கட்டுகளோடு ஒப்பிடலாம். படிக்கட்டுகளை பயன்படுத்தி மேலே  சென்றடையும்போது, கட்டிடத்தின் மேல் நிலையும் படிக்கட்டுகளும் சிமெண்ட், மணல் போன்ற பொருட்களால் செய்யப்பட்டன என்பது புரியும். இருப்பினும் நாம் படிக்கட்டுகளை தேவையில்லை என்று கூறி நிராகரிக்க மாட்டோம். எல்லாம் இறைவனே என்று அறிந்த பின்னரும் அடுத்தவர்களும் அதே நிலையை அடைய வேண்டும் என்று கருதி ஆலய வழிபாட்டு முறைகளை நிராகரிக்க மாட்டார்கள். சபரி மலை புனிதப் பயண காலத்தை பற்றி அம்மா ஒரு பரிசோதனை செய்தார். சென்ற பத்து பதினைந்து ஆண்டுகளாக பல மருத்துவமனைகளில் இருந்தும் தகவல் சேகரித்தார். அதன்படி மண்டல காலத்தில் 40 சதவிகித நோயாளிகள் குறைந்து விடுவதை அறிய முடிந்தது. அதற்கு காரணம் மண்டல காலத்தில், அவர்கள் மது அருந்துவதில்லை, புலால் உணவு உண்பதில்லை, மனைவியரை திட்டுவதில்லை, குடும்பத்தினர் ஒருங்கிணைந்து விரதம் கடைப் பிடிக்கிறார்கள். இப்படியாக தனிமனித வாழ்விலும் சமூகத்திலும் இசைவு நிலையை ஏற்படுத்த மண்டல விரதங்கள் உதவுகின்றன. எனவே இந்தப் பண்பாட்டை நிலை நிறுத்துவது இன்றியமையாதது. பண்பாட்டின் அடிப்படையில் தான் சமூகம் நிலைகொள்கிறது. எல்லோரும் இதை புரிந்து கொண்டு முன்னேற வேண்டும். அர்ஜுனன் போர் முறைகளைப் பற்றி கண்ணபிரானிடம் கேட்டார். கண்ணபிரான் போர் முறைகளைப் பற்றி பீஷ்மரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள சொன்னார். ஏனெனில் போர் முறையைப் பற்றிய அறிவுரை வழங்க பீஷ்மர் தான் தக்கவர். தந்திரிகளும் பூசாரிகளும் உங்களைப் போன்ற பக்தர்களும் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டும். ‘மெல்ல சாப்பிட்டால் பனைமரத்தை கூட உண்ண முடியும்’ என்பது ஒரு மலையாள பழமொழி. அம்மாவிற்கு வேறு ஒன்றும் அதிகம் கூறுவதற்கில்லை. இதற்கு முன் பேசிய பலரும் இந்த பிரச்சினையை பற்றி சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டார்கள்.
ஓம் நமசிவாய.

கேள்வி: அம்மா அத்வைதம்தான்  உண்மையெனில் பாவதரிசனத்தின்தேவையென்ன?

அம்மா: அத்வைதம்   பேசும் வேதாந்திகளில்  யாரும் ஆடை அணியாமல் நடப்பதில்லையே? அவர்களும் உடை அணிகிறார்கள், உண்கிறார்கள, உறங்குகிறார்கள், அவை உடல் வாழ்க்கைக்குத் தேவை என்பது அவர்களுக்குத் தெரியும். சமூகத்தின் இயல்புக்கு ஏற்ப உடை அணிகிறார்கள்.

ஒவ்வொரு காலகட்டத்தின் தேவைக்கேற்ப மகான்கள் வருகிறார்கள். ஸ்ரீராமர் வந்தார்:. ஸ்ரீ கிருஷ்ணர் வந்தார் ஸ்ரீராமரை போல் ஸ்ரீகிருஷ்ணர் இருக்க வேண்டும் என்று சொல்வதில் பொருளில்லை.

மருத்துவரிடம் பலவித நோயாளிகள் வருவார்கள் எல்லாருக்கும் ஒரே மருந்தை கொடுக்க முடியாது. ஆளுக்கும் நோய்க்கும் ஏற்பவே சிகிச்சையை நிச்சயம் செய்கிறார். சிலருக்கு மாத்திரை கொடுப்பார் சிலருக்கு ஊசி குத்த நேரிடும். அதுபோல் இங்கே வருபவர்களை அவர்களின் நிலைக்கு இறங்கி சென்று உயர்த்தவேண்டும். சாக்லேட் பலதரப்பட்ட பல மாறுபட்ட நிறமுள்ள காகிதங்களில் சுற்றப்பட்டு இருப்பதை காணலாம். உள்ளே இருக்கும் சாக்லேட்டின் சுவை ஒன்றுதான். வெளியில் பார்க்கும் போது வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றும். இதேபோல் அனைவரிலும் குடியிருப்பது ஒரே சைதன்யம்தான். இதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டுமெனில் முதலில் நாம் அவர்கள் நிலைக்கு இறங்கிச்  செல்ல வேண்டும். அதேசமயம், அங்கேயே அவர்களை நிறுத்தாமல் அவர்களையும், அத்வைத உணர்வு நிலைக்கு உயர்த்திக் கொண்டு வருவதுதான் அம்மாவின் நோக்கம். அதையே அம்மா செய்கிறேன். அனைவரிடமும் அத்வைதம் கூற முடியாது. அனைவருக்கும் குணமற்ற உருவமற்ற பரம்பொருளை உட்கொள்ள முடியாது.

