கேள்வி: விக்கிரக வழிபாடு என்ற பெயரில் சிலர் இந்துமதத்தை நிந்திக்கிறார்களே! இதில் ஏதாவது பொருள் இருக்கிறதா?

அம்மா: எந்த நோக்கத்துடன் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஏதாவது ஒரு வகையில் விக்கிரக வழிபாடு எல்லா மதங்களிலும் இருக்கிறது. கிறிஸ்துவ மதத்தில் உண்டு ; இஸ்லாம் மதத்தில் உண்டு; புத்த மதத்தில் உண்டு; கிறிஸ்தவ மதத்தில் பாயாஸ நைவேத்தியமும், மலர் அர்ச்சனையும் இல்லை; அவ்வளவுதான். அதற்குப் பதிலாக மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்கள். ரொட்டியைக் கிறிஸ்துவின் உடலாகவும், திராட்சை மதுவை அவரது இரத்தமாகவும் கருதிச் சமர்ப்பிக்கிறார்கள். இந்துக்கள் கற்பூர ஆரதி காட்டுகிறார்கள் என்றால் கிறிஸ்தவ மதத்தில் குங்கிலியத் தூபம் புகைக்கிறார்கள். அவர்கள் சிலுவையைத் தியாகத்தின் சின்னமாகக் காண்கிறார்கள். கிறிஸ்துவின் சிலைக்கு முன்னால் மண்டியிட்டு வணங்குகிறார்கள். இஸ்லாம் மதத்தில் மெக்காவைத் தூய்மையானதெனக் கருதி அது உள்ள திசையை நோக்கித் தொழுகிறார்கள். ‘காபா‘வுக்கு முன்னால் அமர்ந்து இறைவனின் கல்யாண குணங்களைச் சிந்தித்துப் பிரார்த்திக்கிறார்கள். இந்தப் பிரார்த்தனைகள் எல்லாம் நம்மிடம் நல்ல குணங்களை விழிப்புறச் செய்வதற்காகவே ஆகும். அ, ஆ, இ, ஈ என்று படிப்பது, எழுத்துக்களைக் கூட்டி, வார்த்தைகளைப் படிப்பதற்காகவே ஆகும். ஏ, பி, ஸி, டி என்று படிப்பது ஆங்கில வார்த்தைகளைப் படிப்பதற்காகவே. அதேபோல் இப்படிப்பட்ட வழிபாடுகள் எல்லாம் இறை குணங்களை நாம் பெறுவதற்காகவே ஆகும்.