அன்பு என்பது நம்மிடமே இருந்தும் நாம் அறியாமல் இருக்கும் சொத்தாகும்

இறைவன் எல்லைகளும், வேற்றுமைகளும் இல்லாத அகண்டமான ஓருமையாவார்.இயற்கையிலும், அண்டத்திலும், மிருகங்களிலும், மனிதர்களிலும், செடி கொடிகளிலும், மரங்களிலும், பறவைகளிலும், ஓரோர் அணுவிலும், இறையாற்றல் நிறைந்து ததும்பி நிற்கிறது. உயிருள்ளதும் உயிரற்றதுமான
அனைத்தும் இறைமயமேயாகும்.இந்த உண்மையை நாம் முழுவதுமாக அறிந்தால்,நம்மால் நம்மீதும், மற்றவர் மீதும் இந்த உலகின் மீதும் அன்பு செலுத்த மட்டுமே இயலும்.

அன்பின் முதல் அலையை நாம் நம்மிடமிருந்துதான் தோற்றுவிக்கவேண்டும். அமைதியாக உள்ள ஒரு குளத்தில் ஒரு கல்லை எறிந்தால், முதல் அலை அந்தக் கல்லை சுற்றித்தான் வட்டமாகத் தோன்றும். மெல்ல அந்த அலையின் வட்டம் பெரிதாகி, குளக்கரையை சென்றடையும். இதைப்போலவே அன்பும் நமக்குள்ளேயிருந்துதான் முதலில் தொடங்கவேண்டும். அவரவருக்குள் குடிகொண்டுள்ள அன்பைத் தூய்மைப்படுத்த இயன்றால், மெல்ல அது வளர்ந்து பெரிதாகி இந்த உலகம் முழுவதையும் அரவணைக்கும்.

ஒரு புறாவின் கழுத்தில் பாரமுள்ள ஒரு கல்லைக் கட்டினால், அந்த புறாவால் பறக்க இயலாது. அதுபோல் அன்பெனும் புறாவின் கழுத்தில், நாம் இன்று பற்று எனும் கல்லை கட்டியிருக்கிறோம். எனவே, நம்மால் சுதந்திரம் எனும் எல்லையற்ற ஆகாயத்தில் பறக்க இயலாது போகிறது. ‘நான்’ ‘எனது’ என்கிற பற்றெனும் சங்கிலியால் நாம் அன்பை பிணைத்துள்ளோம். அன்பில்லையெனில் வாழ்வே இல்லை. அன்பில்லையெனில் எந்தத்துறையிலும் தொண்டாற்றவும் இயலாது. இரண்டுபேர் இணைந்து வாழும்பொழுது இயற்கையாகவே முரண்பாடு ஏற்படும். எல்லாவித உறவுகளிலும் நாம் இதைத்தான் காண்கிறோம்.

பொறுமையும் சகிப்புத்தன்மையும் உள்ள இடத்தில்தான் வாழ்வின் வசந்தம் மலரும். இந்தப் பண்புகள் இல்லையென்றால் வாழ்க்கை ஒரு பாலைவனம் போல் சுட்டெரிக்கும்.அங்கெ மலர்களோ மரங்களோ ஆறுகளோ,பாடும் பறவைகளோ இருக்காது.

அன்பு, பெறுபவரைக்காட்டிலும் கொடுப்பவருக்கே அதிக மகிழ்வைத்தரும் சொத்தாகும். நம்மிடமே இருந்தும் நாம் அறியாமல் இருக்கும் சொத்து.காலமெனும் பாதையில் அன்பின் காலடிச்சுவடுகள் என்றென்றும் அழியாமல் பதிந்திருக்கும். அது மிகவும் பலம் வாய்ந்த எதிரியையும் வெற்றிகொள்ள வல்ல ஆயுதமாகும். அது அருவமான இறைவனைக்கூட பிணைத்திடும் கயிறாகும். அன்பு மட்டுமே மாயையின் பிடியிலிருந்து நம்மை காப்பாற்றக்கூடிய மந்திரம். அன்பு ஒன்று மட்டுமே அனைத்து நாடுகளிலும் செல்லுபடியாகும் நாணயம்.

அன்பு என்பது சட்டைப் பையில் ஒளித்து வைக்கக்கூடியதல்ல.நம் செயல்களின் மூலம் அதை ஒளிரச் செய்யவேண்டும். நாம் அன்புமயமாக மாறும்பொழுது, நமது புலன்கள் அனைத்தும் அன்பின் பாலங்களாக மாறுகின்றன. எவரது கர்வத்தாலும் வெல்ல முடியாததாக அன்பு ஒன்று மட்டுமே உள்ளது. அது துன்பத்தைத் தீர்க்கக்கூடிய அருமருந்தாகும். அது தனிமையின் ஊன்றுகோலுமாகும்.
நம் வாழ்வின் அனைத்து வெற்றிகளுக்கும் சரியான அளவுகோலும் அன்பு ஒன்று மட்டுமேயாகும்.

-அம்மாவின் 63 ஆம் அவதாரத்திருநாள் அருளுரையிலிருந்து