சிலருக்கு ராதாகிருஷ்ணனையும், சிலருக்கு யசோதா கிருஷ்ணனையும் பிடிக்கும். சிலரோ முரளிகிருஷ்ணனை விரும்புவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் அவர்களது ஆனந்தம் அடைகிறார்கள் அது தவறென்று சொல்லமுடியாது. அனைவரும் ஒரே தெய்வத்தை விரும்ப வேண்டும் என்று அம்மாவால்  சொல்ல முடியாது. அதுபோல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனோபாவத்தில் அம்மாவை உட்கொள்கிறார்கள்.

தத்துவத்தை போதித்த போது அதற்கு தகுந்த சம்ஸ்காரம் உள்ள சிலரால் உயர்ந்த நிலையை அடைய முடிந்தது. மற்றவர்களுக்கு அதில் ஆழ்ந்து செல்ல முடியவில்லை. சிலர் மிகவும் பலவீனர்களாக ஆனார்கள். ஒரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருக்கும் சிலர் உண்டு. கேட்டால், “யார் யாருக்கு சேவை செய்வது? எல்லாம் ஒரு ஆத்மாவல்லவா”  என்பர். “ஏன் மதுவருந்தினாய்?” என்று கேட்டால், “நான் குடிக்கவில்லை, நான் ஆத்மா” என்று பதிலளிப்பர். இப்படி அத்வைதத்தை பேசியும், மதுவருந்தியம், பெண்களுக்குத் தொல்லை கொடுத்தும் வாழ்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், தாங்கள் செய்யும் தவறுகளை மறைக்க பயன்படுத்தும் ஒரு திரையே வேதாந்தம். எல்லாம் ஒரே ஆத்மா என்று அனுபவித்து அறிவது  வரை நிலையானது எது, நிலையற்றது எவை என்று அறிந்து விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தர்மம் எது அதர்மம் எது என்று அறிந்து அதை விட வேண்டும். சாக்லேட் இனிப்பாக இருக்கிறது என்பதால், அளவின்றி தின்றால் வயிற்றுவலி வரும். “கொல்துதான் எனக்கு சந்தோஷம்” என்று சொல்லி ஒருவன் கண்ணில் காண்பவர்களை எல்லாம் கொல்ல ஆரம்பித்தால் நிலைமை என்னவாகும்?

எதற்கும் ஒரு தர்மம் உண்டு.மக்களை அந்த தர்மத்திற்கு ஏற்ப வாழ தகுந்தவர்களாக ஆக்கவேண்டும். அங்கே வேதாந்தம், வெறும் வார்த்தையில் நின்றுவிடாமல், செயலில் வெளிப்படவேண்டும். தர்மத்தைப் பின்பற்றி வாழ தகுந்தவர்களாக மக்களை ஆக்க  வேண்டுமெனில் நாம் முதலில் அவர்கள் நிலைக்கு இறங்கி செல்ல வேண்டும். “அம்மாவுக்கு இவை ஒன்றும் தேவையில்லை” என்று சொல்லி விலகி இருந்தால் மக்களை உயர்த்த முடியாது. செவி கேட்காதவர்களுக்கு சைகை மூலம் கற்பிக்கிறோம். அதன் பொருள் கற்பிப்பவருக்கு  பேச்சு வராது என்பதல்ல. சைகை மூலமே, அவர்களுக்கு விஷயங்களை உணர்த்த முடியும். அம்மா சைகை காட்டுவதும், அம்மாவுக்கு மொழி தெரியாத காரணத்தால் அல்ல; பிறரை விழிப்புறச் செய்ய அது தேவைப்படுகிறது. “பொய் சொன்னால் கண் குருடாகும்” என்று சொல்வது குழந்தைகளுக்கு கற்பிக்கவே ஆகும். அது உண்மையாக இருந்தால் இன்று உலகில் குருடர்கள் மட்டுமல்லவா இருப்பார்கள்?  சொல்வது பொய்யாக இருந்தாலும், அதன் மூலம் குழந்தைகளை உண்மை சொல்பவர்களாக ஆக்க முடிகிறது. இதுபோல், மக்களின் இயல்புக்கு ஏற்ப நாம் நடந்து கொள்ள நேரிடும். எப்படியாவது மக்களை மெய்ப் பொருளை நோக்கி அழைத்துச் செல்வதுதான் அம்மாவின் லட்சியம். மக்களை அறியாமையில் இருந்து விடுவிக்க உதவுவது எதுவோ அதுதான் யதார்த்த பகுத்தறிவு. மக்களின் விடுதலையைத் தவிர உலகின் நற்சான்றிதழ் எதையும் அம்மா  எதிர்பார்க்கவில்லை.

ஒரு மனிதன் சகதியில் விழுந்து கிடப்பதை வீட்டின் மாடியிலிருந்து ஒருவன் கண்டான். அங்கிருந்த அந்த மனிதன் கைநீட்டி  விழுந்து கிடப்பவனைத் தூக்கமுடியாது. அவன் கீழே இறங்கிச் சென்று சகதியில் கிடப்பவனின் கைகளைப் பிடித்து தூக்க வேண்டும். இதுபோல், மக்களை விடுதலை பெறச் செய்ய வேண்டுமெனில் நாம் அவர்களின் நிலைக்கு இறங்கி செல்ல வேண்டும்.

சந்தைக் கடந்தே நெடுஞ்சாலையை  அடையமுடியும். நெடுஞ்சாலையை அடைந்து விட்டால் பின்னர் நேராக நடக்கலாம். நல்ல வாகன வசதி உண்டு. பேருந்து உண்டு. ஆனால், சந்திலிருந்து நெடுஞ்சாலையை அடைய வேண்டாமா? அதற்கு சைக்கிள், ஆட்டோ ரிக்ஷா ஆகியவற்றின்  உதவி தேவை. அதுபோல், பந்தம், பாசம் என்ற சந்துகளில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை அத்வைதம் நெடுஞ்சாலை அடையச்செய்ய மற்ற மார்க்கங்கள் எல்லாம் தேவையே.



குழந்தைகளே,
நமது வாழ்வில் சொத்தும், வருமானமும், வாகனங்களும் பிற சுக சௌகரியங்களும் தேவையே. ஆனால், அவற்றைத் தேடி அடைவதில் மட்டும் மூழ்கியிருப்பதல்ல மனித வாழ்வின் லட்சியம். தன்னைப்போல் பிறரையும் காணக் கூடிய மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வதே சரியான வாழ்க்கை வெற்றியாகும். அவ்வாறு அல்லாத வெற்றி, ஒருவிதத்தில் மனிதனுக்கும், சமூகத்திற்கும் தோல்வி ஆகும்.

திறமைகளை வளர்த்துக் கொள்வதால் மட்டும் நாம் வெற்றி பெற முடியாது. எந்த சூழ்நிலையிலும் மனதை அமைதியாக வைத்திருக்க இயல வேண்டும். இல்லாவிடில், நமது திறமைகளைக் கூட முழுமையாக பயன்படுத்த முடியாது போய்விடும். ஒருமுறை உயர்கல்வி பயின்ற இளைஞன் ஒருவன், வேலை தேடி நேர்முகத்தேர்வுக்குச் சென்றான். தேர்வாளர் இளைஞனிடம், “உனது பெயர் என்ன?” என்று கேட்டார். பதற்றமாக இருந்த காரணத்தால், இளைஞன் சிறிது நேரம் மௌனமாக இருந்தான்; பின்னர், விரலை கடிக்க ஆரம்பித்தான். தொடர்ந்து, அவன் மெல்லிய குரலில் பாடுவதை தேர்வாளர் கேட்டார். “நீ ஏன் பதில் கூறவில்லை?” என்று அவர் கேட்டார். அதற்கு அவன், “நான் ஹேப்பி பர்த்டே டூ யூ என்று பாடி பார்க்கிறேன். அதன் இறுதியில் என் பெயர் வரும் என்றான்” இதுபோல், பதற்றத்தால் பெரும்பாலும் நமது பெயர் கூட நமக்கு நினைவுக்கு வருவதில்லை. திறமைகள் எவ்வளவுதான் இருந்த போதும், மனம் சலனமடையும். சலனம் நீங்கும் வரை, அந்தத் திறமைகளை முறையாக பயன்படுத்த முடியாது. உலகின் பார்வையில் வாழ்வில் வெற்றி பெற்றவனாகத் தோன்றும் ஒருவன், உண்மையில் தோல்வி அடைந்த வனாக இருப்பான். மாறாக, உலகின் பார்வையில் தோல்வி அடைந்ததாக காணப்படும் ஒருவன், உண்மையில் வெற்றி பெற்றவனாக இருப்பான். “வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி?” என்ற விஷயத்தைக் குறித்து நூல் எழுதி, புகழும், செல்வமும் சம்பாதித்த ஒரு எழுத்தாளர், இறுதியில் தற்கொலை செய்து கொண்டதாகக் கேட்டிருக்கிறேன். வாழ்வில் வெற்றி பெறுவது குறித்து எழுதுவதாலோ, படிப்பதாலோ, சொற்பொழிவாற்றுவதாலோ ஒரு பயனுமில்லை. மனதை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரவில்லை என்றால், மேற்கூறிய திறமைகள் இருந்தும், அவற்றால் ஒரு பயனும் இல்லாது போகும்.

அம்மாவுக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. வில் பயிற்சி பெற்ற ஒருவன், பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றான்; இறுதியில், உலகக் கோப்பையும் அவனுக்கு கிடைத்தது. இதைக்கேட்ட அவனுடைய நண்பன் ஒருவன் அவனிடம், “வில்பயிற்சியில் திறமை உள்ள ஓர் ஆன்மீக குரு இருக்கிறார். நீ போட்டியில் அவரை வென்றால், உன்னை நான் உலகையே வென்றவனாக ஏற்றுக் கொள்கிறேன்” என்றான். அந்த வீரனும் நண்பனின் அறைகூவலை ஏற்று, குருவின் ஆசிரமத்திற்கு வந்தான். இருவரையும் குரு வரவேற்றார். நண்பன் குருவிடம், “இவன் வில்வித்தையில் வென்று, உலகப் பதக்கம் பெற்றவன்” என்றாலன். அதைக் கேட்ட குரு, அவனது வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறினார். அப்போது நண்பன் குருவிடம், தாங்கள் இருவரும் வந்ததன் நோக்கத்தை தெரிவித்தான். குரு இருவரையும் நோக்கி, “நாம் சற்று நேரம் நடந்து விட்டு வரலாம்” என்றார். பின் வில் வீரனிடம், கையில் வில்லையும், அம்பையும் எடுத்து கொள்ளுமாறு கூறினார். வெகுதூரம் நடந்த அவர்கள், உயரமான மலையின் சிகரத்தை அடைந்தனர். அங்கே அந்த மலையை மற்றொரு மலையுடன் இணைக்கும் தொங்கு பாலம் இருந்தது. மலைகளுக்கு நடுவில் மிகப்பெரிய நதி ஒன்று பெருகி ஓடிக்கொண்டிருந்தது. மூவரும் தொங்கு பாலத்தில் நடக்க ஆரம்பித்தனர். பாலத்தின் நடு பாகத்தை அடைந்தபோது குரு, “மறு கரையிலுள்ள அந்த மரத்தில் ஒரு பழம்தான் உள்ளது. அதை நீ அம்பெய்து வீழ்த்துவாயா?” என்று கேட்டார். வில் வீரன் அம்பைத் தொடுத்தான். அப்போது வீசிய பலமான காற்றில், தொங்குபாலம் பயங்கரமாக ஆடியது. பாலத்திலிருந்து கீழே உள்ள நதியில் விழுந்து விடுவோமோ என அந்த வீரன் பயந்தான். பயத்தால் அவனது உடல் நடுங்கியது. அவன் மிகவும் கஷ்டப்பட்டு, ஒரு விதமாக தன்னை கட்டுப் படுத்தியபடி அம்பைச் செலுத்தினான். ஆனால் அது குறியை எட்டவில்லை. குருவின் முறை வந்தபோது, அவர் மிகவும் அமைதியுடன் அம்பை எடுத்து, வில்லில் தொடுத்தார். அப்போதும் பாலம் மிக வேகமாக ஆடிக்கொண்டிருந்தது. ஆனால், குருவின் கவனம் முழுவதும் பழத்தின் மீதே இருந்தது. அவர் ஒரே அம்பில் பழத்தை வீழ்த்தினார். தனது மனதின் “ரிமோட் கன்ட்ரோல்” அவரது கையில் இருந்தது. தன்னைச் சுற்றிலும் நடக்கும் எச்செயலும், அவரது கவனத்தை சிறிதும் தடுமாறச் செய்யவில்லை. இதனால், அவருக்கு சிறிதும் பயம் தோன்றவில்லை.

ஆடிக்கொண்டிருக்கும் மேடைமீது மன அமைதியுடன், நன்றாக நடனம் ஆட முடியுமா? அமைதி இழந்த மனதுடன் வாழ்க்கை நடத்துவதும் அது போன்றதே ஆகும். எந்தவித மாறுபாடும், தடுமாற்றமும் இல்லாமல் இருப்பவர் இறைவன் ஒருவரே. அந்த இறைவனை வாழ்வின் ஆதாரமாகக் கொண்டால், நம் மனமும் தடுமாற்றமின்றி, அமைதியாக இருக்கும். இறைவன் எனும் அசைவற்ற மேடைமீது தான் நாம் வாழ்வெனும் நடனத்தை ஆட வேண்டும். ‘என்றும், எப்போதும் நமக்கு நிழல் தந்து காப்பதற்கு இறைவன் இருக்கிறார்’ என்ற உறுதியான உணர்வு நமக்கு இருந்தால், எந்தவித பயமோ, சந்தேகமோ இன்றி, நம் வாழ்க்கையை வாழ முடியும். அது நம் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்கும். பிறருக்கும் மகிழ்ச்சியை அளிக்க நமக்கு இயலும்.

குழந்தைகளே,
நான் விரும்புவதை காணவும், கேட்கவும், சொல்லவும் கூடிய சுதந்திரம் இருந்து விட்டால், நம் எல்லா பிரச்னைகளும் முடிவுக்கு வந்துவிடும் என நம்புகிறோம். ஆனால், இக்கருத்து சரியல்ல. சுதந்திரமின்மை துன்பத்திற்கு காரணம் என்பது போல், அளவுகடந்த சுதந்திரமும் நமது துன்பத்திற்கும், துயரத்திற்கும் காரணமாகிவிடும்.

பாரத மக்களுக்கு இருப்பதைவிட, மேலை நாட்டு மக்களுக்கு சுதந்திரம் மிக அதிகமாக உள்ளது. ஆனால், அவர்களுக்கும் துன்பமும், நிராசையும் உண்டு. சரியான சுதந்திரம் வெளியில் உள்ளதல்ல. மாறாக, அது தனக்குள்ளேயே இருந்து வரவேண்டும்; தனக்குள் கண்டடைய வேண்டியதாகும். விருப்பு வெறுப்புகளிலிருந்தும், ஆசைகளிலிருந்தும் விடுதலை அடைந்தால், பின் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நாம் சுதந்திரமாக இருப்போம்.

இன்று மேலை நாட்டவர் உலகியல் வாழ்வை துறந்து ஆன்மீகத்தை நோக்கி திரும்புகிறார்கள். அவர்கள் பாரதிய பண்பாட்டை குறித்து படிக்கவும், அதை ஏற்றுக்கொள்ளவும் ஆரம்பித்து விட்டனர். ஆனால், நாம் உலகில் சுகங்களில் அதிகமாக மூழகுவதுடன், மேலை நாட்டவரின் வாழ்க்கை முறையை பின்பற்றுவதில் உற்சாகம் காட்டுகிறோம். அவர்கள் தின்று துப்பிய சக்கையை பெரிதாகக் கருதி, நாம் அதை எடுத்து விழுங்குகிறோம்; சனாதன தர்மத்தின் நன்னெறிகளை அலட்சியம் செய்கிறோம்.

மேலைநாட்டவர் எதையும் படித்து புரிந்து கொண்ட பிறகே நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் நாமோ இதற்கு நேர்மாறாக நடந்து கொள்கிறோம். நமது நம்பிக்கை என்பது ஆலயங்களில் நின்றுவிடுகிறது. யாராவது ஒருவர் அதை சிறிதளவு விமர்சனம் செய்தாலும், மாறிவிடும் அளவு சக்தியே அந்த நம்பிக்கைக்கு உள்ளது. நமது அறிவு சந்தேகத்திற்கு இடமில்லாதது ஆக ஆக வேண்டும். அது ஆழமாக வேரூன்ற வேண்டும். அப்படிப்பட்ட அறிவானது, எத்தகைய எதிரான சூழ் நிலையையும் கடந்து செல்லும் ஆற்றல் உள்ளதாக இருக்கும். யுக்திபூர்வமான சிந்தனையையம், விசாரணையையும் நமது இயல்பாக ஆக்கவேண்டும். மேலைநாட்டவர் எழுதிய நூல்களைச் சார்ந்தே இன்று பாரதப் பண்பாட்டை குறித்து நாம் படிக்கவும், மதிப்பிடவும் செய்கிறோம். இந்த கண்ணோட்டம் மாற வேண்டும்.

அம்மா உலகில் எத்தனையோ நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். அந்நாட்டு மக்களுக்கு எல்லாம், தங்களுடைய பாரம்பரியத்தை குறித்தும், ஆச்சாரங்களை குறித்தும் மிகுந்த பெருமிதமும், மதிப்பும் உண்டு. ஆஸ்திரேலியாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் உள்ள ஆதிவாசிகளுக்குக் கூட தங்களுடைய பாரம்பரியத்தில் பெருமிதம் இருக்கிறது. ஆனால் பாரத மக்களான நமக்கோ, நமது பண்பாட்டை குறித்த அறிவும் இல்லை; பெருமிதமும் இல்லை. நம்மில் பெரும்பாலோர் அதை மிகவும் அற்பமாக காண்கிறார்கள். அஸ்திவாரம் ஆழமாக இருந்தால் மட்டுமே, உயரமான கட்டிடத்தை எழுப்ப முடியும். அதுபோல் முன்னோர் வழி வந்த பண்பை குறித்தும், நமது மூதாதையரின் வாழ்வைக் குறித்த அறிவும், பெருமிதமும் இருந்தால்தான் சிறப்பு மிகுந்த நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் உருவாக்க நமக்கு இயலும்.

“இந்த மனோபாவம் குறுகிய சிந்தனையின் விளைவு அல்லவா?” என்று சிலர் கேட்கக்கூடும். நமது பாரம்பரியத்தை குறித்த அறிவும், பெருமிதமும் உலகிற்கு நன்மை செய்யுமாறே நம்மை தூண்டுகின்றன. நற்செயல் புரிவதற்கு உற்சாகமூட்டும் ஒன்று, ஒருநாளும் குறுகிய சிந்தனையல்ல. சுதந்திரதின விழாவை கொண்டாடும் இவ்வேளை, ஆத்ம நிந்தனைக்கும், பிறரைப் பழிப்பதற்கும் உரிய வாய்ப்பல்ல. மாறாக, நமது தவறுகளை திருத்தவும், நற்செயல்களில் ஈடுபடவும் வேண்டிய வேளையாகும். அனைவரும் உறுதியுடனும், ஒரு மனதாகவும் செயல்பட்டால் மக்களின் அறியாமைக்கும், ஏழ்மைக்கும் முடிவைக் கொண்டு வரலாம்.

சுதந்திர தின விழா கொண்டாடும் இவ்வேளையில், நாம் செய்ய வேண்டியது என்ன? புகை பிடிக்கும் வழக்கம் உள்ளவர்கள் அப்பழக்கத்தைக் கைவிட உறுதிகொள்ள வேண்டும். மது அருந்துபவர்கள், அப்பழக்கத்தைத் துறப்பதாக தீர்மானம் எடுக்க வேண்டும்.இத்தீய பழக்கங்களுக்குச் செலவிட்டு வந்த பணத்தை சேமித்தால், அதைப் பயன்படுத்தி, கிராமங்களில் உள்ள குடிசைகளுக்கு பதிலாக வீடுகள் கட்டிக் கொடுக்கலாம். பணம் இல்லாத காரணத்தால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்ட குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்டி படிக்க வைக்கலாம். இளைஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி, கிராமங்களில் உள்ள சாக்கடைகள் போன்றவற்றை தூய்மை செய்து, கிராம சுற்றுப்புற தூய்மை நிறைந்ததாக ஆகலாம். இப்படியாக, ஒவ்வொருவரும் முயன்றால், நம் பாரதம் ஐஸ்வர்யம் நிறைந்ததாக ஆகும். பூமியையே நம்மால் சொர்க்கமாக மாற்ற முடியும்.

பிறப்பு இறப்பு அற்ற சர்வேஸ்வரன் ஒரு மனிதக் குழந்தையாக வந்து அஷ்டமிதிதியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த நன்னாளே ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாகும்

பகவான் அவதரித்த நேரத்தில் சுற்றிலும் ஒளி நிறைந்தது. திசைகள் தெளிவடைந்தன. மனிதர்களின் மனங்கள் ஆனந்தமடைந்தன. செடிகளும் மரங்களும் பூக்கள் நிறைந்ததாக மாறியது. பகவான் இருந்த சிறைக்கதவுகள் தானே திறந்தன. சிறையிலிருந்த வசுதேவருடைய கால்களில் கட்டிய சலங்கைகள் தானே அவிழ்ந்ததன. குழந்தை கிருஷ்ணருடன் அவர் கடந்து செல்ல யமுனை நதி வழிவிட்டது. என்றெல்லாம் பாகவதத்தில் கூறப்படுகிறது.

பகவான் அவதரித்த நேரத்தில் இயற்கையில்க் காணப்பட்ட மாற்றங்களைப் போல நமது மனதிலும் ஞானத்தின் ஒளி, நிறைந்து காணப்படும் வசுதேவரைப் போல பகவானை இதயத்தில் சேர்த்து முன்னேறும்பொழுது நம்முடைய வாழ்விலும் எல்லா தடைகளும் விலகி நல்வழி பிறக்கும். நாம் நமது இலட்சியத்தை விரைவில் அடைவோம்.

பக்தர்களுக்கு மகிழ்ச்சியளித்தல், தர்மத்தை பாதுகாத்தல், காலத்திற்கேற்றவாறு தர்மத்தை வெளிப்படுத்துதல், சமூகத்தின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தேவையான உபதேசங்களை கொடுத்தல், நம்முடைய பண்பாட்டை எல்லா வழியிலும் உயர்த்துதல், எதிர்கால சந்ததி வழிபடக்கூடிய வகையில் நல்ல லீலைகளை புரி தல், போன்றவையே அவதாரத்தின் தர்மங்கள். இவையனைத்தையும் தன்னிகரற்ற முறையில் பகவான் தமது வாழ்வில் கடைபிடித்தார். ஒரு பொழுதும் குறையாத பிரசாத மதுர பாவம், விதவிதமான செயல்களில் ஏற்படுதல், எதனுடனும் ஒட்டாமல் தாமரை இலை தண்ணீர் போல் இருத்தல் போன்ற்வை பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தனித்தன்மை ஆகும்.

மேடையில் பலப்பல வேடங்கள் அணியும் ஒரு நடிகனைப்போல தனது வாழ்க்கையையே ஒரு மேடையாக்கினார், லாகவத்துடன் ஒவ்வொரு வேடங்களையும் பூண்டார், அதே லாகவத்துடன் அணிந்த வேடங்களை கழற்றவும் செய்தார். எதிலும் அவர் ஒட்டவில்லை ஆனாலும் அனைத்தையும் அவர் சிறப்பாக்கினார். மனதை முற்றிலுமாக வெல்லும்பொழுதே நாம் முழுமையடைகின்றோம் பகவான் முற்றிலும் தனது மனதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் அதுவே அவரை நாம் பூர்ணாவதாரம் என்று சொல்லக் காரணம் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு செல்லும் லாகவத்துடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் புன்னகையுடன் எதிர்கொண்டார். காற்று எல்லா இடத்திலும் இருந்தாலும் ஒரு இடத்திலும் அது தங்கி இருப்பதில்லை அதை யாராலும் கட்டவும் முடியாது. பகவானும் அதுபோலவே இருந்தார்.ஸ்ருதியும் தாளமும் லயமும் கொண்ட இனிமையான ஒரு சங்கீதத்தைப் போல அவர் வாழ்க்கை அமைந்திருந்தது. அவரது வாழ்வின் முழுமை அவரது உபதேசங்களிலும் பிரதிபலிக்கின்றது. வாழ்வில் அனைத்துத் துறையில் இருப்பவறையும் உயர்த்தும் வகையில் ஆன்மீகமாகவும் உலகியலாகவும் அவருடைய உபதேசம் அமைந்திருந்தது.

பகவான் எனப்படும் அன்புச் சூரியன் எப்பொழுதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாம் நமது வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் அடைத்து விட்டு உள்ளே அமர்ந்து பிரகாசம் அல்லது ஒளி வீட்டில் வரவில்லை என்று குறை கூறுவது சரி இல்லை. அகந்தை எனும் கதவைத் திறந்து நாம் வெளியே வரவேண்டும் அப்பொழுது பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் எனப்படும் அன்பின் இனிமையை நாம் அனுபவிக்கலாம் அந்த அன்பிற்கு குழந்தைகள் அனைவரும் தங்களது இதயக் கதவைத் திறக்க அம்மா பரமாத்மாவிடம் அர்ப்பிக்கிறேன்.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி உடலை நீத்த காஞ்சி காமகோடி பீடத்தின் 69ஆவது சங்கராச்சாரியார் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு அம்மா தனது இதய பூர்வமான இறுதி அஞ்சலியை தெரிவித்தார். அவரின் பிரிவால் வாடும் அவரது பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் தனது அன்பான ஆறுதலையும் தெரிவித்தார். சங்கராச்சாரியார் அவர்களின் இறுதிச்சடங்கிலும் பிரார்த்தனையிலும் கலந்து கொள்ள அம்மாவின் மூத்த துறவிச்சீடரான ஸ்வாமி ராமகிருஷ்ணானந்தபுரி அவர்களை அனுப்பி வைத்தார்.

பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பிரிவு மிகவும் வேதனை அளிக்கிறது. நான் உடலல்ல அனைத்திலும் நிறைந்திருக்கும் சைதன்யமே என்று அறிந்த ஒரு துறவி தன் உடலை துறக்கும்போது வருந்துவது முறையா என்று சந்தேகம் தோன்றலாம். இறுதி உண்மை அதுவே என்றாலும் பௌதீக நிலையிலிருந்து சிந்திக்கும்போது ஒருவரது பிரிவு நமக்குள் ஒரு வெறுமையை உண்டாக்கவே செய்கிறது. ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பிரிவு, அன்னாரது பக்தர்களின் உள்ளங்களில் மட்டுமின்றி, சனாதன தர்மத்தை பரவச்செயதவர் என்ற வகையில் பாரதத்திற்கும், ஈடு செய்ய இயலாத இழப்பையும் மிகப்பெரிய வெற்றிடத்தையும் உண்டாக்கியிருக்கிறது.

ஸ்வாமிகள் வேத வேதாங்கங்களின் கரைகண்டவராக இருந்தார். மறையின் இறுதி நோக்கமான வேதாந்த தரிசனத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக ஒலித்து வந்தது அன்னாரது குரல். அவரது தேகத் தியாகத்தின் மூலம் ஆறு தரிசனங்கள் மற்றும் வேத வேதாங்கங்களைப் பற்றி அதிகாரபூர்வமாகக் கூறக்கூடிய ஒரு ஆச்சாரியரை பாரதம் இழந்துள்ளது. வேத தர்மத்தை முழுமையாக பாதுகாத்து வளர்த்துப் பரவச் செய்வதிலும் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார். அவரது சொற்பொழிவுகள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தூண்டுதலாகவும் வழிகாட்டுதலாகவும் அமைந்திருந்தன.

அவர் மடாதிபதியாக இருந்த பொழுது சமுதாயத்தில் துயரத்தால் தவிப்பவர்களின் உயர்வுக்காக எண்ணற்ற ஜீவகாருண்ய நற்பணிகளை காஞ்சி மடம் செயலாற்றியுள்ளது . ஆழ்ந்த அறிவாற்றல் மற்றும் கருணையுடன் கூடிய அணுகுமுறையுடன் உலக நன்மைக்காக ஸ்வாமிகள் எப்பொழுதும் பணியாற்றி வந்தார்.

பல ஆண்டுகளாக நிலை நின்றிருந்த சம்பிரதாயங்களைக் கடந்து 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஸ்வாமிகள் {news} அமிர்தபுரி ஆசிரமத்திற்கு வருகை புரிந்தது ஒரு உண்மையான சந்நியாசிக்கு இருக்க வேண்டிய தீரத்தையும் பயமின்மையையும் பரந்த மனதையும் காட்டியது.

காஞ்சி மடத்திற்கு வருமாறு அவர் அழைத்திருந்த போதும் அம்மாவால் அப்பொழுது செல்ல இயலவில்லை. அவர் சமாதி ஆகியிருக்கும் இந்த சமயத்தில் மனதால் அங்கே சென்று அவரது பௌதீக சரீரத்திற்கு மரியாதையையும் இதயப்பூக்களையும் அர்ப்பிக்கிறேன்.

-அம்மா

இன்று மனிதர்கள் ‘நடமாடும் விபத்துக்களாகவே’ மாறிக்கொண்டிருக்கிறார்கள்

இன்று மனிதர்கள் ‘நடமாடும் விபத்துக்களாகவே’ மாறிக்கொண்டிருக்கிறார்கள். இயற்கை சீற்றங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.இருப்பினும் அவை ஏற்படும் முன்பே அறியவல்ல தொழில்நுட்ப வசதிகள் இன்று இருக்கின்றன. ஆனால், மனித மனதில் ஏற்படவல்ல பேரழிவுகளை முன்பே தெரிவிக்கக்கூடிய இயந்திரத்தை இதுவரை அறிவியல் கண்டுபிடிக்கதொழில்நுட்பத்தால் கண்டுபிடிக்க இயலவில்லை. புவியின் வெப்பம் அதிகரித்தல், பருவ நிலை மாற்றங்கள், மேலும், மனிதன் பூமி மற்றும் இயற்கையுடைய எதிர்காலம் போன்றவற்றைப்பற்றி ஆராயவும்,பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கவும், மாநாடுகளும், விவாதங்களும், உயர்மட்ட கூட்டத்தொடர்களும்  உலகெங்கும் நடைபெறுகின்றன. ஆனால், மனித மனதின் வெப்ப நிலை அபாயகரமான விதத்தில் உயர்கிறது. மனதுள் பருவநிலை மாற்றங்கள் அபாயகரமான விதத்தில் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட அபாயங்களைக் குறித்து  யாரும் ஆழமாக சிந்திப்பதில்லை.  உயர்மட்ட விவாதங்களும், தீர்வு காணல்களும்,  எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பிரச்னைகளைக்குறித்தே  ஆகும். உலகெங்குமுள்ள மனித இனம், அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்ப்பதற்கான முயற்சி மெல்லத்தான் ஏற்படுகிறது.

பயம் மற்றும் மன அழுத்தம்  

இன்று பயம் மற்றும் மன அழுத்தமே வாழ்வின் அடித்தளமாகிவிட்டன.எல்லோரும் மன அழுத்தம் இல்லாத வாழ்வைத்தான் விரும்புகிறார்கள். ஆனால், பலரும் இலவசமாகவே மன அழுத்தத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். வாழ்வின் சூழ்நிலைகள் மாறிக்கொண்டேயிருக்கும்.‘மாற்றம்’ ஒன்று மட்டுமே இயற்கையின் மாறாத விதிமுறையாகும். ஆனால், நமது மனதும், மனோபாவமும்தான் அனுபவங்களை மகிழ்வுள்ளதாகவோ, துன்பம் நிறைந்ததாகவோ மாற்றுகின்றன. மனதை கட்டுப்படுத்த இயலாத வரை துன்பம் நம்மை துரத்திக்கொண்டேயிருக்கும்.  ஆனால் மனது நமது கட்டுப்பாட்டில் வரும் பொழுது, எந்த பேரிடராலோ, இயற்கைச் சீற்றத்தாலோ, தீய அனுபவத்தாலோ, நம்மை துன்பத்தில் ஆழ்த்தவோ, நலிவடையச்   செய்யவோ இயலாது. உண்மையில் நன்றியுணர்வுதான் மகிழ்ச்சியின் அடிப்படை. மனதில் நன்றியுணர்வு நிறையும்போது தானாகவே இன்பம் ஏற்படும். அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு அனுபவத்தையும், சரியான முறையில் ஆராய்ந்து பார்த்தால், மகிழ்ச்சியானது, நன்றியுணர்வை மனதில் ஏற்படுத்த வேண்டுமென்றில்லை. அதற்கு மாறாக நன்றியுணர்வானது வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்ற உண்மை புரியும்.

–அம்மாவின் 63 ஆம் அவதாரத்திருநாள் அருளுரையிலிருந்து

இன்று பல துறைகளிலும் பாரதத்தின் முன்னேற்றத்தைக் காணும் போது, அது மிக்க எதிர்பார்ப்பளிப்பதாக காணப்படுகிறது. பொருளாதார துறையிலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையிலும் பாரதம்  முன்னேறிக்கொண்டிருக்கிறது. ‘மங்கள்யான்’ மற்றும் ‘செவ்வாய் ‘ கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட விண்வெளிக்கோள்  போன்றவை உலக நாடுகளின் பெரு மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருக்கிறது. ஆனால் இங்குள்ள  ஒவ்வொரு ஏழையின் வாழ்வும் மங்களகரமானால் மட்டுமே, பாரதத்தின் வளர்ச்சியை முழுமையடைந்ததாகக் கருதமுடியும். சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன், பாரதமெங்கும்  மடம் 101 கிராமங்களை தத்தெடுத்தது. அவற்றில் பல கிராமங்களின் நிலையும் கவலைக்கிடமாக இருக்கிறது. சென்ற 100 ஆண்டுகளில் கிராமங்களில் உள்ளவர்களின்  வாழ்க்கைத்தரம் பெரிதாக முன்னேறவில்லை. கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, நமது உடலில் கை கால்கள் மட்டும் வளர்ந்து மற்ற பகுதிகள் வளராமல் இருப்பதற்கு சமமாகும்.

பாரதத்தின் ஆத்மா கிராமங்களில் குடிகொண்டிருக்கிறது

பாரதத்தின் ஆத்மா கிராமங்களில் குடிகொண்டிருக்கிறது  என்பதை மறந்துவிடக்கூடாது. காலத்திற்கு ஏற்றார் போல்,கிராமங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி  பெறுவதோடு பழைய கலாச்சாரம் மற்றும்  நல்லியல்புகளையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இதயத்தில் கருணை பிறப்பெடுக்கும்பொழுதுதான் மனிதன் மனிதனாகிறான். கருணையில்லாதவர்கள் வெறும் மிருகங்களேயாவர்.

கல்வியானது விழிப்புணர்வை  நம்முள் உருவாக்க வேண்டும்

நாம் உடற்பயிற்சி சாலைக்குச் சென்று கைகளின் தசைகளுக்கு மட்டும் பயிற்சி கொடுப்பது போன்றதாக இருக்கிறது  இன்றைய கல்விமுறை. உடலின் சில  தசைகளுக்கு மட்டும் பயிற்சி கொடுத்து  மற்ற உறுப்புக்களுக்கு சரியான விகிதத்தில் பயிற்சியளிக்கவில்லையெனில் அவை உருத்திரிந்து விகாரமாகப் போய்விடும். இதுபோல் மனிதனுடைய புத்தியையும் நினைவாற்றலையும் வளர்த்து உற்பத்தித்திறனைப் பெருக்கும் ஒரு எந்திரமாக மாற்ற முற்படுகிறது  இன்றைய கல்விமுறை.

உண்மையில் கல்வியானது சொற்கள்,எண்ணங்கள், செயல்கள்,கண்ணோட்டம் முதலியவற்றை ஒளிமயமான கலாச்சாரம் நிறைந்ததாக ஆக்க உதவ வேண்டும். இந்தப் படைப்பில் உள்ள எல்லா உயிரினங்களுக்கிடையேயுள்ள ஒருங்கிணைப்பைப்  பற்றிய  விழிப்புணர்வை நம்முள் அது  உருவாக்க வேண்டும். ஆனால் இன்று  மனிதர்கள்   ‘ நான் வெற்றிபெற வேண்டும் ‘ என்று மட்டுமே எண்ணுகிறார்கள். ‘நான்,நான்,நான்.’ என்கிற ஒரே மந்திரத்தை மட்டுமே பலரும் உச்சரிக்கிறார்கள். விளைவை மட்டும் மனதில் கருதி செயலாற்றுகிறார்கள். தாங்கள் நினைக்கும் பயனைப்பெறுவதற்காக,என்ன வேண்டுமானாலும் செய்யத்தயாராக இருக்கிறார்கள்.  குற்றங்கள் புரியக்கூட அவர்கள் தயங்குவதில்லை. இப்படிப்பட்ட தன்னல மனோபாவமானது, அடுத்தவர்களை எதிரியாகவே கருதச்செய்கிறது. கண்மூடித்தனமான போட்டியுணர்வை ஏற்படுத்தி,எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் செய்கிறது. எனவே மனிதர்களின் முயற்சி நேர்மையற்றதாகவும், முழுமையில்லாததாகவும் இருக்கிறது.

போட்டியுணர்வைக்காட்டிலும் நட்பும் கூட்டுறவும்தான் செயல்களின் தரத்தையும் உற்பத்தி திறனையும் அதிகரிக்கும்.  அவ்வியல்புகள் ஒரு நபரை மெல்ல மெல்ல உயர்த்திடும். நீங்கள் தேனீக்களை கவனித்திருக்கக்கூடும். தேனின் அளவு, தரம், புனிதத்தன்மை இவைகளுக்குப்பின்னால் உள்ள இரகசியம் என்ன? தேனீக்களுக்கிடையில் உள்ள ஒற்றுமையுணர்வு, நட்பு மற்றும் கூட்டுறவுதான் காரணம். அது மட்டுமல்ல ; தேனீக்கள், வியக்கத்தக்க விழிப்புணர்வோடும் கவனத்தோடும் செயலாற்றுகின்றன